தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் மகிழ்ச்சிசிகரமான பண்டிகையாகும்! இந்த 3 நாட்கள் பண்டிகையில், குழந்தைகளுக்கும், வீட்டு பெண்மணிகளுக்கும் பிடித்த பொங்கல் காணும் பொங்கல் தான்! எந்த நாளிலும் வெளியில் செல்லாதவர்கள் கூட இந்த பண்டிகை தினத்தில் வெளியில் செல்வது வழக்கம்! காணும் பொங்கல் தினத்தன்று சென்னையில் உள்ள கடற்கரைகள், மால்கள், தியேட்டர்கள் என அனைத்துமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. ஆனால், சென்னையிலிருந்து காணும் பொங்கலன்று சுற்றிப் பார்க்க ஏராளமான தேர்வுகள் உள்ளன! அவை என்னென்ன என்று பார்ப்போம் வாருங்கள்!
மகாபலிபுரம்
7 ஆம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களுக்காக அறியப்பட்ட மகாபலிபுரம், சென்னைக்கு அருகில் 5௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும். கடற்கரை கோயில், பஞ்ச ரதங்கள், கங்கையின் ஆலம்பாறை கோட்டை, புலி குகை, மகாபலிபுரம் கடற்கரை மற்றும் அர்ஜுனன் பெனன்ஸ் ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். சென்னையிலிருந்து உள்ளூர், தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் டாக்ஸி மூலம் மகாபலிபுரத்தை அடையலாம்.
புலிகட்
ஒரு சோர்வான வாரத்தை அலுவலகத்தில் முடித்த பின்னர், உங்கள் மனதிற்கு அமைதியும், புத்துணர்ச்சியும் வழங்க, நீங்கள் இந்த இடத்தை தான் முதலில் தேர்வு செய்ய வேண்டும். புலிகாட் என்பது சென்னையின் வடக்கில் அமைந்துள்ள ஒரு அமைதியான மற்றும் அடிக்கடி கவனிக்கப்படாத ரத்தினமாகும், இது மன அழுத்தத்தைப் போக்க சென்னைக்கு அருகிலுள்ள சிறந்த வார இறுதி இடங்களில் ஒன்றாகும். கடலோர வசீகரம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் தனித்துவமான கலவையானது, சென்னைக்கு அருகிலுள்ள நகரவாசிகளுக்கு ஒரு சிறந்த விடுமுறை இடமாக இது அமைகிறது. புலிகாட் அதன் அமைதியான உப்பங்கழிக்கும் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய தடாகமான புலிகாட் ஏரிக்கும் புகழ்பெற்றது, பறவைகள் பார்க்கும் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு சரியான விருந்தாகும்.
ஆலம்பாறை தீவு
18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த ஆலம்பாறை கோட்டை துறைமுகமாக செயல்பட்டது. சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பழங்கால கோட்டை கடற்கரையும் வங்காள விரிகுடாவும் ஒன்று சேரும் இடத்தில் அமைந்து சிறு சிறு தீவுகளை உருவாக்கியுள்ளது. ஒரு நாள் பிக்னிக் ஆக சென்னையில் இருந்து இ.சி.ஆர் சாலையில் புறப்பட்டால் ஒன்றரை மணி நேரத்தில் ஆலம்பாறை கோட்டை இருக்கும் இடைக்கழிநாடை அடைந்து விடலாம். இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை சுற்றி பார்த்ததோடு சிறு சிறு தீவுகளிலும் நாம் விளையாடி மகிழலாம்.
காஞ்சிபுரம்
ஆயிரம் கோவில்களின் தங்க நகரம் என்று அன்புடன் அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு நாட்கள் அல்ல, இரண்டு மாதங்கள் கூட பத்தாது. புகழ்பெற்ற அத்திவரதர் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி கோவில், பஞ்சபூத காற்று ஸ்தலமான ஏகாம்பரேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களுக்கு சென்று ஆசி பெற்று வாருங்கள். அங்கு கிடைக்கும் காஞ்சி பட்டுப்புடவைகளை உங்கள் துணைக்கு வாங்கி கொடுத்து மகிழுங்கள்.
