உடல், மன ரீதியாகவும் நமக்கு பெரிதும் உதவும் ஒரு கருவியாக பயணங்கள் இருக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. புதிதாக ஓர் இடத்துக்கு, நீங்கள் பயணம் செய்வது வெறும் பொழுது போக்காக மட்டுமே இருக்க முடியும் என, நினைத்து நீங்கள் செல்கிறீர்கள் என்றால், அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றி விடுங்கள்.

இப்ப என்ன சொல்ல வரபோறீங்க...! நமக்கு பிடித்தமான நபருடன் அல்லது தனியாக அல்லது குடும்பத்துடன் அல்லது நட்புகள் என, பயணங்கள் திட்டமிடப்படுகின்றன. இந்த பயணகளின்போது, நீங்கள் செல்லும் அந்த புதிய நிலப்பரப்பை புகைப்படம் எடுக்கிறீர்கள். அதுமட்டுமின்றி, மலைகள் ஊடே வருடி வரும் காற்று, அங்குள்ள மண் மற்றும் பச்சை பசேல் இருக்கும் தாவரங்களையும் தழுவி, உங்களை தொட்டு விட்டுச் செல்லும் இன்பம் அலாதியானது.
அப்படி ஒரு இடத்துக்கு செல்ல திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால், எப்படி செல்ல விரும்புவீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். ஆனால் நான் என் ஊரான நெல்லையில் இருந்து பெங்களூர் செல்ல, ரயில், சாலை என இரண்டில் எதை தேர்வு செய்தாலும், அது அலாதி தான்.

என்னை பொறுத்தவரை சாலை மார்க்கமாக, இரு சக்கர வாகனம் அல்லது காரில் செல்லும் போது, கசகசாவை விட சிறிய துாரல், உடலில் உஷ்ணம் தெரியாத அளவுக்கு வானத்தின் மேகமூட்டம், ரோமங்கள் கூச்செறியும் வகையிலான சில்லென்ற காற்று, அதன் ஊடே மிதமான வேகத்தில் செல்லும் நாம் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பயணம் வாழ்வில் மறக்கமுடியாததாக இருக்கும்.
ஆரோக்கியம், புத்துணர்வு, புத்தியை கூர்மைப்படுத்துதல், படைப்பாற்றல் திறன், உற்பத்தி திறனை அதிகரிப்பது, ஆளுமையை மேம்படுத்துவது என, பயணங்களால் நாம் பெறக்கூடிய நன்மைகள் எண்ணிலடங்கா...!

நாம் டூவீலரில் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்... நெல்லையில் இருந்து சுமார் 45 நிமிடத்தில் வாய்ப்பு இல்லை தான்... இருந்தாலும் நெரிசல் இல்லாத சாலையில் இது சாத்தியமே... கோவில்பட்டி என்ற ஊரை நெருங்கியது... கொஞ்சம் ரிலாக்ஸ்... அவ்வூரின் சிறப்பு உணவான கடலைமிட்டாய், நீட்டு காராச்சோவ் ஆகிய பதார்த்தங்கள் நாவை நனைத்ததும் புறப்பட்டு, மதுரை சென்றதும் அவ்வூரில் கிடைக்கும் மனம் மணக்கும் மதுரை மல்லி...
ஹலோ பயணம் தானே போறோம். ஏதோ வேற எங்கோ போற மாதிரி மல்லிப்பூ வாங்க சொல்லுகிறீங்க... மல்லிப்பூவை வாங்கினா உடனே வேற எண்ணம் தான் தோன்றுமா? உங்களுக்கு... அந்த பூவை வாங்கி உங்கள் வண்டி முன் வைத்து விட்டு போங்க... குளிர் நீரில் நனைந்து இருக்கும் மல்லியின் இதழின் மீது பட்டு, உங்கள் நாசியை நெருங்கும் நறுமணத்தை சத்தியமாக சொல்லுகிறேன் நீங்க அதை வார்த்தைகளால் எடுத்துரைக்க முடியாது. நீங்கள் கவிஞர் என்றால் வார்த்தைகளால் அந்த நறுமணம் தரும் சுகத்தை வர்ணிக்கலாம். நான் கவிஞர் இல்லை என்பதால், மொக்கை வார்த்தைகளை ஆங்காங்கே துாவிவிட்டு இந்த கட்டுரையை தருகிறேன்.
சரி மதுரையில் இருந்து புறப்பட்டு கரூரில் இரவு தங்கிவிட்டு, காலையில் அங்கிருந்து சுமார் 1.5 மணி நேர பயணத்துக்கு பின் ஏற்காடு சென்று விடலாம். இனி தான் இயற்கை விரித்திருக்கும் சிறகையின் ஊடே போகும் அழகை நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்.
ஹலோ என்ன இந்த ஊரில் உள்ள சிறப்பு, சுவை மிகுந்த உணவுகளை கூற மாட்டிங்களா? ஏங்க நான் சாலை, ரயில் என இதில் எதை தேர்வு செய்து பயணம் செய்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து சொல்லிட்டு வந்தா... நீங்கள் என்னை ஊர் ஊராக போகும் போது அங்க உள்ள சிறந்த, சுவையான சாப்பாடு குறித்து கேட்கீங்க... போங்க பாஸ்
சரியாக 350 கி.மீட்டர் தொலைவை, நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதை பொறுத்தே, உங்கள் பயணம் உங்களுக்கு வேறு மாதிரியான அனுபவத்தை தவறாமல் வழங்கும் என்பதே என் தீர்க்கமான கூற்று.

சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளும் நீங்கள், உங்களையும், சாலையில் செல்பவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டாக வேண்டும். இல்லையெனில் பயணம் ஒரு வித ஆறாத வடுவை உங்களுக்குள் விட்டுச் செல்லும் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இதே 350 கி.மீட்டர் தொலைவை, சிறு வயதில் ரயிலில் செல்லும் போது ட்க் டக் கூச்சு கூச்சு என இரைச்சலோடு, கரி துகள்களை கண்ணுக்குள் விட்டுச் செல்லும் ரயில்களை கண்ட காலம் இப்போது இல்லை...
பயணங்கள் என்றாலே அலாதி தான். அதை அனுபவிக்க எதில் சென்றால் என்ன... பயணங்கள் முடிவதில்லை... நீளூம்.
திருநெல்வேலி உண்மைகள்:
- திருநெல்வேலிக்கு நெல்லை என்றும் பெயர்.
- ஆங்கிலேயர் ஆட்சியின் போது அதன் பெயர் தின்னவெல்லி.
- இது ஒரு பழமையான நகரம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
- திருநெல்வேலி சென்னையிலிருந்து 624 கி.மீ.
- இது தூத்துக்குடியில் இருந்து 58 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 73 கி.மீ தொலைவிலும் உள்ளது.
- திருநெல்வேலியின் பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது.
- இங்கு ஆட்சி செய்த ராஜ்யங்களின் பட்டியல்: பாண்டியர்கள், சேரர்கள், இடைக்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் ஆங்கிலேயர்கள்.



Click it and Unblock the Notifications






