திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடந்து முடிந்தது. புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை தரிசிப்பதைக் காட்டிலும் வேறு எதுவும் விசேஷம் இருக்க முடியாது. இதனால் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளம் போல் மக்கள் கூட்டம் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளது. நீங்கள் இப்போது சுவாமி தரிசனம் செய்ய சென்றால் குறைந்தது 50 மணி நேரம் காத்திருக்க நேரிடும். ஆம்!
பிரமாண்ட நாயகனின் பிரமோற்சவம்
கடந்த இரு ஆண்டுகளாக கொரானா தொற்று காரணமாக கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடத்தப்பட்டு இருந்த வருடாந்திர பிரமோற்சவம் இந்த ஆண்டு பக்தர்கள் முன்னியிலையில் மிக ஆரவாரமாக தொடங்கி மிக கோலாகலமாக நடந்து முடிந்தது. திருவேங்கடமுடையானின் வருடாந்திர பிரமோற்சவத்தில் பல லட்சக் கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 9 நாட்களாக 18 விதமான விமானங்களில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ரத்து செய்யப்பட்ட சுவாமி தரிசனம்
திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கும் பொழுது சிறப்பு தரிசனம், சர்வ தரிசனம், சுபாதம் தரிசனம் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் இன்று, 3வது சனிக்கிழமை என்பதால், ஏழுமலையானை சர்வ தரிசன வழியாக சென்று தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
கடலென குவியும் மக்கள் கூட்டம்
பிரம்மோற்சவம் நிறைவடைந்த பிறகும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பக்தர்கள் நிறைந்த வண்ணம் உள்ளனர். இதனால் வியாழனன்று 30 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இன்று 3வது புரட்டாசி சனிக்கிழமை என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகமானது. இதனால், நேற்று மாலை நிலவரப்படி 48 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
பல கிமீ வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
இலவச தரிசனக்கான வரிசை சீலா தோரணம் வரை நீண்டு அதாவது 5 கிமீ தூரம் வரை நீண்டு உள்ளது. அவர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 40 மணிநேரம் வரை ஆகிறது. திருப்பதியில் அடிக்கடி லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குளிர் காற்று வீசுவதால் வரிசையில் காத்து இருக்கும் பெரியவர்களும் குழந்தைகளும் குளிரில் நடுங்கிக் கொண்டு காத்து கிடக்கின்றனர்.
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் தேவஸ்தானம்
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் தேவஸ்தான சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை விட அதிக கூட்டம் வந்தாலும் கூட அதை சமாளிக்கும் திறன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உள்ளது என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டில் புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று ஏழுமலையானை வழிபடும் வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைத்துள்ளது. எனவே இந்த ஆண்டில் புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்.
நீங்கள் இப்போது சர்வ தர்ஷன் வழியே சுவாமி தரிசனம் செய்ய எண்ணினால் அதை சற்று தள்ளிப் போடுவது நல்லது. புரட்டாசி மாதம் முடிந்த பின்னர், நீங்கள் உங்கள் பிரயாணத்தை துவங்கலாம்!