நம்மில் பலர் சற்று யோசித்தாலும், பெரும்பான்மையான இளசுகளும், சாகசப் பிரியர்களும் பாராகிளைடிங், ரிவர் ராஃப்டிங், ட்ரெக்கிங், பஞ்சி ஜம்பிங் மற்றும் நீர் விளையாட்டுகளில் மிகவும் ஆர்வம் செலுத்துவது உண்டு. அவர்கள் தான் அட்ரினலின் ஜங்கிகள்!
அவர்களுக்கு இது மாதிரியான த்ரில் நிறைந்த செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஆம்! இது அவர்களுக்கான குட் நியூஸ்!
பாராகிளைடிங், ராஃப்டிங் மற்றும் இதே போன்ற சாகச நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் விதிக்கப்படும் தடையை இப்போது ஹிமாச்சல் அரசு நீக்கியுள்ளது.
இதன் அர்த்தம் என்னவென்றால், இனி நீங்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபட ஹிமாச்சலுக்கு பயணிக்கலாம்!
ஒவ்வொரு ஆண்டும், ஹிமாச்சல பிரதேச அரசு, இமாச்சல பிரதேச ஏரோ ஸ்போர்ட்ஸ் விதிகள் 2004, மற்றும் இமாச்சல பிரதேச இதர சாகச நடவடிக்கைகள்2017 ஆகியவற்றின் கீழ் ஜூலை முதல் செப்டம்பர் பாதி நாட்கள் வரை பாராகிளைடிங் மற்றும் பிற சாகச நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கிறது. ஆனால் இப்போது பருவமழை முடிந்துவிட்டதால் இந்த நடவடிக்கைகள் மீதான தடை நீக்கப்பட்டது. இதன் மூலம் சாகச சுற்றுலாப் பயணிகள் ஹிமாச்சல் நோக்கி படையெடுக்கப் போகிறார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஆம்! செல்லுபடியாகும் உரிமம் மற்றும் உபகரணங்களை கொண்ட ஆபரேட்டர்கள் இந்த நடவடிக்கைகளை மாநிலத்தில் மீண்டும் தொடங்கலாம் என்று குலுவின் சுற்றுலா மேம்பாட்டு அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இருப்பினும், மறு அறிவிப்பு வரும் வரை ஹிமாச்சலில் உயரமான பகுதிகளில் ட்ரெக்கிங் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக, 15,000 அடிக்கு மேல் உள்ள சிகரங்களில் ட்ரெக்கிங் செய்வதை மாநிலம் தடை செய்தது.
மலையேற்றத்தைப் பொறுத்த வரையில், உயர் சிகரங்கள் ஏற்கனவே பனிப்பொழிவை அனுபவிக்கத் தொடங்கியுள்ளதாலும், வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுவதாலும், மறு அறிவிப்பு வரும் வரை மாநிலத்தில் ட்ரெக்கிங் செய்வது மட்டும் தடைசெய்யப்பட்டிருக்கும்.
இதற்கிடையில், ஹிமாச்சல பிரதேசத்தில் நீங்கள் நிச்சயமாக பாராகிளைடிங் மற்றும் ரிவர் ராஃப்டிங்கில் ஈடுபடலாம். மாநிலத்தின் சில சிறந்த பாராகிளைடிங்கில் ஈடுபட மணாலிக்கு அருகிலுள்ள சோலாங் பள்ளத்தாக்கு மற்றும் பிலாஸ்பூருக்கு அருகிலுள்ள
பந்த்லா தாருக்கு செல்லுங்கள். சிறந்த ரிவர் ராஃப்டிங்கில் ஈடுபட குலு, மணாலி, சிம்லா மற்றும் மெக்லியோட் கஞ்சிற்கு செல்லுங்கள்.
இந்த சாகச விளையாட்டுகளை மீண்டும் தொடங்குவது இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உதவும் என்று நம்புகின்றனர். அப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்களும், பாராகிளைடிங் மற்றும் ரிவர் ராஃப்டிங் ஆபரேட்டர்களும், ஏன் உள்ளூர் மக்களும் இந்த தகவல் மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஹிமாச்சலத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் இந்த சாகச நடவடிக்கைளையே சார்ந்து இருக்கிறது. ஆகவே இனி ஹிமாச்சலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கலாம்!