சுமார் 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு அரிய பச்சை நிற வால் நட்சத்திரம் பூமியைக் கடந்து செல்கிறது. நாசாவின் கூற்றுப்படி, இந்த அரிய பச்சை வால் நட்சத்திரம் பிப்ரவரி 1 ஆம் தேதி புதன் கிழமை பூமியிலிருந்து சுமார் 26.4 மில்லியன் மைல் தொலைவில் பூமியை கடந்துச் செல்லும். ஏறத்தாழ 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றும் இந்த அபூர்வ பச்சை வால் நட்சத்திரத்தை பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 10 வரை நாம் பூமியில் இருந்தபடியே காணலாம். நள்ளிரவு நேரத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்த படியே சிறு பைனாகுலர் வைத்து இந்த பச்சை வால் நட்சத்திரத்தை பார்த்து ரசியுங்கள்!
நியாண்டர்தால் மனிதர்கள் பார்த்து ரசித்த அதே நட்சத்திரம்
50,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் காடுகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் வாழ்ந்த மனிதர்களை நியாண்டர்தால் என்று சொல்லுவார்கள். அப்பொழுது ஒரு முறை இதே நட்சத்திரம் பூமியை கடந்துச் சென்றதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்கள் பார்த்து ரசித்த அதே வால் நட்சத்திரம் மறுபடியும் இப்பொழுது நாம் இந்த புவியில் வாழும் போது பூமிக்கு அருகாமையில் வருகிறது. இதே நிகழ்வு மறுபடியும் நடக்க மீண்டும் 50,000 ஆண்டுகள் ஆகுமாம். இந்த அரிய வாய்ப்பை நாம் தவற விடலாமா மக்களே!
பூமிக்கு அருகே வரும் அரிய வகை நட்சத்திரம்
ஒவ்வொரு ஆண்டும் பல நூறு வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகே வருகின்றன. அவற்றில் சில மட்டுமே பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. பூமிக்கு அருகே வரும் போது போதுமான பிரகாசத்துடன் இருந்தால் மட்டுமே அதை வெறும் கண்களால் பார்க்க முடியும். பச்சை வால்மீன் எனப்படும் C/2022 E3 (ZTF) வால் நட்சத்திரம் என்ற அரிய வகையைச் சேர்ந்ததாகும். இதை நாம் வெறும் கண்களாலும், பைனாகுலர் கொண்டும் எளிதில் கண்டு ரசிக்கலாம்.
2022 இல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை வால் நட்சத்திரம்
பச்சை வால்மீன் மார்ச் 2, 2022 அன்று சான் டியாகோவில் உள்ள கால்டெக்கின் பாலோமர் ஆய்வகத்தில் ஸ்விக்கி நிலையற்ற வசதி தொலைநோக்கியைப் பயன்படுத்தி வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டறிந்த நாள் முதல், அதன் நகர்வின் துல்லியத்தையும், சுற்று வட்ட பாதையையும் ஆய்வு செய்து, இது 50000 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 12 அன்று சூரியனுக்கு மிக அருகில் வருவதையும், பிப்ரவரி 1 முதல் 10 ஆம் தேதி வரை அதனை நாம் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கண்டு ரசிக்க ஏற்பாடுகள்
தமிழ்நாட்டிலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் வரும் பிப்ரவரி 1 முதல் 10 ஆம் தேதி வரை அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணிக்குள் வடகிழக்கு வான் பகுதியில் துருவ நட்சத்திரத்திற்கு அருகே இந்த வால் நட்சத்திரத்தைக் காண முடியும். தமிழ்நாட்டில் விஞ்ஞான் பிரச்சார்- அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து பல்வேறு மாவட்டங்களில் தொலைநோக்கி மூலம் அதிகாலைப் பொழுதில் வால் நட்சத்திரங்களைக் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்தே கண்டு ரசிக்கலாம்
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வால்மீன் பூமிக்கு அருகே வந்துள்ளது. இது நள்ளிரவு நேரத்தில் வடமேற்குப் பகுதியில் துருவ நட்சத்திரம் அருகே காட்சி தரும். இதை வெறும் கண்களால் காணலாம். இந்த அபூர்வ வால்மீன் நேற்று நள்ளிரவு முதல் வானில் தென்படத் தொடங்கியுள்ளது. இது பிப்ரவரி 10 ஆம் தேதி வரை இந்த வால்மீன் தென்படும் என்பதால், அனைவரும் இதை கண்டுரசிக்க முடியும். நள்ளிரவு நேரத்தில் சிறு பைனாகுலர் உதவியுடன் வால்மீனைக் காணலாம்! இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் மக்களே!