இயற்கை வளம் நிரம்பிய இந்த ஜாம்புவி மலை அகர்தலாவுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய எழில் அம்சமாகும். அகர்தலா நகரத்திலிருந்து 240 கி.மீ தூரத்தில் அமைந்திருப்பதால் இதற்காக பயணிகள் ஒரு நாளை தனியாக ஒதுக்க வேண்டியிருக்கும்.
இருப்பினும் இந்த சிரமத்திற்கான பலனை இந்த ஜாம்புவி மலை தனது எழிற்காட்சிகள் மூலமாக வழங்குகிறது. ஜாம்புவி மலை என்பதற்கு ‘அழியாத மலைச்செழிப்பு ‘ என்பது பொருள்.
கடுமையான பருவநிலையின் தாக்கம் ஏதுமின்றி உலர்வான வெளிச்சமான சூழலுடன் இந்த ஜாம்புவி மலை காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலைப்பகுதியில் ஆரஞ்சுப்பழங்கள் அதிகமாக விளைவதால் இது திரிபுராவின் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இங்கு ‘ஆரஞ்சு சுற்றுலா திருவிழா’வும் நடத்தப்படுகிறது. இதில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்தோடு பங்கேற்கின்றனர்.
ஆரஞ்சுத்தோட்டங்கள் மட்டுமல்லாமல் ஆர்க்கிட் மலர்ச்செடிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் போன்றவற்றையும் இந்த மலைப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம். மலையுச்சியிலிருந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்த்து ரசிக்கும் அனுபவத்தையும் பயணிகள் தவறவிடக்கூடாது.