வானியல் பற்றிய ஆராய்ச்சி இன்று நேற்று ஆரம்பித்தது இல்லை! பாபிலோனியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் போன்ற பண்டைய நாகரிகங்களில் சில அடிப்படைத் தேவைகள் காரணமாக வானியல் வளர்ச்சி ஏற்பட்டது. STD போன் முதல் மொபைல், இன்டர்நெட், HD டிவி வரை விண்வெளி ஆராய்ச்சி நம் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக உள்ளது. இந்தியாவின் பல இடங்களில் வானியல் ஆய்வகங்கள் உள்ளன. சுற்றுலாவிற்காக மட்டுமின்றி, அறிவியலைப் புரிந்துக் கொள்ளவும் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் இந்த அப்சர்வேட்டரிகளுக்கு செல்ல வேண்டும். அப்படி ஒரு அருமையான இடம் தான் வேலூரில் அமைந்துள்ள வைனு பாப்பு அப்சர்வேட்டரி (VBO). இந்த இடத்திற்கு எப்படி மற்றும் எப்போது செல்ல வேண்டும் என்று பார்ப்போம்!

வேலூரில் அமைந்துள்ள வைனு பாப்பு அப்சர்வேட்டரி
வைனு பாப்பு அப்சர்வேட்டரி வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு அருகில் காவலூரில் உள்ள ஜாவடி மலையில் அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமை, ஒருவித அமைதி, இனிமையான வானிலை என அப்சர்வேட்டரி மிகவும் அழகான சூழலில் அமைந்துள்ளது. 40 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடம், நட்சத்திரங்கள், வெளிக்கோள்கள், விண்மீன் திரள்கள் போன்ற வானப் பொருட்களை ஆய்வு செய்வதில் ஈடுபட்டுள்ள நாடு முழுவதிலும் உள்ள வானியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கிறது.
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி
இந்தியாவின் சார்பில் இருந்து லாகாதா, ஆர்யபட்டா, பிரம்மகுப்தா, வராஹமிஹிரா, பாஸ்கரா என ஏராளமான விஞ்ஞானிகள் வானியல் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர். STD போன், மொபைல், இன்டர்நெட் போன்றவை விண்வெளி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இருந்து பிறந்து சில அறிவியல் வரப்பிரசாதங்களாகும்.

யார் இந்த வைனு பாப்பு?
வைனு பாப்பு ஒரு இந்திய வானியலாளர் ஆவார், அவர் இந்தியாவில் பல வானியல் நிறுவனங்களை நிறுவ உதவினார். இந்திய விண்வெளி ஆராய்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பின் நினைவாக இந்த ஆய்வகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி வளையங்கள் இருப்பது, யுரேனஸின் புதிய துணைக்கோள், வியாழனின் துணைக்கோளான கேனிமீட்டைச் சுற்றி வளிமண்டலம் இருப்பது போன்ற முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார்.

நீங்கள் இங்கே எதற்காக செல்ல வேண்டும்
ஆசியாவில் உள்ள சிறந்த வானவியல் ஆய்வகங்களில் ஒன்றான வைனு பாப்பு அப்சர்வேட்டரி கட்டாயம் பார்வையிடத் தகுந்தது. இங்கே உள்ள தொலைநோக்கிகள், ஃபேப்ரி-பெரோட் இன்டர்ஃபெரோமீட்டர் மூலமாக, நட்சத்திரத்தைப் பார்ப்பது, வானத்தில் உள்ள பொருட்களை கண்டு ரசிப்பது, வானவியல் ஆராய்ச்சி மற்றும் அதைப் பற்றிய புரிதலுக்கு வழி வகுக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை, இலவசம் தான். ஆனால் இந்த ஆய்வகம் பொதுமக்களுக்காக சனிக்கிழமைகளில் இரவு 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். நீங்கள் செல்வது என்றால் சனிக்கிழமைகளில் மட்டுமே செல்ல வேண்டும்.

செல்லும் முன் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை
1. மழைக்காலங்களில் கண்காணிப்பு மையத்திற்கு செல்ல வேண்டாம். தெளிவான வானம் இல்லை என்றால் நம்மால் சரியாக வானத்தை காண இயலாது. அதனால் கோடை காலங்களில், வானம் தெளிவாக இருக்கும் போது மட்டுமே செல்லவும்.
2. அதே போல அங்கு இருக்கும் சாதனங்களின் மீது கை வைக்க வேண்டாம்.
3. உங்கள் கேமராவை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். இருப்பினும், கண்காணிப்பு அறைக்குள் தடைசெய்யப்பட்ட இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
4. அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் தொலைநோக்கிகள் மற்றும் பிற கருவிகளைப் பற்றி கேள்வி கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்.
5. இந்த ஆய்வகம் கேனிமீட் செயற்கைக்கோளில் வளிமண்டலத்தின் இருப்பைக் கண்டறிந்தது மற்றும் யுரேனஸ் மற்றும் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதை உறுதிப்படுத்த உதவியது.
6. வைநு பாப்பு தொலைநோக்கி மிக உயர்ந்த தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது, இது 40,000 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டுள்ள இருபத்தைந்து பைசா நாணயத்தை காணும் அளவிற்கு துல்லியமாக உள்ளது.
7. அதன் மேம்பட்ட கண்காணிப்பு வசதிகள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முன்மொழிவுகளை VBO ஈர்க்கிறது
8. இந்த வானியல் ஆய்வுக்கூடம், அடர்ந்த பசுமைக்கு மத்தியில், ஒதுக்குப்புறமான வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதனால் பல வகையான பறவைகள் மற்றும் காட்டு மான்களையும் நீங்கள் காணலாம்.
9. இந்த அழகிய இடம் பறவை ஆர்வலர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் ஏற்ற இடமாகும்.
10. வருடத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆய்வகத்தைப் பார்வையிடலாம். இருந்தாலும் ஜனவரி முதல் மே இடைப்பட்ட காலங்களில் செல்லுங்கள்.

எப்படி செல்வது
வைனு பாப்பு ஆய்வகம் சென்னையிலிருந்து 200 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 175 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இரண்டு பெரு நகரங்களிலிருந்தும் எளிதில் ஆய்வகத்தை அடையலாம். பெங்களூரு மற்றும் சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற பிற நகரங்களிலிருந்து, ஜோலார்பேட்டை அல்லது வாணியம்பாடிக்கு ரயிலில் செல்லலாம். காவலூர் செல்ல, நீங்கள் உள்ளூர் பேருந்து அல்லது டாக்ஸி மூலம் செல்லலாம். காவலூரில் இருந்து ஓசூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. இந்த அறிவியல் சார்ந்த இடத்திற்கு நிச்சயம் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.



Click it and Unblock the Notifications





