உலகத்தில் தோன்றிய முதல் சிவன் கோவில், முதல் நடராஜர் தோன்றிய ஊர், உலகில் உள்ள பல்வேறு ரிஷிகளும் முனிகளும் வாசம் செய்த ஸ்தலம், 'தென்னானுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற மகா வாக்கியம் உருவான இடம் - இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இடம் இந்த மங்களநாத சுவாமி திருக்கோயில். தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் அமைந்துள்ள உத்திரகோசமங்கை கோவில் தான் உலகிலேயே சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் என்று சான்றுகள் கூறுகின்றது!
உலகின் முதன்முதல் சிவன் கோயில்
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் முதல் சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்காக முதல் ஆலயம் இங்கு நிறுவப்பட்டுள்ளதால் இது சிவபெருமானின் ஊர் என்றும் போற்றப்படுகிறது.
பெயர் வந்த காரணம்
அம்மனுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை ஆடிக் காட்டி பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்திர கோசமங்கை எனப் பெயர் பெற்றது.

3300 ஆண்டுகள் பழமையான ஆலயம்
ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும். அதாவது, இக்கோவிலின் சரியான வரலாறு எங்கும் கிடைப்பதில்லை. இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது என்றும் கூறுகிறார்கள்.
தாழம்பூ வைத்து வழிபட்டால் தோஷம் நீங்கும்
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயமும் இதுதான். இவ்வளவு ஏன், காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார். பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இங்கு தாழம்பூ வைத்து வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக நம்புகின்றனர்.
ராவணன் திருமணம் செய்துக் கொண்ட கோவில்
மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என்பதையும் அதற்கும் முந்தையது இராமாயணக் காலம் என்பதையும் நாம் அறிவோம். இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. ஆகையால் இக்கோவில் எத்தகைய தொன்மை வாய்ந்தது என்பதை நாம் யூகித்து பார்த்துக் கொள்ளலாம்.

பழம்பெரும் கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக நிற்கிற கோவில்
உத்திர கோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஏழு நிலை ராஜகோபுரங்கள் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்களைக் கொண்டது இக்கோயில். மாபெரும் வரலாறு நிறைந்த இக்கோயில் முழுவதும் தென்னிந்தியா திராவிட கட்டிடக்கலை பாணியில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
ஐந்தரை அடி உயர மரகத நடராஜர்
பெரிய மரகத பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் "ராஜ கோலத்தில்" நாம் இங்கு தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு இருக்கும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரை நாளன்று மட்டும் காப்பு அகற்றப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. அந்நாளில் கோவில் விழாக்கோலம் பூணுகிறது.
எப்படி செல்லலாம்
இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம். மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடியை தாண்டியதும், வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, 7 கிமீ தூரத்தில் இத்தலத்தை அடையலாம்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி!
காசியில் இறந்தால் முக்தி!
ஆனால் இந்த உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி தான்! வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு சென்று வந்து விடுங்கள்!



Click it and Unblock the Notifications





