ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்கி புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப் பட்டிருக்கும் நகரமாக இருந்த போதிலும் 13ம் நூற்றாண்டு மற்றும் 14 ம் நூற்றாண்டுகளில் இது விஜய நகர அரசர்களின் தலைநகரமாக சிறந்து விளங்கியது.
கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பெங்களூரிலிருந்து 350 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஹம்பியை சில மணி நேர பயணத்தில் அடைந்திடலாம். யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்தலம் வருடம் தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கின்றது. ஹம்பி இடுபாடுகளின் உன்னதத்தை முழுக்க ரசிக்க விரும்பினால் ஒரு வாடகை சைக்கிளில் ஓய்வாக ஹம்பியை சுற்றி வந்து பார்த்து ரசிக்கலாம். அதற்கு வசதியாக சைக்கிள்களும் மொபெட்களும் வாடகைக்கு கிடைக்கின்றன. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிளில் சுற்றிப் பார்க்கும் அனுபவத்தினை விரும்புகின்றனர். போதும் போதும் எனும் அளவுக்கு நம் கண்களுக்கு திகட்டாத ஒரு விருந்தை ஹம்பியின் வரலாற்று இடிபாடுகள் அளிக்கின்றன.
தாமரை மாளிகை
ஜெனனா என்று அழைக்கப்படும் அரண்மனை அந்தப்புர வளாகத்தின் உள்ளே அதன் ஒரு அங்கமாக இந்த தாமரை மாளிகை அமைந்துள்ளது. இது இந்தோ இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் வெளிப்புற கூரைஅமைப்பும் இதன் ஒட்டு மொத்த வடிவமும் சேர்ந்து ஒரு தாமரை மலர் இதழ் விரித்திருப்பதை போன்று காணப்படுவதால் இதனை கமலா மாளிகை அல்லது தாமரை மாளிகை என்று அழைக்கின்றனர். சித்ராகனி மஹால் என்ற இன்னொரு பெயரும் இதற்கு உள்ளது. இரண்டு அடுக்குகளை கொண்ட இந்த மாளிகை மாடங்களுடன் கூடிய விதானக் கூரை அமைப்புடன் காணப்படுகிறது.
கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்க
அரண்மனை அந்தப்புரத்தில் வசித்த ராணிகள் ஒன்று கூடவும் மற்ற தோழிகளுடன் கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும் இந்த மாளிகை பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல போர்கள், முற்றுகைகளுக்கு பின்பும் இந்த மாளிகை சேதமடையாமல் நிற்பது ஒன்றே இதன் பெருமைக்கு சான்றாகும்.
இருப்பினும் தற்காலத்தில் சில விஷமிகளால் இந்த மாளிகையின் வெளிப்புற சிற்பங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதையும் காண முடிகிறது. கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கும் ஹம்பியிலுள்ள மற்ற கட்டிடங்களின் பாணிக்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்த தாமரை மாளிகை சுண்ணாம்பு, செங்கல் மற்றும் சாந்து (சுண்ணாம்பு) போன்றவற்றை கொண்டு கட்டப்பட்டுள்ளது.
யானைக்குழி
ஆனேகுண்டி என்ற கிராமம் ஹம்பியிலிருந்து 10 கி.மீ தொலைவில் துங்கபத்திரை நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அக்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் உள்ளூர் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. ஆனேகுண்டி எனும் பெயருக்கு கன்னடத்தில் யானைக்குழி என்பது பொருள். இந்த ஊர் ஹம்பியை விடவும் பழமை வாய்ந்த ஊர் என்பதற்கு புராண ஆதாரங்கள் உள்ளன. ராமாயண காவியத்தின் படி சுக்ரீவன் என்ற வானர அரசனால் ஆளப்பட்ட கிஷ்கிந்தா எனும் சாம்ராஜ்யமாக இது திகழ்ந்தது என்று நம்பப்படுகிறது.
அஞ்சநாத்ரி மலை
இங்கு ஹனுமான் பிறந்த இடமாக நம்பப்படும் அஞ்சநாத்ரி மலை உள்ளது. பயணிகள் இந்த ஆனேகுண்டி ஸ்தலத்தை பார்ப்பதற்கென்று முன்கூட்டி திட்டமிட்டுக் கொள்வது அவசியம். சந்தடி நிறைந்த ஹம்பி கடைத்தெருக்களை போல் அல்லாது இந்த ஆனேகுண்டி கிராமம் சலனமற்ற அமைதியான சூழலுடன் காட்சியளிக்கிறது.
துலா பாரம்
துலா பாரம் என்று அழைக்கப்படும் ராஜ தராசு விஜய விட்டல சுவாமி கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. விஜயநகர அரசர்கள் இந்த இடத்தில் இருக்கும் தராசின் மூலம் தங்கள் எடைக்கு சமமான தானியங்கள், தங்கம், வெள்ளி, வைடூர்யங்கள் மற்றும் இன்ன பிற விலை மதிப்பற்ற பொருட்களை அந்தணர்களுக்கு தானமாக வழங்கினர்.
