ராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்குப்பகுதியில் ஹடோதி பிரதேசத்தில் ஜாலாவார் அமைந்துள்ளது. முற்காலத்தில் இது ஹடா வம்சத்தின் ராஜ்ஜியமாகவும் அறியப்பட்டுள்ளது. 6928 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள ஜாலவார் மாவட்டமானது ‘கோட்டா டிவிஷன்’ பகுதியின் ஒரு அங்கமாகவும் அமைந்துள்ளது.
‘ஜாலாவார்’ அல்லது ‘பிரிஜ்நகர்’ என்று அழைக்கப்படும் நகரமே ஜாலாவார் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த மாவட்டத்தில் வடகிழக்கு எல்லையாக பரான் மாவட்டமும் தென்மேற்கு எல்லையாக கோட்டா மாவட்டமும் அமைந்துள்ளன.
வரலாற்றுப்பின்னணி
வரலாற்றுக்குறிப்புகளின்படி ஜாலாவார் நகரம் 1791ம் ஆண்டு ஜாலா ஜலீம் சிங் என்பவரல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவர் அப்போதைய கோட்டா சமஸ்தானத்தின் திவானாவார்.
மராத்தா தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான ஒரு படைக்கேந்திரத்தை அமைப்பது அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. பின்னாளில் ஆங்கிலேயர்கள் இந்நகரத்தை அவரது பேரனான ஜாலா மதன் சிங் என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர் ஜாலாவார் சமஸ்தானத்தின் முதல் அதிகாரபூர்வ மன்னராக 1838லிருந்து 1845 வரை ஆண்டுள்ளார்.
ஜாலாவாரின் விசேஷங்கள்
ஜாலாவார் நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய அம்சம் ஜாலாவார் கோட்டையாகும். இந்த கோட்டை ‘ கர் அரண்மனை’ என்றும் அழைக்கப்படுகிறது.
100 அடி உயரத்தில் சூரியக்கடவுளுக்காக எழுப்பப்பட்டிருக்கும் சூரியக்கோயிலையும் ஜாலாவார் நகரம் கொண்டுள்ளது. பயணிகள் இந்த கோயிலில் உள்ளே அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைக் காணலாம்.சந்திரபாகா ஆற்றின் கரையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஜாலாவார் நகரம் எல்லாத்திசைகளிலும் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருப்பது மற்றொரு விசேஷ அம்சமாகும்.
சந்திரபாகா ஆற்றங்கரையில் 6ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. கடந்து போன இந்திய வரலாற்றுக்காலத்தின் மஹோன்னத கட்டிடக்கலை அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. இவற்றில் பத்மநாத் கோயில், ஸ்ரீ துவார்கதீஷ் கோயில் மற்றும் ஷாந்திநாத் ஜெயின் கோயில் ஆகியவை மிகவும் பிரபலமானவையாகும்.
ஆர்வமுள்ள பயணிகள் புத்த குகைக்கோயில்கள் மற்றும் ஸ்தூபிகளுக்கு சென்று பார்க்கலாம். இவற்றில் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகள் காணப்படுவது அக்கால கலைஞர்களின் கலை நேர்த்தியை பிரதிபலிப்பதாக உள்ளது.
இவை தவிர, பீம்சாகர் அணை, உன்ஹேல் ஸ்வேதம்பர் நாகேஷ்வர் பர்ஷ்வநாத் ஜெயின் கோயில், மற்றும் அரசு அருங்காட்சியகம் போன்றவற்றுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் பழைய நாணயங்கள், கல்வெட்டு குறிப்புகள், புராதன சிலைகள் ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாஸ்கோவில் நடந்த ‘ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’ நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வர நடராஜர் சிலையும் இங்கு உள்ளது.
காக்ரோன் கோட்டை, அதிஷய் ஜெயின் கோயில்கள், தல்ஹான்பூர், மனோஹர் தானா கோட்டை மற்றும் கங்காதர் கோட்டை ஆகிய இதர சுவாரசியமான வரலாற்று ஆன்மீக அம்சங்களும் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
பயண வசதிகள்
ஜாலாவார் நகரத்தை விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். இங்கிருந்து 82கி.மீ தூரத்தில் கோட்டா விமான நிலையம் அமைந்துள்ளது.
இது பல முக்கிய இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளைக் கொண்டுள்ளது. ராம்கஞ்ச் மண்டி எனும் ரயில் நிலையம் ஜாலாவார் நகரத்துக்கு அருகில் உள்ள ரயில்நிலையமாகும்.
மேற்கண்ட விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் சுலபமாக டாக்சிகள் மற்றும் வேன்கள் மூலம் ஜாலாவார் நகரத்தை அடையலாம். அருகிலுள்ள நகரங்களான கோட்டா மற்றும் பூந்தியிலிருந்து தனியார் மற்றும் அரசுப் பேருந்து வசதிகளும் ஜாலாவார் நகரத்துக்கு உள்ளன.
பருவநிலை
கோடைக்காலத்தில் கடுமையான வெப்பம் நிலவுவதால் பயணிகள் இக்காலத்தை தவிர்ப்பது நல்லது. கோடையில் 27° C முதல் அதிகபட்சமாக 42° C வரை வெப்பநிலை நிலவுகிறது.
மழைக்காலத்தில் இப்பகுதியின் வெப்பநிலை வெகுவாக குறைந்து சராசரியாக 30° C வெப்பநிலை காணப்படுகிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை 10° C முதல் அதிகபட்சமாக 25° C வரை நிலவுகிறது.