இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. குமாவூங் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்நகரம் அற்புதமான ஏரிகளை வாய்க்கப்பெற்றிருக்கிறது. மும்முனிவர் தீர்த்தம் என்று ஸ்கந்த புராணத்தில் இந்த நைனித்தால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மும்முனிவர் என்பது ஆதி ரிஷிகளாகிய அத்ரி, புலஸ்த்யா மற்றும் புலஹா ஆகிய மூவரை குறிப்பிடுகிறது. தங்களது யாத்திரையின் இந்த மூன்று ரிஷிகளும் தாக சாந்தி செய்து கொள்ள நைனித்தால் பகுதியில் தங்கியதாகவும், இங்கு ஒரு குழியை தோண்டி தங்களுடன் எடுத்து வந்த மானஸரோவர் தீர்த்தத்தை அதில் நிரப்பியதாகவும் அதுவே பின்னர் நைனித்தால் ஏரியாக மாறியது என்பதாகவும் தொன்நம்பிக்கைக்கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நம்பிக்கையை ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு நைனித்தாலில் நாம் கட்டாயம் செய்யவேண்டிய 10 அற்புதங்களைப் பற்றிக் காணலாம்,.
படகில் பயணம் செய்து ஏரியை ரசிப்பது
இங்கு ஸரியா தால், குர்பதால், நைனா ஏரி முதலியன புகழ்பெற்றவையாக விளங்குகிறது.
நைனா லேக் எனும் இந்த ஏரி நைனித்தால் சுற்றுலாத்தலத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த ஏரியில் சுற்றுலாப்பயணிகள் சொகுசுப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம். குர்பதால் எனும் இடம் தூண்டில் மீன் பிடிப்பு பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடமாகும். இது நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அழகிய கிராமமானது கடல் மட்டத்திலிருந்து 1635மீ உயரத்தில் அமைந்துள்ளது. இனிமையான பருவநிலை மற்றும் மனம் மயக்கும் ஏரி ஆகியவற்றுக்காக இந்த கிராமம் புகழ்பெற்றுள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்கிலும் பயணிகள் ஈடுபடலாம். இரும்புப்பொருட்கள் தயாரிப்பிற்காக ஒரு காலத்தில் பிரசித்தமாக அறியப்பட்ட குர்பதால் இன்று பசுமையான காய்கறிப்பண்ணைகளுக்கு பெயர் பெற்று அறியப்படுகிறது.
ஸரியா தால் எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு ஒரு சிறிய ஏரி மற்றும் ஒரு நீரூற்று ஆகியவை உள்ளன.
Gaganbindoria2002
டிபன் டாப்பிலிருந்து இமய மலையை புகைப்படம் எடுப்பது
டிஃபன் டாப் எனப்படும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் டோரதி சீட் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது ஆர்யபட்டா சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 7520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பயணிகள் இமயமலைத்தொடர்களின் அழகு மற்றும் கரடுமுரடான பள்ளத்தாக்கு சரிவுகள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். டோரதி கெல்லட் எனும் ஆங்கிலேய ஓவியர் ஒரு விமான விபத்தில் இறந்தபின் அவரது கணவரால் இந்த இடம் ஒரு ஞாபகார்த்த ஸ்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது. நைனித்தால் நகரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த இடம் இயற்கை அழகுக்கான புகைப்படங்கள் எடுப்பதற்கு மிக ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரத்திலிருந்து பயணிகள் மலையேற்றம் செய்து இந்த இடத்தை வந்தடையலாம்.
Unknown
திபெத்தியர்களின் சந்தையில் உலாவுவது
நைனித்தால் பகுதியில் சந்தடி நிறைந்த ஷாப்பிங் கேந்திரம் இந்த திபெத்தியன் மார்க்கெட் ஆகும். இங்கு எல்லாவிதமான பொருட்களும் விற்கப்படுகின்றன. கழுத்து துண்டுகள்,சால்வைகள், வுல்லன் துணிகள், ஹிமாலயன் பைகள், நாட்டுப்புற நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்றவை இங்கு மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு விற்கப்படும் பொருட்களை பேரம் பேசி வாங்குவது சிறந்தது.
Mohit
அனுமன் கார்கியில் சூரிய மறைவை ரசிப்பது
ஹனுமான்கர்ஹி எனும் இந்த கோயில் நைனித்தால் நகரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த புகழ் பெற்ற ஹனுமான் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1951மீ உயரத்தில் வீற்றிருக்கிறது. நீம் கரௌலி பாபா என்பவரால் 1950ம் ஆண்டு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஷீதளா தேவி கோயில் மற்றும் லீலா சஹ் பாபு ஆசிரம் ஆகிய இதர ஆன்மீக அம்சங்களும் இந்த மலைக்கோயிலின் மறு புறம் அமைந்துள்ளன.
இங்கிருந்து சூரிய மறைவை ரசிப்பது என்பது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நிகழ்வாகும். இங்கு சூரிய மறைவைக் காண மாலை வேளைகளில் நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர்.