ராணிகளின் புடைப்பு சிற்பங்கள்
இந்த தராசு அமைப்பில் 15 அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு தூண்களுக்கிடையே 12 அடிக்கு கல்லால் ஆன உத்தரம் போடப்பட்டுள்ளது. இந்த கல் உத்தரத்தின் அடிப்பகுதியில் மூன்று கொக்கி வளையங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இந்த இரண்டு பளிங்கு தூண்களில் ஒரு தூணில் மட்டும் அரசர் மற்றும் இரண்டு ராணிகளின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
Ssenthilkumaran
யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோவில்
ஹம்பியிலுள்ள மற்றுமொரு புனித ஸ்தலங்களில் ஒன்று இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோவில் ஆகும். ஹனுமான் என்றும் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படும் கடவுளுக்காக இந்த கோவில் எழுப்பப் பட்டுள்ளது. இந்த கோவில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும்.
ஹனுமானின் சிலை
தியானத்தில் உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமான சிலையும் இந்த கோயிலில் உள்ளது. இது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் எல்லா ஆலயங்களிலும் ஹனுமானின் சிலை சக்தியைக்காட்டும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளதே தவிர தியானத்தில் அமர்ந்துள்ளது போன்ற சிலை வேறெங்கும் இல்லை. இக்கோயிலின் வெளிச்சுவர்கள் எல்லா இந்து கோவில்களையும் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன
மடியில் லட்சுமி
ஆதியில் நரசிம்மர் சிலையின் மடியில் லட்சுமி தெய்வத்தின் சிலை இருந்ததாக சொல்லப்படுகிறது. 1565 ஆம் ஆண்டில் உடைக்கப்பட்ட இந்த லட்சுமி சிலை தற்சமயம் கமலாபுரம் மியூசியத்தில் உள்ளது. இருப்பினும் விரிந்த விழிகளுடனும், அவிழ்ந்த கூந்தலுடனும் காட்சியளிக்கும் இந்த மஹாவிஷ்ணுவின் சிலை பக்தர்களிடையே பிரசித்தம்.
பளிங்கு கல்
தென்னிந்திய சிற்பிகளின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சங்கம வம்ச சிற்பிகள் இந்த கோயிலை பளிங்கு கல்லால் கட்டியுள்ளனர். இருப்பினும் கருங்கல்லில் செதுக்குவது போன்று பளிங்கு கல்லில் நுட்பமான சிற்பச் செதுக்கல்களை செய்ய முடியாது என்பதால் அதற்குப்பதிலாக அவர்கள் பிரம்மாண்டமான வடிவங்களை உருவாக்கியுள்ளனர்.
யெதுரு பசவண்ணா
ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த யெதுரு பசவண்ணா எனும் நந்தி சிலை ஹம்பி பஜாரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. புராண ஐதீகங்களின்படி சிவ பெருமானின் வாகனமான நந்திக்கு எழுப்பப் பட்ட சிலை என்பதால் உள்ளூர் மொழியில் யெதுரு பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மாண்டமான பாறைகள்
சிலையின் பின்புலத்தில் காணப்படும் பிரம்மாண்டமான பாறைகள் இந்த சிலைக்கு மேலும் அழகூட்டுகின்றன. எதிரிலுள்ள விருபாக்ஷ ஆலயத்தை நோக்கி இருக்குமாறு இந்த நந்தி சிலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைக்கருகில் இரும்பு ஈட்டிகளுடன் கூடிய ஒரு விளக்கு தூண் ஒன்றும் உள்ளது.
அரண்மனை அந்தப்புர வளாகம்
ஹம்பியின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இந்த அரண்மனை அந்தப்புர வளாகம் விளங்குகிறது. தற்சமயம் இந்த அந்தப்புர வளாகத்தில் நான்கு முக்கிய கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ராணி மாளிகை, கமலா மஹால் (தாமரை மஹால்) மற்றும் இரண்டு காவல் கோபுர அமைப்புகளே அவை.
திருமங்கையர் மட்டுமே
அந்தப்புரத்தை காவல் காப்பதற்கென்று திருமங்கையர் மட்டுமே காவலாளிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். ராணிகளும், ராஜ குடும்ப பெண்களும் மற்ற அந்தப்புர மகளிரும் இந்த இரண்டு காவல் கோபுரங்களையும் வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், தாமரை மஹாலை கூடி சந்தித்து பேசி மகிழ்வதற்கு பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது.
அஞ்சநாத்ரி மலை
ராமாயாண புராணத்தின் படி பார்த்தால் இந்த அஞ்சநாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. வானரக் கடவுளான ஹனுமானுக்கென்று இங்கு ஒரு அழகான கோவில் உள்ளது. இந்த கோவில் அஞ்சநாத்ரி மலையின் உச்சியில் உள்ளது. 570 படிகளை ஏறித்தான் மலை உச்சியில் உள்ள இந்த கோயிலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
ஹனுமான் பக்தர்கள்
படிகளில் ஏறிச்செல்லும் போது ஏராளமான குரங்குகளை வழியில் பார்க்க முடிகிறது. நாம் அவற்றுக்கு தொல்லை தராதபோது அவை நம்மை தொல்லைப் படுத்துவதில்லை. ஹனுமான் பக்தர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய இடம் இந்த அஞ்சநாத்ரி மலைக்கோவில் ஆகும்.