கோவளம் - முட்டுக்காடு
கயாக்ஸ் எனப்படும் தனித்துவமான படகுகளைப் பயன்படுத்தி, அழகிய கடற்கரையை நோக்கி படகை செலுத்தி, அலைகளுக்கு நடுவே ஆடி மகிழ முட்டுக்காட்டில் உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இதை இணையதளம் வாயிலாகவும் அல்லது நேரில் சென்றோ நீங்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பிறகு உங்களுக்கு ஒரு கயாக், லைப் ஜாக்கெட் மற்றும் துடுப்பு கொடுக்கப்படுகிறது. நீங்கள் கயாக்கில் ஈடுபடுவதற்கு முன்னரே திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களால் உங்களுக்கு ஒரு செயல்முறை வகுப்பு எடுக்கப்படும். பின்னர் நீங்கள் கயாக்கில், அலைகளுக்கு நடுவே ஆனந்தமாக துடுப்பை போட்டுக் கொண்டு கயாக் செய்யலாம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
காஞ்சிபுரத்தில் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அழகிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 40,000 வெவ்வேறு வகையான பறவைகளுக்கு பிரபலமான இடம்பெயர்வு இல்லமாகும். பாரிங்டோனியா சதுப்புநிலங்கள், செழுமையான மிதக்கும் வாழ்விடங்கள், பரந்த நெல் வயல் போன்ற அழகிய சூழலுக்கு இடையே அமர்ந்து, திரிந்து, பறந்துக் கொண்டிருக்கும் வண்ணமயமான பறவைகளை கண்டு ரசிக்க நீங்கள் இங்கே வருகை தர வேண்டும்.
தடா
சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள தடா நீர்வீழ்ச்சி சென்னைவாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பிக்னிக் ஸ்பாட் ஆகும். கடலோர உஷ்ண நகரமான சென்னையில் இருந்து கொஞ்ச தூர பயணத்திலேயே இயற்கை சார்ந்த ஒரு அழகிய ஸ்பாட்டை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் தடாவிற்கு தான் செல்ல வேண்டும். அடர்ந்த வனத் தழைகளுக்கு மத்தியில் விழும் நீர்வீழ்ச்சிகள், இயற்கையில் அமைதியான நேரத்தை செலவிடுவதற்கும், மிதமான கடினமான மலையேற்றப் பயணத்துக்கும் ஒரு சிறந்த வழியாகும். தடா நீர்வீழ்ச்சி சாகச ஆர்வலர்களுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தமான இடமாகும். நீங்கள் பொது பேருந்து மூலமாக கூட இந்த இடத்தை அடையலாம். ஆனால் உங்கள் சொந்த கார் அல்லது பைக்கில் சென்றால் ஒரு லாங் டிரைவ் செய்த திருப்தி கிடைக்கும். போகும் வழியும் மிகவும் அழகாக இருப்பதால் பயணம் இனிமையாக இருக்கும்.
நாகலாபுரம்
இயற்கை சார்ந்த சூழல், மரம், செடி, கொடிகள், காடுகள், நீர்வீழ்ச்சி என பார்த்து ரசித்து ட்ரெக்கிங் செய்தால் நன்றாக இருக்கும் தானே! சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் செல்ல இது மிகவும் சரியான ஸ்பாட் ஆகும். சுற்றிலும் பசுமை, தூய்மையான நீர், சிறு சிறு குளங்கள் என பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இந்த சிறு குளங்களிலும் நீர்வீழ்ச்சியிலும் நீங்கள் இறங்கி குளிக்கலாம். நீர் மிகவும் இதமாக இருப்பதால் உங்களுக்கு அதைவிட்டு வெளி வரவே மனது இருக்காது. நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம்.
எப்போதும் ஒரே இடங்களுக்கு செல்லாமல், இந்த லிஸ்டில் உள்ள இடங்களுக்கு ஏதேனும் ஒன்றுக்கு சென்று காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கள்!



Click it and Unblock the Notifications







