ஜல்லி என்பது விழாவின் போது புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் மாட்டப்படும் வளையத்தினைக் குறிக்கிறது.
எனவே ஜல்லியை கட்டுதல் என்ற பொருளில் ஜல்லிக்கட்டு என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது.
அவ்வாறு மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்த பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிகட்டு' என்று மாறி பின்னர் 'ஜல்லிக்கட்டு' என்று ஆனதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இதுதவிர தனித்தமிழில் ஏறுதழுவல் அல்லது ஏறுதழுவுதல் என்றும் ஜல்லிக்கட்டு குறிப்பிடப்படுகிறது. அதாவது ஏறு எனும் காளை மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு என்பதால் இப்பெயர் பெற்றது.
தமிழகத்தை பொருத்தவரை மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் முதலில் அவனியாபுரத்திலும், அதன் பிறகு பாலமேட்டிலும், பின்னர் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது.

ஜல்லிகட்டு வகைகள்
தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமாக நடத்தப்படுகிறது. அதாவது மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்ல வேண்டும். அதுவே ஒரு சில பகுதிகளில் 'வேலி மஞ்சுவிரட்டு' என்ற பெயரில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டி அடக்குவதும் நடைபெறுகிறது. அதேபோல வட தமிழகத்தில் 'வடம் மஞ்சுவிரட்டு' என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
படம் : Iamkarna

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதன் முதலில் அவனியாபுரத்தில்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு காளைகள் மற்றும் வாடிப்பட்டி, சோளங்குருணி, பெருங்குடி, திருமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்படுகின்றன.
படம் : Djoemanoj

பாலமேடு ஜல்லிக்கட்டு
2013-ஆம் ஆண்டு இங்கு நடந்த ஜல்லிக்கட்டில் மஞ்சள் நிறத்தில் மேலாடையும், நீல நிறத்தில் கால் சட்டையும் சீருடையாக இருந்தது. இந்த சீருடை அணிந்து வீரர்கள் மக்களின் ஆரவாரத்திற்க்கிடையே தடுப்பினுள் தயாராக இருப்பார்கள். பின்னர் "வாடிவாசல்" என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காளைகள் விரட்டிவிடப்படும். இங்கு வரும் காளைகள் இந்த ஊரிலிருந்து மட்டுமின்றி மதுரை மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் உள்ள ஊர்களிலிருந்தும் வந்து போட்டியில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.
படம் : Mahendrabalan

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுபின் காரணமாகவும் ஊடகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களின் மூலமும் உலக அளவில் அலங்காநல்லூர் பிரபலமாகத் தொடங்கியது. இதன் காரணமாக இன்று ஜல்லிக்கட்டு என்று சொன்னாலே அனைவருக்கும் அலங்காநல்லூர் பெயர்தான் நினைவுக்கு வருகிறது.
படம் : எஸ்ஸார்

ஜல்லிக்கட்டு நடைபெறும் பிற இடங்கள்
மதுரை மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் பிற இடங்களிலும் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவற்றில் சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு பிரசித்தம். அதுமட்டுமல்லாமல் திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.
படம் : Amshudhagar



Click it and Unblock the Notifications