Aakan2304
ரோப்காரில் நகரத்தை ரசிப்பது
ஆகாய மார்க்கமாக அந்தரத்தில் தொங்கும் கயறுகளில் இயக்கப்படும் இவ்வகை தொங்கு ஊர்தி சேவை இந்தியாவிலேயே இங்குதான் முதன் முதலாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தரையிலிருந்து 300 மீ உயரத்தில் 705 மீ தூரத்தை கடக்கும் விதத்தில் இந்த கயிற்றுக்கார் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கயிற்று கார் வாகனத்திலும் 12 பேர் (825 கிலோ) பயணிக்க முடியும். இந்த கயிற்றுக்கார் போக்குவரத்து சேவை ஸ்னோ வியூ சுற்றுலாத்தலம் மற்றும் நைனித்தால் நகரை இணைக்கிறது. ஒரு நொடிக்கு 6 மீ வேகத்தில் நகரும் இந்த கயிற்றுக்கார்களில் பயணித்தபடி சுற்றிலும் காணக்கிடைக்கும் மலை எழிற்காட்சிகளையும் கண்களால் அள்ளிப்பருக முடிவது ஒரு கூடுதல் விசேஷம்.
Unknown
மால் சாலையில் மெழுகுவர்த்தி வகைகளை ரசிப்பது வாங்குவது
நைனித்தால் நகரத்தின் மிக முக்கியமான சாலையே ‘தி மால்' என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் இந்த சாலைக்கும் கோவிந்த் பல்லப் பந்த் மார்க் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஏராளமான கடைகள், வங்கிகள், சுற்றுலா நிறுவனங்கள் ஆகியவை இந்த சாலையில் அமைந்துள்ளன. நைனி ஏரியின் இரண்டு முனைகளான மல்லித்தால் மற்றும் தல்லித்தால் பகுதிகளை இந்த சாலை இணைக்கிறது. மற்றொரு முக்கிய சுற்றுலா அம்சமான தண்டி சதக் எனும் இடமும் நைனி ஏரியில் மறு புறத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கிடைக்கும் மெழுகுவர்த்திகள் உலகப் பிரசித்தி பெற்றவை. அழகான வடிவங்களில் வெவ்வேறு உருவங்களில் கிடைக்கின்றன.
Sanjoy
நைனா தேவிக்கு செல்வது
நைனா தேவி கோயில் இந்தியாவிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது நைனி ஏரியின் வடமுனையில் அமைந்துள்ளது. நைனா தேவி எனும் தெய்வத்துக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நைனா தேவியுடன் சிலையுடன் கணேஷா மற்றும் காளிதேவி ஆகியோரின் சிலைகளும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு பெரிய பீபுல் மரமும் கோயில் வாசலில் காணப்படுகிறது.
Unknown
பாங்காட் கில்புரி பறவைகள் சரணாலயம் செல்வது
கில்பரி ஸ்தலத்தில் 580 வகையான பறவை இனங்கள் வசிக்கின்றன என்பதால் இவற்றையும் பயணிகள் ரசித்து மகிழலாம். பிரவுன் வுட் ஆந்தை, காலர்ட் க்ராஸ்பீக் பறவை மற்றும் சிரிக்கும் குயில் போன்ற அபூர்வ பறவைகளை இப்பகுதியில் பயணிகள் காணலாம். மேலும் இங்குள்ள ஒரு காட்டு பங்களாவில் ஓய்வெடுக்கவும் வசதி உள்ளது.
பாங்காட் கிராமப்பகுதியில் 150 வகையான பறவையினங்கள் வசிப்பதால் இது பறவை ரசிகர்களுக்கு பிடித்த இடமாக திகழ்கிறது. கிரிஃப்பான், நீலச்சிறகு மின்லா பறவைகள், அரிய வகை மரங்கொத்திகள், ஃபோர்டெயில் பறவைகள், லாமெர்கெயர் பறவைகள் மற்றும் கலீஜ் காக்கைகள் போன்றவற்றை இங்கு காணலாம்.
gkrishna6
ராஜ்பவனில் ஒரு சுற்றுலா
ராஜ் பவன் எனப்படும் இந்த கவர்னர் மாளிகை காலனிய காலத்தை சேர்ந்த ஒரு பழமையான கட்டிடமாகும். இது உத்தரகண்ட் மாநில கவர்னரின் அதிகாரபூர்வ இருப்பிடமாக தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதில் நன்கு அலங்கரிக்கப்பட்ட 113 அறைகள், ஒரு அழகிய பூங்காத்தோட்டம், நீச்சல் குளம் மற்றும் கோல்ப் மைதான வெளி ஆகியவை அடங்கியுள்ளன. பக்கிங்காம் அரண்மனைக்கு ஈடாக கருதப்படும் இந்த மாளிகையை பார்ப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
nainital.nic.in
விலங்கியல் காட்சிச்சாலை
நைனித்தால் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த ‘ஜூ' எனப்படும் விலங்கியல் காட்சிச்சாலையும் ஒன்று. இது கடல் மட்டத்திலிருந்து 2100 மீ உயரத்தில் நைனித்தால் நகர பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இந்த விலங்கியல் காட்சிச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஹிமாலயன் கருங்கரடிகள், குரங்குகள், சைபீரியன் புலிகள், சிறுத்தைகள், ஓநாய்கள், தேவாங்கு, காட்டுக்கிளிகள், வெள்ளைக்காக்கைகள், மலை நரிகள், கோரல், சம்பார் மான்கள் மற்றும் குரைக்கும் மான்கள் ஆகியவற்றை பயணிகள் பார்க்கலாம். திங்கள் கிழமை மற்றும் தேசிய அரசு விடுமுறை நாட்களில் இது மூடப்பட்டிருக்கும்.
Varanya Prakash