அஞ்செங்கோ ஃபோர்ட் எனும் இந்த புராதன கோட்டையானது 1695ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டுள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் உப்பங்கழி தேக்கத்துக்கும் இடையில் அமைந்துள்ள அஞ்செங்கோ எனும் இடத்தில் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வர்கலா நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ள இந்த கோட்டை ஒரு முக்கிய வரலாற்றுச்சின்னமாக கருதப்படுகிறது. ஆதியில் இது பொருட்களை சேகரித்து வைப்பதற்கான கட்டமைப்பாக மட்டுமே உருவாக்கப்பட்டது.
பின்னாளில் ஆங்கிலேயர் இந்த கோட்டையை கவர்ந்து ராணுவக்கேந்திரமாக பயன்படுத்தினர். எனவே கேரளாவின் மற்ற கோட்டைகளைப்போல மிரட்டுகின்ற தோற்றம் இந்த கோட்டைக்கு இல்லை.
இந்த கோட்டையின் ஒரு முக்கிய அம்சம் ஒரு கற்கால்வாய் ஆகும். சிதிலமடைந்து காணப்பட்டாலும் இப்போதும் இதன் கட்டுமான அமைப்பு பார்வையாளர்களை வசிகரிக்கிறது.
மேலும், சில கல்லறைகளையும் இந்த கோட்டை வளாகத்தில் காணலாம். இவற்றில் 1704ம் வருடத்தை சேர்ந்த ஒரு மிகப்பழமையான கல்லறையும் அடங்கும். இவை ஆரம்ப காலத்தில் இந்த கோட்டையில் வசித்தவர்களின் கல்லறைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்த கோட்டையை பயணிகள் சுற்றிப்பார்க்கலாம். ஞாயிறு மற்றும் அரசுவிடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் இந்த கோட்டை திறக்கப்படுகிறது.
சுற்றிலுமுள்ள இயற்கைக்காட்சிகளை இந்த கோட்டையிலிருந்து ரசிக்க முடிவது இதன் மற்றொரு சிறப்பு. கோட்டைக்கு அருகிலேயே அமைந்திருக்கும் முதலிப்புழா ஏரிக்கும் பயணிகள் விஜயம் செய்து அதன் நிசப்தம் தவழும் இயற்கை எழிலை ரசித்து மகிழலாம்.