பிஷ்ணுபூர், மணிப்பூரின் சமயம் மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக அறியப்படுகிறது. அதோடு இது மஹாவிஷ்ணு வசிக்கும் நாடு என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிவுவதால் அதிக அளவில் பயணிகளை பிஷ்ணுபூர் ஈர்த்து வருகிறது.
பிஷ்ணுபூரில் கோள வடிவில் கோபுரங்களைக்கொண்ட, டெர்ரகோட்டா பாணி கோவில்கள் மிகவும் பிரபலம். மேலும் புகழ்பெற்ற நடனமாடும் மான்களான "சாங்கை" என்னும் அரியவகை மான்களை கொண்ட தனிச் சிறப்பு பிஷ்ணுபூருக்கு உண்டு. இக்காரணங்களால், பிஷ்ணுபூர் நகரம் புனிதமானதாக கருதப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரமான இம்பாலிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிஷ்ணுபூரானது, லும்லாங்டாங் என்று முன்பு அழைக்கப்பட்டது.
சேனாபதி மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களால் வடக்கிலும், சூரசந்த்பூர் மாவட்டத்தால் மேற்கிலும், சந்தேல் மாவட்டத்தால் தென்கிழக்கிலும், தௌபால் மாவட்டத்தால் கிழக்கிலும் சூழப்பட்டு பிஷ்ணுபூர் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பிஷன்பூர் என்ற பெயரிலும் அழைக்கப்படும் பிஷ்ணுபூர் நகரத்தினூடே பாய்ந்தோடும் தாங்க்ஜாரோக் நதி நகரின் அழகை ரெட்டிப்பாக்குகிறது.
பிஷ்ணுபூர் நகரத்திலும் அதனைச்சுற்றிலும் உள்ள சுற்றுலாத்தலங்கள்
சாங்கை எனப்படும் அரியவகை நடனமாடும் மான்களின் தாயகம் பிஷ்ணுபூர் ஆகும். இன்றைய காலகட்டத்தில், உலகத்திலேயே இவ்வகையான மான்கள் காணப்படுவது மணிப்பூர் மாநிலத்தில் மட்டும்தான்.
கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரியின் தென்பகுதியில், இவ்வகை மான்கள் வாழ்கின்றன. பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், தற்போது சாங்கை மான்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன.
கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், மான்கள், நீர்க்கோழிகள், மற்றும் நீர்க்கீரிகள் போன்ற உயிரினங்களும் உள்ளன. இம்மாவட்டத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலங்களுள், இப்பூங்காவும் ஒன்று. கெய்புல் லாம்ஜாவ் தேசியப் பூங்காவினைச் சுற்றிலும் லோட்டக் ஏரி அமைந்து, கண்களுக்கு விருந்தாகும் காட்சியை அளிக்கிறது.
INA நினைவுக் கட்டிடம் என்னும் இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது. இதில் புகழ்பெற்ற சுதந்திரப்போராட்டத் தியாகியான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயன்படுத்திய பொருட்களும் அவரோடு தொடர்புடைய பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏரியில் உள்ளூர் மொழியில் பும்டி என்று அழைக்கப்படும் மிதக்கும் தாவரங்கள் நிறைந்து பரவியுள்ளன. இதனால் இவ்வேரியே பச்சை வண்ணத்தில் காட்சியளிக்கிறது.
இப்பகுதியைச்சுற்றிலும் உள்ள தாவரங்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியபடியே உள்ளன. இது இப்பகுதியில் உள்ள மக்களின் தினப்படி வாழ்க்கைக்கு சிரமத்தை கொடுத்து வருகிறது.
பிஷ்ணுபூரில் உள்ள மக்களும் பண்பாடும்
பிஷ்ணுபூரில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் மெய்ட்டீஸ் எனப்படும் மணிப்பூர் மாநிலத்தின் பழமைவாய்ந்த ஒரு இனத்தை சேர்ந்த மக்கள் ஆவர். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றுகின்ற இந்துக்கள்.
