தெய்வங்கள் வாழும் புண்ணிய பூமியான உத்தரகாண்ட் இந்துக்கள் இடையே மிகவும் மதிக்கப்படும் பல புண்ணிய ஸ்தலங்களைக் கொண்டுள்ளது. இதன் இயற்கை அழகை கண்டு களிக்கவும் மற்றும் இங்கு மேற்கொள்ளப்படும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடவும் நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்ட்டிற்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி டேராடூன் மற்றும் பித்தோராகர் இடையே ஹெலிகாப்டர் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அழகிய மாநிலமான உத்தராகண்ட்
இந்து பக்தர்கள், இயற்கை ஆர்வலர்கள், சாகச விரும்பிகள் என அனைவர்க்கும் உத்தரகாண்ட் ஒரு பக்கெட் லிஸ்ட் டெஸ்டினேஷன் ஆக உள்ளது. பரந்து விரிந்த வனாந்தரங்கள், பனி மூடிய சிகரங்கள், வெள்ளி போன்ற நதிகள், பால் போன்று ஆர்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அன்னை உத்தரகாண்ட் மாநிலத்தை மிகுதியாக ஆசீர்வதித்திருக்கிறார்.
இப்படி பல சிறப்புகள் கொண்ட இந்த மாநிலத்தில் சுற்றுலா மிகவும் செழித்தோங்குகிறது. டேபிள்டாப் ஏர்போர்ட், புதிதாக ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் என பல்வேறு முன்னேற்றங்களை கண்டு கொண்டிருக்கிறது இந்த மாநிலம். இப்போது அந்த முன்னேற்றங்களில் ஒன்றாக இந்த ஹெலிகாப்டர் சேவையும் பட்டியலில் சேர்ந்து உள்ளது.
ஹெலிகாப்டர் சேவை
உத்தரகாண்ட் ஒவ்வொரு ஆண்டும் எல்லையில்லா சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை ஈர்க்கிறது. அதன்படி மதம் மற்றும் சுற்றுலாவின் பார்வையில் உத்தரகாண்ட் முக்கியமான மாநிலம் என்று ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் கூறினார். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதியாக மாநிலத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் அனைத்து வகையான வசதிகளையும் பெற வேண்டும் என்பதே மாநில அரசின் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய எம் சிந்தியாவுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி நன்றி தெரிவித்திருந்தார். மக்கள் எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இது உதவியாக இருப்பதோடு இயற்கை காட்சிகளையும் கண்டு மகிழ உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|
வாரத்தில் ஒரு முறை மட்டுமே செல்லலாம்
டேராடூனில் இருந்து செல்லும் இந்த ஹெலிகாப்டர் சேவை ஹல்த்வானி, பந்த்நகர், அல்மோரா மற்றும் பித்தோராகர் ஆகிய இடங்களின் வழியே செல்லும். 7 இருக்கைகள் கொண்ட பவன் ஹன்ஸ் சேவை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும்.
உடான் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் நடத்தப்படும் ஹெலி சேவைகள் உத்தரகாண்டில் விமான இணைப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று முதல்வர் கூறினார். மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவையை மேற்கொள்ளவும், இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பவன் ஹான்ஸ் நிறுவனத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகவே இனி நீங்கள் உத்தரகாண்ட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் இனி நீங்களும் ஹெலிகாப்டரில் சவாரி செய்யலாம். இது உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை!