தமிழ்நாட்டின் 35 ஆவது மாவட்டமாக வேலூரில் இருந்த பிரிந்த சிறிய மாவட்டமான திருப்பத்தூர் பல அழகிய சிறு சிறு சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது. ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைகள், மிதமான வானிலை, அழகிய சுற்றுலாத் தலங்கள் என திருப்பத்தூர் நம்மை வரவேற்கிறது. இந்த ஊருக்கு சென்றால் நீங்கள் எந்தெந்த இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும், எதனால் இங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்வோமா!

ஏலகிரி
திருப்பத்தூரி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலமான ஏலகிரி ஆண்டு முழுவதும் இதமான வானிலையை வழங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஏலகிரியில் ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் செயல்படும் மிகவும் பேமஸ். அது மட்டுமின்றி ஏலகிரி ஏரியில் போட்டிங் செய்துவிட்டு, இயற்கை பூங்கா, அட்வென்ச்சர் பார்க், முருகன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் ஆகியவற்றையும் நீங்கள் பார்வையிட வேண்டும். இந்த இடம் சாகச சுற்றுலாப் பயணிகள், இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும்.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
பிரமிக்க வைக்கும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி ஏலகிரி மலையின் பள்ளத்தாக்குகள் வழியாக ஓடும் அட்டாறு நதியில் உருவாக்கப்பட்டு, 15 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. இந்த அருவி மலையில் உள்ள பல்வேறு மூலிகை செடிகளை கடந்து செல்வதால் இந்த அருவியில் குளித்தால் நோய்கள் குணமாகும் என நம்பப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு மலையேற்ற பாதை மற்றும் மோட்டார் சாலையையும் கொண்டுள்ளது. ஆகவே நீங்கள் ட்ரெக்கிங் செய்து வந்தும் இங்கு குளிக்கலாம். முக்கியமாக அருவியில் குளித்த பின்னர், அருவிக்கு அருகே சிவலிங்க வடிவில் இருக்கும் சக்தி வாய்ந்த முருகன் கோவிலுக்கும் சென்று வாருங்கள்.

வைன்னு பாப்பு அப்சர்வட்டரி
ஏலகிரிக்கு அருகிலுள்ள காவலூரில் அமைந்துள்ள வைன்னு பாப்பு ஆய்வுக்கூடம் 1970களில் துவங்கப்பட்ட இந்த ஆய்வுக்கூடம், இந்திய வானியற்பியல் கழகத்திற்கு சொந்தமானது. இந்தியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கி தொடங்கி பல தொலைநோக்கிகள், புவியின் தெர்மோஸ்பியரில் இருந்து வெளிவரும் காற்றுப் பளபளப்பை ஆய்வு செய்ய ஒரு ஃபேப்ரி-பெரோட் இன்டர்ஃபெரோமீட்டர் என இங்கே நாம் வானியல் தொடர்பான பல விஷயங்களை அறிந்துக் கொள்ளலாம். சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.

சுவாமிமலை
ஏலகிரி மலைத்தொடரின் உச்சியில் ஒரு கேக் வடிவத்தில் அமைந்திருக்கும் சுவாமிமலை மலையேறுபவர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்பாட்டாகும். புங்கனூர் ஏரியிலிருந்து 3.5 கி.மீ. தூரத்திற்கு ட்ரெக்கிங் செய்து சுவாமிமலை உச்சியை அடைய வேண்டும். அங்கிருந்து கீழே பார்க்கும் போது உங்களுக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டாகுமே அதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மலையேற்றம் முழுவதும் கடைகள் இல்லாததால் தண்ணீர் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நிலாவூர் ஏரி
இந்த ஏரி உண்மையில் பிஸியான வாழ்க்கையின் தொந்தரவுகளிலிருந்து விலகி ஆழ்ந்த அமைதியில் ஓய்வெடுக்க ஒரு அமைதியான மற்றும் அமைதியான இடமாகும். ஏரிக்கரையில் சிறிது தூரம் நடந்து சென்று படகு சவாரி செய்து மகிழலாம். இந்த ஏரி பெடல் மற்றும் மோட்டார் படகு சவாரிகளை வழங்குகிறது.

கோவிந்தபுரம் அருவி
திருப்பத்தூரிலிருந்து 26 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த அங்குத்தி சுனை (எ) கோவிந்தபுரம் அருவி ஆர்பரித்து கொட்டுங்கின்ற சிறு சிறு ஊற்றுகள், ஆழமற்ற நீச்சல் குளங்கள், இனிமையான வானிலை என இந்த இடமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இங்கு இயற்கையாகவே பாறைகளுக்கு நடுவே ஊற்றெடுக்கும் சுனைகள் தான் ஹைலைட். அதை ஒட்டி பால் போல் பொங்கி வருகின்ற நீர்வீழ்ச்சிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. வழுக்கின்ற பாறையின் மீது அமர்ந்து வழுக்கிக்கொண்டே வந்து குளத்தில் விழுந்து குளிப்பது ஒரு அலாதி இன்பத்தை தருகிறது.
இதமான வானிலை வழங்கும் சந்தன நகரம் - திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றியுள்ள வேலூர், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தாலும் கூட திருப்பத்தூரில் வெயில் அதிகமாக இல்லாமல் எப்போதும் மிதமாகவே காணப்படுகிறது. அதற்கு காரணம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரி மலைகளும், ஜவ்வாது மலைகளும் தாம். இந்த ஜவ்வாது மலைகளில் சந்தன மரங்கள் மிகுதியாக காணப்படுவதால் திருப்பத்தூர் சந்தன நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்
திருப்பத்தூர் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுடன் ரயில் மற்றும் பேருந்து சேவையில் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே ரயில் மூலம் வருபவர்கள் ஜோலார்பேட்டை சந்திப்பில் இறங்கி அங்கிருந்து திருப்பத்தூரை அணுகலாம். இந்த இடம் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்வதற்கு ஏற்ற இடமாகும். நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