மெய்ட்டி பங்கால்( மணிப்பூரி முஸ்லிம்கள்), நாகர்கள், கபூய், காங்க்டே, கோம் உள்ளிட்ட இதர பழங்குடிகளும் இங்கே வசிக்கிறார்கள். பிஷ்ணுபூர் மக்களுக்கு முதன்மை வாழ்வாதாரமாக திகழ்வது விவசாயம் ஆகும்.
இம்மக்கள் ஆண்டு முழுவதும் பல்வகையான பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். அவற்றில் முக்கியமானது, லாய் ஹரோபா பண்டிகையாகும்.
இந்து மதத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து கடவுளாக வழிபட்டு வரும் தங்க்ஜிங்க் என்னும் கடவுளுக்கு கொண்டாடப்படும் பண்டிகைதான் லாய் ஹரோபா ஆகும். இது மே மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள தொலைதூரங்களிலிருந்து கூட மக்கள் வருகிறார்கள். எபுதொவ் தங்க்ஜிங்க் கோவிலானது, தங்க்ஜிங்க் கடவுளுக்கெனக் கட்டப்பட்டுள்ள கோவிலாகும். இது கண்டு களிக்கத்தக்க ஒரு இடமாகும்.
ஏப்ரல் மாதங்களில் மணிப்பூர் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை, செய்ரோபா பண்டிகையாகும். இப்பண்டிகையின்போது அனைத்துவீடுகளும் ஒளிதரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளிவெள்ளத்தில் நிறைந்திருக்கும். மக்கள் மனதில் ஆனந்தவெள்ளம் நிறைந்திருக்கும்.
மேலும் செய்ரோபா பண்டிகையின் போதுதான் மணிப்பூரி புத்தாண்டுவிழாவும் கொண்டாடப்படுகிறது. இதனால், இத்தருணத்தில் ஆனந்தம் இரட்டிப்பாகி, இப்பண்டிகையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
நாட்டின் இதர பகுதிகளில் கொண்டாடப்படும் ஹோலிப்பண்டிகையைப் போன்ற ஒரு பண்டிகையாக, யாவ்ஷாங்க் என்னும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 5 நாட்கள் தொடர்ச்சியாக பிஷ்ணுபூரில் உள்ள மணிப்பூரிகள், இந்த பண்டிகையை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
பிஷ்ணுபூரின் வரலாறு
பிஷ்ணுபூர் நகரமானது, எவ்வாறு மணிப்பூரின் கோவில் நகரமானது என்பது குறித்து ஏராளமான சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. இப்பகுதியை கி.பி 1467-ல் ஆட்சி செய்த கியாமா என்னும் அரசன் 'பாங்க் என்னு' இனத்தவரோடு நல்லுறவு வைத்திருந்தான்.
அவன் பாங்குகளுடைய உதவியுடன், ஷான் வம்ச நாடான 'கியாங்க் என்னு' நாட்டினைத்தாக்கி வெற்றிகொண்டான். இரண்டு அரசர்களும் சேர்ந்து கியாங்கை வெற்றிகொண்டதைப் பாராட்டி நினைவு கூரும் விதமாக பாங்க் மன்னன் கியாமா அரசனுக்கு மஹாவிஷ்ணுவின் சிலை ஒன்றைப் பரிசளித்தான்.
அந்த சிலையானது, லும்லாங்க்டாங்கிற்கு கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதிலிருந்து, இவ்வூர், பிஷ்ணுபூர் என்று அழைக்கப்படலாயிற்று ('விஷ்ணு' என்னும் சொல் இப்பகுதியில் 'பிஷ்ணு' என்று பயன்படுத்தப்படுகிறது). இக்காலகட்டத்தில்தான் விஷ்ணு வழிபாடு இங்கு பிரபலமாகத் தொடங்கியது.
பிஷ்ணுபூருக்கு வர ஏற்ற காலம்
சுற்றுலாப்பயணிகள் பிஷ்ணுபூருக்கு வருவதென்றால், அதற்கு ஏற்ற காலம், அக்டோபருக்கும், பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
அடையும் வழிகள்
சாலை, இரயில், வான்வழி ஆகிய மூன்று வழிகளிலும் பிஷ்ணுபூரை எளிதாக வந்தடையலாம்.