இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானப் பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால் ரயில் பயணத்தின் இணையற்ற சொகுசை அனுபவித்து உள்ளீர்களா? அல்லது இந்திய சொகுசு ரயில்களைப் பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். இந்திய ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆல் பிரமாண்டமான சொகுசு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த உயரடுக்கு சொகுசு ரயில்கள், இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மடியில் ஆராய விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகத்தான சேவை செய்கின்றன. மனதைக் கவரும் உட்புறங்கள், கம்பீரமான சூழல், ஆடம்பரமான உணவு வகைகள், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நீங்கள் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாதபடி எல்லாவற்றிலும் பிரம்மாண்டத்தை அள்ளித் தெளிக்கிறது. இந்த ரயில்களில் பயணம் செய்வது இணையற்ற ராஜ மரியாதையை வழங்குவதோடு, இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் சிலவற்றைப் பார்க்கவும் அனுமதிக்கிறது.
மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ்
உலகப் பயண விருதுகளால் தொடர்ந்து 6 ஆண்டுகளாக "உலகின் முன்னணி சொகுசு ரயில்" பட்டம் பெற்ற, மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் கற்பனைக்கும் அப்பாற்பட்ட சொகுசுகளுடன் இந்தியாவின் முதன்மையான சொகுசு ரயிலாகவும், உலகின் 5 சொகுசு ரயில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. அரை மைல் நீளமுள்ள இந்த ரயிலில் மிக உயர்ந்த தரமான விருந்தோம்பல், முழுவதுமாக ஸ்டாக் செய்யப்பட்ட பார்கள், பட்லர் சேவைகள், மையப்படுத்தப்பட்ட ஏர் கண்டிஷனிங், பாரம்பரிய இந்திய ராயல்டி, அதிநவீனமான உட்புறங்கள், செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய தொலைக்காட்சி, தனி குளியலறை, வசதியான படுக்கைகள், நேரடி தொலைபேசிகள், மின்னணு பாதுகாப்பு மற்றும் வகை வகையான உணவுகளுடன் இது பிரீமியம் ஐந்து நட்சத்திர ஹோட்டக்கே சவால் விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா, ஜெம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் பனோரமா, இந்தியன் ஸ்பெல்ன்டர், ட்ரெஷர் ஆஃப் இந்தியா ஆகிய வழிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. நான்கு நாட்கள் பயணத்திற்கு 2 லட்சமும், எட்டு நாட்கள் பயணத்திற்கு 4 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
டெக்கான் ஒடிஸி
பண்டைய இந்தியாவின் பல்வேறு அரச காலங்களின் போது அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பயண பாணியால் ஈர்க்கப்பட்ட டெக்கான் ஒடிஸி ராயலான நீல நிறத்தில் தேர் போன்று ஜொலிக்கிறது. தாஜ் குரூப் ஆஃப் ஹோட்டல்களால் நிர்வகிக்கப்படும் இந்த ரயில் 16 ஆம் நூற்றாண்டில் மகாராஜாக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான அரச மரியாதை, அரண்மனை போன்ற அறைகளின் உட்புறம், பல வகையான உணவு வகைகள், ஓய்வறைகள், கான்ஃபரன்ஸ் கார், ஸ்பா மற்றும் பிற அதிநவீன வசதிகள் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த ரயிலை இந்தியாவில் உள்ள சிறந்த சொகுசு ரயில்களில் ஒன்றாக ஆக்குகின்றது. இதற்கான பயண கட்டணம் 4.27 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மகாராஷ்டிரா ஸ்பிளெண்டர், இந்திய ஒடிஸி, ஹிட்டன் ட்ரெஷர் ஆஃப் குஜராத், இந்திய சோஜோர்ன், ஜூவல்ஸ் ஆஃப் டெக்கான் ஆகிய வழிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
பேலஸ் ஆன் வீல்ஸ்
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சொகுசு ரயிலான பேலஸ் ஆன் வீல்ஸ் அரச விருந்தோம்பல் மற்றும் உயர்தர சேவைக்கு பெயர் பெற்ற மிகச்சிறந்த சொகுசு ரயில்களில் ஒன்றாகும். சக்கரங்களில் நகரும் அரண்மனை போன்ற இந்த ரயிலில் பயணிகளுக்கான ராஜ உடைகள், பாரம்பரியமாக உடையணிந்த ஊழியர்கள், தொலைக்காட்சி பெட்டிகள், ஆடம்பர குளியலறைகள், தனிப்பட்ட உதவியாளர்கள், பல வகை உணவுகள் மற்றும் ஆயுர்வேத ஸ்பா என அனைத்து வசதிகளும் உண்டு. ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் டெல்லி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஸ்வாய் மாதோபூர், சித்தோர்கர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பரத்பூர் மற்றும் ஆக்ராவை சுற்றி பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு சுமாராக 2 லட்சம் வரை ஆகிறது.
கோல்டன் சாரியட்
தென்னிந்தியாவில் செயல்படும் சொகுசு ரயிலான கோல்டன் சாரியட் பெங்களூர், பாதாமி, பந்திப்பூர், மைசூர், ஹம்பி, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் இடங்களை உள்ளடக்கிய ஒரு நேர்த்தியான வடிவமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட ரயிலாகும். ஏர் கண்டிஷனிங், கர்நாடக பாரம்பரியத்தை போற்றும் உட்புறம், அரண்மனை போன்ற படுக்கையறைகள், எல்சிடி டிவிகள், எழுதும் மேசைகள், ஒரு மினி ஜிம், ஆயுர்வேத ஸ்பா, அலமாரிகள் போன்ற சகல வசதிகளும் உண்டு. பிரைட் ஆஃப் சவுத், சௌதர்ன் ஸ்பெல்ன்டர் ஆகிய வழிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க 7௦ ஆயிரம் முதல் 3 லட்சம் வரை செலவாகிறது
ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்
பேலஸ் ஆன் வீல்ஸைப் போலவே, ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், வாரணாசி, ஆக்ரா, டெல்லி மற்றும் கஜுராஹோ கோயில்கள் உட்பட ராஜஸ்தான் சர்க்யூட்டை உள்ளடக்கியது. கலாச்சாரம் நிறைந்த ராஜஸ்தானின் ரயில் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் இந்தியாவில் உள்ள மற்றுமொரு சொகுசு ரயிலாகும். ராஜஸ்தானி அரச அரண்மனைகளில் இருந்து ஈர்க்கப்பட்டு முத்து, ரூபி மற்றும் சபையர் வண்ணங்களில் விசாலமான மற்றும் செழுமையாக அலங்கரிக்கப்பட்ட கேபின்கள், டைனிங் லவுஞ்ச்களுடன் கூடிய டீலக்ஸ் மற்றும் சூப்பர் டீலக்ஸ் கேபின்கள், படிக அலங்காரங்களுடன் கூடிய பார்கள் ஆகியவை ரயிலின் சிறப்பம்சங்கள் ஆகும். இதில் பயணிக்க ஒரு நபருக்கான கட்டணம் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
நம்மால் ராஜா ராணி போன்று வாழ முடியாது என்றாலும் அத்தகைய வசதிகளை ஓரிரு நாட்கள் அனுபவித்துக் கொள்ளலாமே! இந்த தகவல்கள் உங்களுக்கு போதுமானதாக இருக்கின்றதா? அடுத்தது என்ன? ஒரு சொகுசு ரயில் பயணத்தை புக் செய்து விடுங்கள்!!