வடகிழக்கு மாநிலங்கள் அதன் புவியமைப்பு, கால நிலைகள், கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு போன்ற பல காரணங்களில் ஒரு சேர இருப்பதால், இவை "ஏழு சகோதரிகள்" (Seven sisters states) என்றழைக்கப்படுகிறது. இந்தியாவின் உண்மையான இயற்கை அழகை ரசிக்க நீங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு தான் பயணிக்க வேண்டும். இப்பொழுது அதற்கு ஏதுவாக அஸ்ஸாம் மாநிலத்தின் நான்கு இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இனி அஸ்ஸாம் செல்லும் போது, இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்து, அஸ்ஸாமின் இயற்கை அழகையும், கலாச்சாரத்தையும் கண்டு மகிழ்ந்திடுங்கள்!

முன்னேற்றம் காணும் வடகிழக்கு மாநிலங்கள்
என்ன தான் வடகிழக்கு மாநிலங்கள் அழகாக இருந்தாலும், இன்னமும் போக்குவரத்து என்பது தென்னிந்திய மாநிலங்களை போல் வளர்ச்சி காணவில்லை, ஆனால் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒன்று சேர்ந்து வடகிழக்கு மாநிலங்களின் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய பாலமே வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தையும் தான் இணைக்கிறது. இது போன்ற எவ்வளவோ பெரிய பெரிய சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட இருக்கின்றன.

இணைக்கப்பட்ட 4 பகுதிகள்
பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரங்களான தேஜ்பூர், திப்ருகார், குவஹாத்தி மற்றும் ஜோர்ஹாட் ஆகிய பகுதிகள் ஹெலிகாப்டர் சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு நகரங்களும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் ஆறு ஹெலிகாப்டர் வழித்தடங்களுடன் இணைக்கப்படும். இந்தத் திட்டம் ஆறு மாநிலங்களில் மொத்தம் எண்பத்தாறு விமானங்களைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பாதை திப்ருகரில் இருந்து ஜோர்ஹாட், அங்கிருந்து தேஜ்பூர், கடைசியாக கவுகாத்தியை சென்றடைகிறது.

சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
சுற்றுலாவைப் பொறுத்தவரை அஸ்ஸாமின் திப்ருகர், ஜோர்ஹாட், தேஜ்பூர் மற்றும் குவஹாத்தி ஆகிய நான்கு நகரங்களும் மிக முக்கியமானவை என்று சொல்லலாம். ஹெலிகாப்டர் வழியை அறிமுகப்படுத்துவது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்தது, ஏனெனில் அவர்கள் பேருந்துகள் அல்லது விமானங்களை இணைக்க காத்திருக்க வேண்டியதில்லை. இது வர்த்தகம் மற்றும் சுற்றுலா இரண்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அந்த வகையில் மிகக் குறுகிய காலத்தில் சிறிது எளிதாகவும் வசதியாகவும் அடைய விரும்பும் பயணிகளுக்கு போனஸாக இருக்கும்.

சுற்றுலாப் பயணிகளை மயக்கும் இந்த 4 நகரங்கள்
திப்ருகர் - இந்தியாவில் அதிகப்படியான தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் அஸ்ஸாம் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் தேயிலை நகரம் என்று அழைக்கப்படுவதும் திப்ருகர் தான். இந்தியாவின் மிகவும் பிரமிக்க வைக்கும் சில தேயிலைத் தோட்டங்களை நீங்கள் திப்ருகரில் கண்டு களிக்கலாம். அஸ்ஸாமின் தேயிலை பெல்ட்டை நீங்கள் ஹெலிகாப்டரில் சவாரி செய்த வாறே கண்டு களிக்கலாம்.
ஜோர்ஹாட் - உலகின் மிகப்பெரிய நதி தீவான மஜூலியின் நுழைவாயில் ஜோர்ஹாட் ஆகும். ஜோர்ஹாட்டில் இருந்து மஜூலி படகு சவாரி மூலம் அடையலாம். படகில் வரும் போதே நீங்கள் மஜூலியின் அழகைக் கண்டு வியப்படைவீர்கள். எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என தோட்டங்கள், குட்டி தீவுகள், கரையோர அழகான வீடுகள், விரும்தோம்பலில் வியக்க வைக்கும் பூர்வ குடிகள் என அனைத்துமே இங்கு உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.
தேஜ்பூர் - தேஜ்பூர், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை கொண்டுள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள், வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய இடங்கள், என அனைத்து அழகான விஷயங்களையும் நீங்கள் தேஜ்பூரில் காணலாம்.
கவுகாத்தி - அஸ்ஸாமின் தலைநகராக இருப்பதால், பொழுது போக்கு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வணிகர்களும் வருகை தருகின்றனர். எப்போதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் இந்த நகரத்தில் பார்ப்பதற்கு ஏராளம் உள்ளன. வடகிழக்குக்கு நுழைவாயிலான கவுகாத்தியுடன் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர் இணைப்பு என்பது அஸ்ஸாமின் அழகைக் காண மக்களை அனுமதிப்பதோடு, சுற்றுலாவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் செய்ய, இந்த ஹெலிகாப்டர் சேவை ஒரு இன்றியமையாத படியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



Click it and Unblock the Notifications





