சென்னையின் 3 ஆவது பெரிய பேருந்து முனையமாக, தென் மாவட்ட பயணிகளுக்கு வசதியாக செல்லும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் மக்கள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஆம்! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகே ரயில்வே நிலையம் அல்லது மெட்ரோ இல்லாததால், பயணிகள் மிகவும் சிரமப்பட்டே இங்கு வருவதாக தெரிவித்துள்ளனர். எப்போது திறக்கப்படும் கிளாம்பாக்கம் ரயில் நிலையமும், மெட்ரோ நிலையமும்? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்!
தென் மாவட்ட பேருந்துகளுக்கான சிறப்பு பேருந்து நிலையம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டு இந்த பேருந்து முனையம் திறக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது.

புது பஸ் ஸ்டாண்ட்டினால் பயணிகள் அவதி
ஆனால், கோயம்பேடு போல அல்லாமல், கிளாம்பாக்கம் சென்னையில் இருந்து வெகுதூரத்தில் உள்ளதால், வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் இணைப்பு இல்லாததாலும், புறநகர் ரயிலில் நிறுத்தம் இல்லாததாலும் கிளாம்பாக்கம் வருவதற்கும் போவதற்கும் பஸ் அல்லது வாடகை கார், ஆட்டோக்களையே பயணிகள் நம்பி இருக்க வேண்டியுள்ளது.
பேருந்து நிலையத்தில் இருந்து தூரத்தில் உள்ள ரயில் நிலையங்கள்
கிளாம்பாக்கத்தில் பயணிகள் ஏறுவதற்கும் டி-போர்டிங் செய்வதற்கும் இணைப்பு விருப்பங்கள் குறைவாக உள்ளன மற்றும் அணுக முடியாதவையாக உள்ளன. கிளாம்பாக்கத்தை இணைக்கும் நெருங்கிய ரயில் நிலையங்கள் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ஆகும், இவை முறையே 2 மற்றும் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இருப்பினும், இந்த நிலையங்களுக்கு செல்ல, பயணிகள் ஆட்டோரிக்ஷாவில் செல்ல வேண்டும், டிரைவர்கள் ரூ.200 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகும் ரயில் நிலையம்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வண்டலூர்- ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது. பணிகள் தொடங்கி நடந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து, பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுதவிர, மழைநீர் கால்வாய் பணி காரணமாக, மேலும் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
மே 2025 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தை வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலமாக, தென் மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளில் வந்து இறங்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் ரயில் போக்குவரத்து வசதியை பூர்த்தி செய்யமுடியும். இதனால் கிளாம்பாக்கம் வந்து செல்லும் பயணிகள் பெரிதும் பலனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பாலம்
பேருந்து சேவைகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சாலைகளை விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. புறநகர் ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் பாலம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 16 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா அமைக்கவும் அரசு செயல்பட்டு வருகிறது.
விரைவில் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ
அதேபோல, பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.4,625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது!



Click it and Unblock the Notifications






