திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது சேரன்மகாதேவி. இது திருநெல்வேலியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.
இங்கு தாமிர பரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது அம்மைநாதர் சுவாமி திருக்கோவில்.
சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் இக்கோவில் நவ கயிலாயத்தில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. இந்த கோயிலுக்கு சென்றதால் தங்கள் தொழில் சிறந்து நல்ல நிலைமையை அடைந்தவர்கள் பலர் என்கிறார்கள் கோயில் பக்தர்கள்.

மூலவர்
இந்த கோயிலின் மூலவர் அம்மைநாத சுவாமி என்னும் கைலாயநாத சுவாமியாகவும், இறைவி ஆவுடையம்மனாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.
cheranmahadeviammainathar

அமைப்பு
இந்த ஆலயத்திற்கு தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் இரண்டு வாசல்கள் உள்ளன.
cheranmahadeviammainathar

ராஜகோபுரம்
கிழக்கு முகத்தை நோக்கி அழகிய சிறிய ராஜகோபுரம் ஒன்று கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
cheranmahadeviammainatha

சன்னதிகள்
கோவிலின் வட பகுதியில் அம்மைநாதர் சுவாமியும், தென் பகுதியில் ஆவுடையம்மனும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றனர். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.

மற்ற தெய்வங்கள்
தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜர், சிவகாமி அம்மை, காரைக்கால் அம்மை ஆகியோர் உள்ளனர். சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள் மேற்கு நோக்கிய வண்ணம் உள்ளனர்.
கோவிலின் மேற்குப் பகுதியில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வடமேற்கில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையும், கஜலட்சுமியும், சனீஸ்வரரும், சண்டிகேஸ்வரரும் அமைந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தலவிருட்சம் ஆலமரம் ஆகும்.

முனிவர் உருவம்
ஆலயத்தின் உள் பகுதியில் அமைந்த தூண் ஒன்றில், சிவபெருமானை வழிபட்ட முனிவர் ஒருவரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு
இத்தலத்தின் மூலஸ்தானத்தை இரண்டு பெண்கள் சேர்ந்து கட்டியதாக வரலாறு உள்ளது.

ஈசனுக்காக பெண்கள் செய்தது
அந்த பெண்கள் இருவரும் சகோதரிகள் ஆவர். ஈசனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். அவர்கள் நெல் குத்தும் தொழில் செய்து பணம் ஈட்டி வந்தனர். அவ்வாறு சம்பாதித்து சேமித்த பணத்தைக் கொண்டு, இறைவனின் கோவிலுக்கு மூலஸ்தானம் கட்டும் பணியைத் தொடங்கினர்.
இதற்கு சான்றாகவே ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள தூணில் இரண்டு பெண்கள் நெல் குத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அருகிலுள்ள கோயில்
ஆலயத்தின் அருகில் பக்தவச்சலார் கோவில் உள்ளது. இந்தக் கோவில் அருகில் யாக தீர்த்தம் இருக்கிறது.

நோய் தீர்க்கும் நம்பிக்கை
அம்மநாதர் கோவிலுக்கும், யாக தீர்த்தத்திற்கும் இடையே ரணவிமோசன பாறை ஒன்று உள்ளது. இங்கு தொடர்ந்து 41 நாட்கள் விடாமல் ஸ்நானம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழா
இத்தலத்தில் மார்கழி மாதத்தில் திருவிழா நடக்கும். இந்த திருவிழா அன்று அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இந்தப் பகுதியில் சங்கமிக்கும் என்பது புராணம் கூறும் வரலாறு.
ஐப்பசி திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய முக்கிய திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடை பெறுகிறது. இத்தலத்து இறைவனை வழிபடுதல், தஞ்சை அருகே உள்ள திங்களூர் சிவபெருமானை வழிபடுதலுக்கு சமமானதாகும்.

நடை திறப்பு
இந்த ஆலயமானது தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

எப்படி செல்லலாம்?
திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதியும், ரெயில் வசதியும் உள்ளன. சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நாமும் செல்வோம்.
cheranmahadeviammainathar



Click it and Unblock the Notifications




