திருமணம் ஆகாமல் தடை இருக்கிறதா, பொருத்தம் சரி இல்லையா பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லையா இப்படி எல்லாம் பல பிரச்சனைகள் தாண்டி மக்கள் தங்கள் பெண்ணுக்கும், மகனுக்கும் திருமணம் முடித்து வைப்பதற்குள் படாதபாடு பட்டுவிடு கிறார்கள். ஆனால் திருநாகேஸ்வரம் எனும் பகுதியில் இருக்கும் இரு கோவில்களுக்கு சென்று வழிபட்டால் ஓரிரு மாதத்தில் உறுதியாக திருமணம் நடக்குமாம். இங்கு பலர் ராகுவுக்கான தோஷம் கழிக்க வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
நம் பாவத்துக்கான சம்பளமாக தோஷங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இந்த சமயத்தில் ராகு கேது மற்ற பிற தோஷங்களை கழித்தால்தான் திருமணம் உட்பட சுப காரியங்கள் கைக்கூடும் என பலர் இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கோவில்களுக்கு செல்லும் பயனுள்ள வழிகாட்டியைத் தருகிறோம். முழுமையாக படியுங்கள்.

ராகு தலம்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கான தலம் இதுவாகும்.

வளமான ஊர்
திருநாகேஸ்வரம் வளமான வயல்களை கொண்ட ஊராகும். இங்கு, நெல்லும், கரும்பும் சோளமும் முக்கிய விளைபொருள்களாகும். மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்த ஊர் இது. நீங்கள் கோவிலுக்கு செல்லும்போது இந்த ஊரையும் சுற்றி அமைதியைத் தேடுங்கள்.

திருமணத்தை நடத்தி வைக்கும் பெருமாளும் சிவனும்
திருநாகேஸ்வரத்தை சுற்றி இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. ஒன்று, சிவன் கோவிலான நாகநாத சுவாமி ஆலயம், மற்றொன்று பெருமாள் கோவிலான ஒப்பிலியப்பன் ஆலயம். இந்த இரண்டு கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கி விரைவில் டும் டும் டும் தான்.

சிவனுக்கு நிகராக ராகு
நாகநாதசுவாமி ஆலயத்தில் சிவபெருமான் நாகநாதசுவாமி என்ற பெயரில் தனது தேவியான பார்வதியுடன் வீற்றிருக்கிறார். ராகுவின் சிலை இங்கு மனித உருவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராகுவை வந்து வழிபட்டு சென்றால் தோஷங்கள் நீங்கி விடும் என்பது நம்பிக் கை.

பரிகார பூசை
ராகு கிரகத்தின் இயக்கத்தினால் ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் பாதிக்கப்பட்டு பிரச்சனைகள் உண்டாகலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மனிதனின் பிரச்சனைகளுக்கும் காரணம் ராகு தான் என்று நம்பப்படுகிறது. அதனால் ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்

நலம் பெற உதவும் நற்கோவில்
தினமும் ராகுகாலத்தில் செய்யப்படும்பாலாபிஷேகம் இங்கு மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும். இக்கோவிலுக்கு வந்து ராகுவுக்கு பரிகார பூசைகள் செய்து நலம் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.

ராமநவமியில் கலந்து கொண்டால் கல்யாணராமன் அருள் பெறலாம்
சுற்றுலாப்பயணிகளும் ஆன்மீக யாத்திரீகர்களும் ஆண்டுதோறும் வருகைபுரியும் ஆலயம் ஒப்பிலியப்பன் ஆலயம் ஆகும். இக்கோவிலில் ராமநவமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

திருக்கல்யாணம் காண்க
ராமநவமி திருவிழாவின் கடைசி நாளில் கனகாபிஷேகமும் திருக்கல்யாணமும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெறுகிறார்கள்.

திருநாகேஸ்வரத்தை சுற்றியுள்ள நவக்கிரக ஆலயங்கள்
ஒன்பது நவக்கிரக தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரத்தை சுற்றிலும் மீதமுள்ள எட்டு நவக்கிரகத்தலங்களும் அமைந்துள்ளன.
திருநள்ளாறு( சனிபகவான்),
கஞ்சனூர்( சுக்கிரன்),
சூரியனார் கோவில்( சூரியன்),
திருவெண்காடு(புதன்),
திங்களூர்( சந்திரன்),
கீழப்பெரும்பள்ளம்( கேது),
ஆலங்குடி( குருபகவான்),
வைத்தீஸ்வரன்கோவில்(செவ்வாய்) ஆகிய ஊர்கள் திருநாகேஸ்வரத்திலிருந்து வெகு அருகாமையிலேயே அமையப்பெற்றிருக்கின்றன.

ரயில் மற்றும் பேருந்து வசதிகள்
திருநாகேஸ்வரத்திற்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையம் கும்பகோணம் இரயில் நிலையமாகும். திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும். கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் செல்வதற்கு சிறப்பான பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

நாகநாத சுவாமி திருக்கோவில்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்பது நவக்கிரககோவில்களில் திருநாகேஸ்வரம் கோவிலும் ஒன்றாகும். கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோவில் உள்ளது. சிவபெருமான் நாகநாதசுவாமி என்னும் பெயருடன் குஜாம்பிகா என்னும் பெயருடன் கூடிய தனது பார்வதிதேவியுடன் இங்கு அருள்பாலிக்கிறார். கூடவே லட்சுமிதேவியும் , சரஸ்வதி தேவியும் இங்கு உறைகின்றனர். அவர்களுக்கும் இங்கு கோவில்கள் உண்டு. நாகக்கன்னி மற்றும் நாகவல்லி என்னும் இரு தேவியருடன் காட்சி அளிக்கும் ராகு பகவானையும் இங்கு தரிசிக்கலாம்.

ஒப்பிலியப்பன் திருக்கோவில்
திருநாகேஸ்வரத்திலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் கோவில். பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்றாகும். பூமாதேவி அவதரித்த தலம் இதுவாகும். இங்கு வழிபடும் முதன்மை கடவுள் மகாவிஷ்ணு ஆவார். மகாவிஷ்ணு இங்கு ஒப்பிலியப்பன் என்னுப் பெயரில் வணங்கப்படுகிறார். அவர் இங்கு தனது தேவியான பூமாதேவியுடன் காட்சி அளிக்கிறார். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதாகும்.
திருநாகேஸ்வரம் பற்றிய மேலும் விவரங்களுக்கு இதை சொடுக்கவும்
திருநாகேஸ்வரம் புகைப்படங்களுக்கு
திருநாகேஸ்வரம் எப்போது செல்லலாம் என்பது குறித்த தகவல்களுக்கு
திருநாகேஸ்வரத்தை அடைவது எப்படி என்பது குறித்த தெளிவான தகவல்களுக்கு



Click it and Unblock the Notifications




