சென்னையில் வசிப்பவரா நீங்கள்? புத்தாண்டு முடிந்து விட்டது, அடுத்தது பொங்கல் பண்டிகை வருகின்றனது. அதிக செலவு செய்யாமல் சிக்கனமான ஆனால் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய ஸ்பாட்டுக்கு சென்று வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறதா? அப்படியானால் நீங்கள் புலிகாட் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிக்னிக் செல்லலாம். உலகப்புகழ் பெற்ற பிளமிங்கோ திருவிழா தற்போது தான் நடந்து முடிந்திருக்கிறது மக்களே. இந்த நேரத்தில் இங்கு சென்றால் வண்ணமயமான பறவைகளை, இனிமையான காலநிலையுடன், இயற்கை சூழலை ரசிக்கலாம்! நீங்கள் ஏன் கட்டாயம் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை கீழே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

அனைத்து தரப்பினரும் செல்ல வேண்டிய இடம்
உலகெங்கிலும் உள்ள சிறந்த புலம்பெயர்ந்த பறவைகளை ஒரே இடத்தில் காண விரும்புகிறீர்களா? குழந்தைகள் நீண்ட காலமாக எங்காவது அழைத்து செல்லும்படி கேட்டுக் கொண்டே இருக்கிறார்களா? நண்பர்களுடன் ஜாலியாக ஒரு லாங் டிரைவ் செய்து சற்று நேரம் கழித்தால் புத்துணர்ச்சியாக இருக்குமே என்று யோசிக்கிறீர்களா? அல்லது எனக்கென ஒரு தனிமை வேண்டும், ஏன் உயிருக்கும் உடலுக்கும் அமைதி வேண்டும் என நினைக்குறீர்களா? இந்த எல்லா வகையான கேள்விக்கும் நீங்கள் செல்ல வேண்டிய இடம் இது தான் புலிகட் ஏரி தான்!

பலவகையான பறவைகளைக் காண சரியான ஸ்பாட்
குளிர்காலத்தின் உச்சக்கட்ட மாதங்களில் இந்தியாவிற்கு குளிர் பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இந்தியாவின் வெப்பமண்டல காலநிலையானது, இந்த மாதங்களில், கடற்கரைகள் மற்றும் வனப்பகுதிகளில் இனப்பெருக்கம், உணவு மற்றும் கூடு கட்டுவதற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இதனால் ஒரே இடத்தில் நீங்கள் பலவகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகளைக் கண்டு களிக்க முடியும்.

ஆண்டு தோறும் நடைபெறும் ஃபிளமிங்கோ திருவிழா
புலிகாட் ஏரி, நெலப்பட்டு பறவைகள் சரணாலயம், சூலூர்பேட்டை, அடிக்கனிதிப்பா மற்றும் பி.வி.பாலம் போன்ற பல இடங்களில் ஆண்டு தோறும் ஃபிளமிங்கோ திருவிழா நடத்தப்படுகிறது. அதே போல இந்த ஆண்டும் ஜனவரி 3 முதல் ஜனவரி 5 வரை ஃபிளமிங்கோ திருவிழா வெகு விமர்சியாக நடத்தப்பட்டது. சைபீரியா மற்றும் பிற இமயமலை மலைப்பகுதிகளில் இருந்து பறந்து வந்த இந்தப் பறவைகளைக் காண இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இந்த இடங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சென்னையிலிருந்து பிக்னிக் செல்ல ஏற்ற இடம்
இந்த ஏரியில் ஃபிளமிங்கோக்கள் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் அதே வேளையில், பெலிகன்கள், நாரைகள் மற்றும் பிற வேடர்கள் போன்ற பிற பறவைகளையும் நீங்கள் கண்டு களிக்கலாம். அழகிய ஏரிக்கு நடுவே பற்பல வண்ண வண்ண பறவைகள், சுற்றிலும் மரங்கள், சதுப்பு நிலங்கள், எங்கு பார்த்தாலும் பசுமை என இந்த இடம் மனதிற்கு ஒரு இனிமையைக் கொடுக்கிறது. நீங்கள் சென்னையில் இருந்தால் இந்த வாரமே இங்கு சென்று வாருங்கள் மக்களே!

எப்படி செல்வது?
சென்னையிலிருந்து புலிகட் ஏரி 50 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து புலிகட் ஏரிக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. ஆனால் நீங்கள் கும்மிடிப்பூண்டிக்கு ரயிலில் சென்று அங்கிருந்து ஏரியை அடையலாம். அல்லது எண்ணூருக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து ரயிலில் கவரைப்பேட்டைக்கு சென்று ஏரியை அடையலாம். அதற்கும் மேலாக, பைக் அல்லது காரில் லாங் டிரைவ் செய்தால் இன்னும் ஜாலியாக இருக்கும் மக்களே! SH104 வழியாக கிராண்ட் நார்தர்ன் டிரங்க் ரோடு வழியாக புலிகட் ஏரியை அடையலாம். எது எப்படியோ இந்த வார இறுதியில் இந்த இடத்திற்கு சென்று பிளமிங்கோக்களை கண்டு மகிழ மறக்காதீர்கள்!



Click it and Unblock the Notifications






