ஒட்டுமொத்த உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக நம்மை வீட்டு நீங்கவில்லை போலும்! சீனாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் நான்கு ஒமிக்ரான் B 7 (Omicron BF.7 strain) பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிகவும் வீரியம் வாய்ந்ததது எனவும், அதனால் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆபத்தான போக்கை சீனா தொடர்ந்து கண்டு வருவதால், உலக சுகாதார அமைப்பு (WHO) நாட்டின் தற்போதைய கோவிட் -19 நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

10 லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் நேர வாய்ப்பு
இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவால்யுவேஷனின் (IHME)கணிப்பு படி, சீனாவில் 2023 ஆம் ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பூதாகாரமாக வெடித்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. சியாட்டிலிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு, ஏப்ரல் 2023 க்குள் நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் எகிரும் கொரோனா பாதிப்புகள்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி சென்டர் ஃபார் சிஸ்டம்ஸ் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (JHU CSSE) பகிர்ந்துள்ள தகவல் படி, சீனாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளிலும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் B 7
சீனாவை நடுங்கவைத்துக் ண்டிருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் நான்கு ஒமிக்ரான் B 7 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. குஜராத், ஒரிசா மற்றும் கேரள மாநிலங்களில் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஒமிக்ரான் B 7 என்பது கொரோனா ஒமிக்ரானில் இருந்து உருமாறிய வைரஸ் ஆகும். தடுப்பூசி போடப்படாதவர்கள், வயதான குடிமக்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மற்றும் குழந்தைகளை இந்த வைரஸ் தாக்கும் என கூறப்படுகிறது.

ஒமிக்ரான் B 7 இன் அறிகுறிகள்
சுவாசக் குழாயில் தொற்று, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தசை வலி, சோர்வு போன்ற கோவிட்-19 இன் முந்தைய பாதிப்புகளை போலவே அறிகுறிகள் உள்ளன. நிமோனியா என்பது வயதானவர்கள் அல்லது பலவீனமானவர்களிடம் காணப்படும் மற்றொரு அறிகுறியாகும்.

இந்தியாவில் 10 வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ்கள்
ஒமிக்ரான் B 7 மட்டுமல்லாமல் கொரோனா வைரஸின் 10 வெவ்வேறு வகையான வைரஸ்கள் இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரான், ஒமிக்ரான் B 7, டெல்டா, ஆல்பா, கொரோனா XE போன்றவை இந்த 10 வெவ்வேறு வகையான வைரஸ்களில் அடங்கும். வியாழன் அன்று, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் கோவிட்-19 நிலைமை மற்றும் அது தொடர்பான அம்சங்களை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க உள்ளார்.

முன்னெச்சரிக்கைகள்
முதல் மற்றும் முக்கிய முன்னெச்சரிக்கையாக கூறப்படுவது மக்கள் கூடும் நெரிசலான இடங்களுக்கு செல்லாதீர்கள். தடுப்பூசி மற்றும் பூஸ்டர் செலுத்திக் கொள்ளுங்கள். அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுங்கள், சானிடைசரை எப்பொழுதும் உபயோகப்படுத்துங்கள். வெளியே சென்று வந்தவுடன் குளித்து விடுவது நல்லது. அதோடு தேவையின்றி கவனக்குறைவாக வெளியில் இருக்கும் போது கண், மூக்கு ஆகியவற்றை தொடாதீர்கள். எல்லோரிடமும் இடைவெளி கடைப்பிடித்து பேசுங்கள்.

தமிழகத்தின் தற்போதைய நிலை
கடந்த சில நாட்களில் தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 10-க்கும் கீழே குறைந்துள்ளது. மேலும் பல நாடுகளில் கோவிட் -19 தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் இதனைக் கண்டு நாம் பீதியடைய தேவையில்லை என்று தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த பத்து நாட்களாக தினசரி வழக்குகள் 10-க்கும் குறைவாக உள்ளன, கடந்த 8 மாதங்களில் வைரஸால் எங்களுக்கு எந்த மரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது மிகவும் அவசியம் மக்களே!



Click it and Unblock the Notifications





