தமிழ்நாட்டில் ஏராளமான மலைவாசஸ்தலங்கள் நம் மாநிலத்திற்கு அடையாளமாக திகழ்கின்றன. அவற்றில் எல்லோருக்கும் தெரிந்தது ஊட்டி, கொடைக்கானல் மட்டுமே! ஆனால் அவற்றையும் தாண்டி தமிழ்நாட்டில் பல ஆராயப்படாத மற்றும் அறியப்படாத மலைவாசஸ்தலங்கள் உள்ளன!
இந்த இடங்கள் இயற்கை ஆர்வலர்களுக்கும், சாகசப் பிரியர்களுக்கும் நிச்சயம் ஒரு விருந்தாக அமைகின்றன. தமிழ்நாட்டில் உள்ள இந்த சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தங்களுக்கென தனித்துவம் மிக்க அடையாளத்தைக் கொண்டிருப்பதோடு, பயணிகளுக்கு ஒரு அழகிய இடைவெளியையும் பரிசளிக்கின்றன.
நீங்களும் பட்ஜெட் ஃபிரண்ட்லியாக, பயண தூரம் குறைவாக உள்ள சில இடங்களை தேடுகிறீர்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு பயணிக்கக்கூடிய தமிழ்நாட்டின் பிரபலமடையாத அழகான மலைவாசஸ்தலங்களின் லிஸ்ட் இதோ!

மாஞ்சோலை
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள அழகிய மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள், மணிமுத்தாறு அணை மற்றும் மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைகள் போன்ற இயற்கை சூழலால் சூழப்பட்ட அழகிய மலைவாசஸ்தலமாகும்.
டார்சன் குளம், காக்காச்சியில் உள்ள மினி கோல்ப் மைதானம், காக்காச்சி ஏரி, குதிரைவெட்டி, குட்டியார் அணை, மணிமுத்தாறு தேயிலை எஸ்டேட், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், நாலுமூக்கு, சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை, வானபெட்சி அம்மன் கோயில், மணிமுத்தாறு அருவி, மேல் கோதையார் அணை ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
கடல் மட்டத்திலிருந்து 1162 மீ உயரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை மணிமுத்தாறிலிருந்து 23 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 63 தொலைவிலும் அமைந்துள்ளது. சாலை வழியாக திருநெல்வேலி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் அருகிலுள்ள பிற மாநிலங்களுடன் நன்கு இணைக்கப்பட்ட இடமாகும். எனவே இங்கு வருவது மிகவும் சுலபமாகும். மேலும் தூத்துக்குடி விமான நிலையமும், திருநெல்வேலி ரயில் நிலையமும் அருகிலுள்ள விமான மற்றும் ரயில் நிலையங்களாகும்.

மேகமலை
அமைந்துள்ள மேகமலை தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய ஹில் ஸ்டேஷனாகும்.
'ஹைவேவிஸ் மலைகள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் மேகமலை, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு ஆராயப்படாத சொர்க்கமாகும். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான ஒரு இடைவெளியை நீங்கள் தேடுகிறீர்களானால், மேகமலை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாகும்.
மேகமலை வனவிலங்கு சரணாலயம், ஹைவேவி அணை, மேகமலை வியூபாயின்ட், மணலார் அணை, சுருளி நீர்வீழ்ச்சி, இரவங்களார் அணை மற்றும் மகாராஜா மெட்டு ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
மேகமலை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால், பொது பேருந்து மூலமாகவோ அல்லது தனியார் மற்றும் சொந்த வாகனம் மூலமாகவோ எளிதில் அணுகலாம். 12௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் மேகமலைக்கு அருகிலுள்ள விமான மற்றும் ரயில் நிலையங்களாகும்.

பச்சைமலை
பெயருக்கு ஏற்றார்போல் பச்சை பசேல் என்று காட்சியளிக்குமாம் இந்த பச்சை மலை. திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 80 கிமீ தொலைவில் இந்த பச்சை மலைத் தொடரை ஸ்வேதா நதி மற்றும் கல்லாறு ஆறுகள் சூழ்ந்து இந்த இடம் முழுவதையும் பசுமையாக்குகின்றன.
கல்லார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வீர ராமர் அணை, கோரையாறு அருவி, மங்கலம் அருவி, மயில் ஊத்து அருவி, தோப்செங்காட்டுப்பட்டி, செம்பூர், பெரியபாகளம், பெரிய நாகூர், மாயம்பாடி போன்ற அழகிய மலைவாழ் கிராமங்கள் ஆகியவை இங்கு நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
திருச்சி நாட்டின் பல முக்கிய நகரங்களுடன் சாலை மார்க்கமாகவும், விமானம் மற்றும் ரயில் மார்க்கமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து டாக்சி அல்லது பேருந்து மூலம் பச்சைமலையை அடைந்திடலாம்.

கொல்லி மலை
'மௌண்டெய்ன் ஆஃப் டெத்' எனப்படும் மிரட்டலான பெயர் கொண்ட இந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைவாசஸ்தலமாகும். இயற்கை அழகும் மத முக்கியத்துவமும் வாய்ந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் ஒரு ஆராயப்படாத இயற்கை அதிசயமாகும்.
புகழ்பெற்ற அரபளீஸ்வரர் கோயில், சித்தர் குகைகள், அகயா கங்கை நீர்வீழ்ச்சிகள், தாவரவியல் பூங்கா, மாசிலா நீர்வீழ்ச்சி, மற்றும் செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியவை இப்பகுதியின் பிரபலமான இடங்களாகும். இப்பகுதியில் பயணிகளை கவரும் வகையில் தமிழக அரசு படகு இல்லம் அமைத்துள்ளது. மேலும் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பிரபலமாகும்.
கொல்லிமலைக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சேலம் ரயில் நிலையம் ஆகும். அதன் பல 'ஹேர் பின்' வடிவ சாலையமைப்பால் கொல்லிமலையை சாலை வழியாக பயணிப்பது ஒரு புது அனுபவத்தை உங்களுக்கு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பன்றிமலை
பெயரே வித்தியாசமாக உள்ளது என நினைக்குறீர்களா? ஆனால் பெயருக்கும் இடத்திற்கும் சம்மந்தேமே இல்லாதது போல் தான் இருக்கும் இந்த இடம். முழுவதும் பசுமை மற்றும் இயற்கை அழகால் சூழப்பட்டுள்ள இந்த பன்றிமலை தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய சிறு கிராமமாகும்.
புள்ள வெளி நீர்வீழ்ச்சி, அமைதி சோலை நீர்வீழ்ச்சி, காமராஜர் சாகர் டேம்,ஆத்துர் டேம், பல அழகிய சிறு சிறு மலைவாழ் கிராமங்கள் என உங்கள் மனதை கொள்ளயடிக்கும் விஷயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
திண்டுக்கல்லில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பன்றிமலையை பொது மற்றும் தனியார் பேருந்துகள் அல்லது டாக்சி மூலம் எளிதில் அடையலாம்.



Click it and Unblock the Notifications




