ஒரே மாதிரியான தங்குமிடங்களில் மற்றும் ஹோட்டல் அறைகளில் தங்கி போரடித்துவிட்டதா? புதுமையான அனுபவங்களையும், சாகசங்களையும் தேடுபவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குதான்! ஆம், உத்தரகாண்ட் மாநிலம் சிறையில் தங்குவதற்கு உங்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது! அதுவும் வெறும் 500 ரூபாயில்!
நீங்கள் தனிப்பட்ட மற்றும் உள்ளூர் தங்குமிடங்களை அனுபவிக்கும் பயண ஆர்வலராக இருந்தால், உங்கள் பக்கெட் லிஸ்டில் இந்த சிறை அனுபவ தங்குமிடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நேரமிது! அதனைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே காண்போம்!

நூற்றாண்டை கடந்த சிறைச்சாலை
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 1903 இல் கட்டப்பட்ட ஹல்த்வானி சிறையானது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு இரவுக்கு வெறும் 500 ரூபாய்க்கு உண்மையான "சிறை அனுபவத்தை" வழங்க தயாராகிக் கொண்டிருக்கிறது.
1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஹல்த்வானி சிறைச்சாலையில் ஆறு பணியாளர்கள் தங்கும் அறைகளுடன் ஒரு பழைய ஆயுதக் களஞ்சியம் உள்ளது. அதன் கைவிடப்பட்ட பகுதி "சிறை விருந்தினர்களுக்காக" தயாராகி வருகிறது என்று சிறையின் துணை சிறை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா தெரிவித்துள்ளார்.
நூறு ஆண்டுகளை கடந்த இந்த கைவிடப்பட்ட சிறைச்சாலையின் ஒரு பகுதி இப்போது பயணிகளுக்கு விருந்தளிப்பதற்கும், அவர்களுக்கு சிறை அனுபவங்களை வழங்குவதற்கும் தயாராகி வருகிறது என்ற விஷயம் சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு சிறையில் இருக்கும் கைதிகள் போலவே சீருடையும், சிறை உணவும் வழங்கப்படும். படிக்கவே ருசிகரமாக உள்ளது அல்லவா?

இதனுள் கலந்துள்ள ஜோதிட அம்சம்
ஆம்! சுற்றுலா அம்சம் மட்டுமின்றி இதனுள் ஜோதிட அம்சமும் அடங்கியுள்ளது. சிலரிடம் இந்த ஜோதிடக்காரர்கள் உங்களுடைய கட்டம் சரியில்லை, சிறை வாசம் நிச்சயம் என்று சொல்வார்களே! அதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஆம், 'பந்தன் யோகம்' எனப்படும் இந்த ஒரு ஜாதகக் கூற்று மெய்ப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இங்கு வந்து தங்கலாம் என கூறப்படுகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் மூன்று வான உடல்கள் சாதகமற்ற நிலையில் வைக்கப்படும்போது, அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று கணிக்கும் ஒரு சமன்பாடு இந்த பந்தன் யோகமாம்! நாம் தீய செயல்களில் ஈடுபட்டு உண்மையான சிறைக்கு செல்வதற்கு பதில், இதில் ஒரு நாள் வந்து தங்கிவிட்டு போவது நல்லது என சில ஜோதிடக்காரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்!

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கப்போகும் ஹல்த்வானி
புதிய மற்றும் அசாதாரண அனுபவங்களில் ஈடுபட நம்மில் பலர் ரெடியாக இருப்போம். பயணமே உண்மையான இன்பம், பயணமே அதற்கு விடை! ஜாதகமோ, ஆசையோ எதுவாக இருந்தாலும் இதில் ஒரு முறை தங்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோர் மனதிலும் எழுந்துவிட்டது தானே! ஆனால் இந்த சிறை அனுபவத்திற்காக மட்டுமின்றி, வேறு சில காரணங்களுக்காகவும் நீங்கள் ஹல்த்வானி செல்ல வேண்டும். ஆம்! அதுதான் நம்மை கட்டிப் போடுகின்ற ஹல்த்வானியின் இயற்கை அழகு!
உத்தரகாண்டில் உள்ள இந்த நகரம் குமாவோனின் மாயாஜால இராச்சியத்தின் நுழைவாயிலாகும், கத்கோடம், கவுலா அணை, ஷிட்லா தேவி கோயில், ஜியோலிகோட், நௌகுசியாதல், பீம்டல் ஏரி, அனுமன் கர்ஹி கோயில், கைஞ்சி தாம், வாக்வே மால், ஹிடிம்பா பர்வத், தேவபூமி அட்வென்ச்சர்லேண்ட் மற்றும் சஞ்சய் வான் ஆகியவை ஹல்த்வானியில் கட்டயாம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களாகும்!



Click it and Unblock the Notifications




