நாம் சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றோம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது, எந்த வழியில் போகிறோம்? வழி பாதுகாப்பானதா? சரியான நேரத்தில் இலக்கை அடைந்து விடுவோமா? என்பது தான். ஆனால் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் பல புதிய விரைவு சாலைகள் இந்திய போக்குவரத்து வரைபடத்தில் இடம் பிடிக்கவுள்ளன. இந்த சாலைகளை பயன்படுத்தினால் நீங்கள் விரைவாக செல்வது மட்டுமின்றி, சாலைப் பயணமும் மிகவும் இனிமையானதாக இருக்கும் மக்களே! சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு இரண்டே மணி நேரத்தில் செல்வது முதல், அமிர்தரஸ் - ஜாம் நகர், லக்னோ - கான்பூர், டெல்லி - மும்பை என பல எக்ஸ்பிரஸ் காரிடார்கள் இந்த பட்டியலில் உள்ளன!
தங்கு தடை இல்லாத பயணம்
நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. விரைவுச் சாலை வழியாக சரியான இணைப்பைக் கொண்டிருப்பது பயணக் காலத்தைக் குறைக்கிறது. இந்த அதிவேக நெடுஞ்சாலைகளில் வேறு எந்த சாலையும் ஒன்றிணைக்கவோ அல்லது கடக்கவோ முடியாத ஒரு குறிப்பிட்ட இடத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்யசபாவில் தனது உரையில், இந்தியா முழுவதும் 1.47 லட்சம் கிமீ சாலை இணைப்பை அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக கூறினார்.
இந்தியாவில் வரவிருக்கும் புதிய விரைவுச் சாலைகள்
பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ்வே
புதிய கிரீன்ஃபீல்ட் திட்டமான பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை மார்ச் 2024க்குள் தயாராகிவிடும். ரூ. 17,000 கோடி செலவில் உருவாகும் இந்த சாலை கர்நாடகாவில் உள்ள மாலூர், கேஜிஎஃப், பங்கார்பேட் மற்றும் பெத்தமங்களா போன்ற நகரங்களை பெங்களூருடன் இணைக்கும். சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் 6 மணி நேர பயண நேரத்தை 2-3 மணிநேரமாக இது குறைக்கும்.

அகமதாபாத் தோலேரா எக்ஸ்பிரஸ்வே
11௦ கிமீ நீளத்தில் தயாராகும் இந்த அகமதாபாத் தோலேரா எக்ஸ்பிரஸ்வே கட்டுமானத்தில் உள்ள 4 லேன் சாலையாகும், இது சர்கேஜ் அருகே சர்தார் படேல் ரிங் ரோடு மற்றும் நவகத்தில் உள்ள தோலேரா சர்வதேச விமான நிலையம் வழியாக தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தை இணைக்கிறது. இந்த சாலை டிசம்பர் 2024 இல் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வருமாம்.

டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலை
டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலை 'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ் கட்டப்படும் 10 அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். 670 கிமீ நீளமுள்ள டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலை மூலம் ஆறு மணி நேரத்திற்குள் டெல்லியிலிருந்து கத்ராவை அடைய முடியும், இதனால் 730 கிமீ தூரம் சுமார் 590 கிமீ ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலை 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி, பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.

மும்பை டெல்லி விரைவுச்சாலை
சமீபத்திய அறிக்கைகளின்படி, குருகிராம் மற்றும் தௌசா (ஹரியானா மற்றும் ராஜஸ்தான்) இடையே டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் முதல் கட்டம் விரைவில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 210 கிமீ நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ்வேயின் மும்பை காரிடார் முதல் கட்டமாகும். இந்த பகுதியில் அனைத்து முக்கிய கட்டுமான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்கள் வழியாக செல்லும். இந்த 8-வழி விரைவுச் சாலை தற்போதைய 24 மணிநேர நேர பயணத்தை பாதியாக குறைத்து 12 மணிநேரமாக மாற்றுகிறது.

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை
கிரீன்ஃபீல்ட் காரிடார்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள 10 வழி பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை 275 பிப்ரவரி 2023 இறுதிக்குள் திறக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார். 117 கிமீ தூரம் உள்ள இந்த திட்டம் பெங்களூரு முதல் நிடகட்டா மற்றும் நிடகட்டா முதல் மைசூர் என இரண்டு பெட்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில், 52 கிமீ கிரீன்ஃபீல்டில் ஐந்து பைபாஸ்கள் உள்ளன, இது பெங்களூரில் போக்குவரத்துத் தடைகளைக் குறைக்கும் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் தொந்தரவு இல்லாத பயணத்தை உருவாக்கும்.

கொல்கத்தா எக்ஸ்பிரஸ்வே
வாரணாசி-ராஞ்சி-கொல்கத்தா 6 வழிச்சாலை 2027-ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நவம்பர் 08ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், ரூ.22,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தை 2026-27ஆம் நிதியாண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

பெங்களூரு-விஜயவாடா விரைவுச்சாலை
இந்த 343 கிமீ விரைவுச்சாலை பெங்களூரை விஜயவாடாவுடன் இணைக்கிறது, இதனால் பெங்களூருவில் இருந்து விரைவில் விஜயவாடாவை அடையலாம். அதே வேளையில் அனந்தபூர், கடப்பா, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள முக்கிய பொருளாதார முனைகளின் வழியாக செல்லும். இந்த விரைவுச் சாலை இந்த இரண்டு நகரங்களுக்கிடையேயான தூரத்தை 74 கிமீ குறைக்கும். 2026 நிதியாண்டில் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும் அதிவேக நெடுஞ்சாலை 2023 நிதியாண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கூறியவை மட்டுமின்றி புந்தேல்கண்ட், சென்னை துறைமுகம்-மதுரவாயல், துவாரகா, கங்கா விரைவுச்சாலை, டிரான்ஸ்-ஹரியானா எக்ஸ்பிரஸ்வே, லக்னோ-கான்பூர், மும்பை-நாக்பூர், பதான்கோட்-அஜ்மீர், ராய்ப்பூர்- விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் இடையேயும் விரைவுச் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் உங்களின் பயணம் மிகவும் எளிதாகும் தானே!



Click it and Unblock the Notifications






