தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகராக விளங்கும் மதுரையில் சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்களும், தெரிந்துக் கொள்வதற்கு பல விஷயங்களும் உள்ளன. மதுரையில் விமானம், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து ஆகியவை மிக சீரான முறையில் இருந்தாலும், மெட்ரோ சேவை இன்னமும் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் அந்த குறை இப்போது தீர்ந்துவிட்டது. கூடிய விரைவில் நீங்கள் மதுரை மாநகரின் அழகை மெட்ரோவில் பயணம் செய்து ஆராயலாம். அதனைப் பற்றிய விரிவான தகவல்கள் இதோ!

சென்னையில் கலக்கி வரும் மெட்ரோ சேவை
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், நவீன மற்றும் சொகுசு போக்குவரத்து அம்சமாகவும் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இதனை பல்வேறு வழித்தடங்களில் விரிவுபடுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.
இரண்டாம் கட்ட பணிகள் தீவிரம்
இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரையில் மெட்ரோ
இந்நிலையில், சென்னையை தொடர்ந்து அடுத்ததாக மதுரையில்மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டரையும் அந்நிறுவனம் கோரியுள்ளது. ரூ. 3 கோடி மதிப்பில் மதுரை மெட்ரோ ரயிலுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக, 120 நாள்களில் மொத்த திட்ட பணிகளையும் முடித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்தக்கடை to திருமங்கலம் வரை
மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சுரங்கப்பாதை வழியாக செயல்படுத்தினால் ரூ.8 ஆயிரம் கோடியும், உயர்மட்ட பாலம் வழியாக செயல்படுத்தினால் ரூ.6 ஆயிரம் கோடியும் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. முன்னதாக நேற்று (பிப்.17 ) மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 20 மெட்ரோ ஸ்டேஷன்கள்
இந்த வழித்தடத்தில் திருமங்கலம், கப்பலூர் டோல் கேட், தர்மத்துபட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்த நகர், மதுரா காலேஜ், மதுரை ஜங்ஷன், சிம்மக்கல், கீழவாசல், தெற்கு வாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் ஆபீஸ், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஊத்தங்குடி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஒத்தக்கடை ஆகிய 20 ரயில் நிலையங்கள் அமைக்க ஆலோசித்து வருகின்றனர்.
தீவிர ஆலோசனைக்கு பிறகு கட்டுமானம் தொடங்கும்
இந்நிலையில், இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் வெளி வீதிகளின் வழியாக செல்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு வெளி வீதிகளின் வழியாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டுமான பணிகளால் பாரம்பரிய கட்டுமானங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களின் வழித்தடங்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த செய்தியை மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மக்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்!



Click it and Unblock the Notifications