புடைப்பு சிற்பங்கள்
ஹம்பி அரண்மனைப்பகுதியின் மையத்தில் உள்ள இந்த ஹஸர ராமர் கோவில் ஹம்பியில் உள்ள முக்கியமான கலை அம்சங்களில் ஒன்றாகும். முக்கியமான சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு இந்த கோவில் பயன்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ராமாயண இதிகாச நிகழ்ச்சிகள் இந்த கோயிலில் புடைப்பு சிற்பங்களாக படைக்கப் பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும்.
ஹஸர ராமர் கோவில்
ஹஸர ராமர் கோவிலையும் அதில் நிரம்பி வழியும் புராதன கட்டிட சிற்பக்கலை மற்றும் பண்பாட்டியல் அம்சங்களை பார்க்கும் சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொருவருக்கும் அக்காலத்திய விஜய நகர ஆட்சியின் நாகரிகம் எந்த அளவுக்கு சீர் பெற்று விளங்கியது என்பது மிக எளிதாக புரியும்.
துணைவியார் பம்பா தேவி
சிவபெருமானுக்கு அவரது துணைவியார் பம்பா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இந்த விருபாக்ஷா ஆலயமாகும். துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஒன்பது அடுக்கு களைக்கொண்ட 50 மீட்டர் உயர கோபுரம் இந்த கோயிலில் உள்ளது. இது தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து போன்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
பழமையான கோவில்
விருபாக்ஷா கோவில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இங்கு 9 மற்றும் 11ம் நூற்றாண்டினை சேர்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆதியில் ஒரு சில சிலைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த கோவில் பின்னாளில் விரிவுபடுத்த பட்ட தாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. தூண்கள், கோவில் மடைப்பள்ளி, விளக்கு தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன.
பழமை
விஷ்ணு பஹவானுக்கான விட்டலா கோயில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஆலயமாகும். ஹம்பிக்கு வரும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோயிலில் வேறு எங்குமே பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமான, வெகு நுட்பமாக சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பி காணப்படுகின்றன.
திராவிட கட்டிடக்கலை
துங்கபத்திரை ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள இந்த கோயில் தென்னிந்திய திராவிட கட்டிடக்கலை பாணியில் வேறெந்த கட்டிடக்கலை அம்சமும் கலந்திடாமல் கட்டப்பட்டுள்ளது. விஜயநகர அரசரான இரண்டாம் தேவராயரின் காலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் விஜயநகர வம்சத்தின் முக்கிய கலைச்சின்னமாக கருதப்படுகிறது.
இசைத் தூண்கள்
பார்த்தவுடனேயே பிரமிக்க வைக்கும் அலங்கார சிற்ப தூண்களையும் வெகு நுட்பமான சிற்பச் செதுக்கு வேலைப்பாட்டையும் இந்த கோயில் கொண்டுள்ளது. இங்குள்ள ரங்க மண்டபத்தில் 56 இசைத் தூண்கள் உள்ளன. இந்த தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டும்போது ஒவ்வொரு விதமான இசை ஒலி எழும்புவதைக் காணலாம். இந்த இசைத் தூண்கள் பயணிகளை வியப்பிலும் பரவசத்திலும் ஆழ்த்துகின்றன.
விக்கிரகங்கள்
இந்த கோயிலில் விக்கிரகங்கள் கருவறையில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இந்த கருவறையில் தலைமைப் குருக்கள் மட்டுமே நுழைய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் விக்கிரக அலங்காரங்களை பிரகாரத்திலிருந்து தரிசிக்க ஏற்ற வகையில் கருவறை திறந்து காண்பிக்கப்படுகிறது.
கல் தேர்
இந்த கோயிலின் முற்றத்தில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஒரு கல் தேர் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தின் கிழக்கு பகுதியில் இந்த தேர் உள்ளது. ஒரு சிறிய கோயில் போன்றே பல நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இந்த கல் தேர் செதுக்கப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப அதிசயம்
இந்த தேரின் சக்கரங்களும் கல்லால் ஆனவை என்பது மட்டுமல்லாமல் இந்த சக்கரங்கள் ஒட்டுமொத்த கல் தேரின் எடையையும் தாங்கியபடி நகரவும் கூடியவை என்பது ஒரு மாபெரும் தொழில் நுட்ப அதிசயம் என்றால் அது மிகையில்லை. இது தவிர பல பீடங்களும், சிறு கோயில்களும், மண்டபங்களும் விட்டலா கோயில் வளாகத்தில் காணப்படுகின்றன.