'கடவுள்கள் வாழும் பூமி' என்றும் 'தேவபூமி' என்றும் சிறப்பித்து போற்றப்படும் ஹிமாச்சல பிரதேசம் பசுமையான பள்ளத்தாக்குகள், கிறங்கடிக்கும் வெண்பனிச் சிகரங்கள், மனம் மயக்கும் ஏரிகள், பசும் புல் நிலங்கள் ஆகியவை புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த எழில் கொஞ்சும் மாநிலம் கிழக்கே திபெத் நாட்டையும், மேற்கே பஞ்சாபையும், வடக்கே காஷ்மீரையும் தன் எல்லைகளாக கொண்டுள்ளது.
இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உலகம் முழுவதிமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வேகமாக வளர்ந்து வரும் ஹிமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை நாட்டிற்கு பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தருகிறது. அதோடு பயணிகளின் கூட்டம் பெருகப் பெருகப் அதற்கு ஏற்றார் போல ஹிமாச்சலத்தில் ஹோட்டல்களின் எண்ணிகையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
வானிலை
ஹிமாச்சல பிரதேசத்தில் பொதுவாக ஆண்டுதோறும் வசந்த காலம், மழைக் காலம், பனிக் காலம் ஆகிய மூன்று பருவங்கள் காணப்படுகின்றன. இதில் வசந்த காலம் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து ஏப்ரல் மத்தியில் முடிவடையும். அதேபோல அக்டோபரில் தொடங்கி மார்ச்சில் முடியும் பனிக் காலங்கள் ஹிமாச்சல பிரதேசத்தை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற பருவமாகும்.
மொழிகள்
ஹிமாச்சல பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி இருந்தாலும், 'பஹாரி' என்ற மொழியே அதிக மக்களால் பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பஹாரியின் கிளை மொழிகளான மண்டியாலி, குலவி, கெஹ்லூரி, ஹிந்தூரி, சமேலி, சீர்மெளரி, மியாஹஸ்வி, பாங்வாலி போன்றவை முறையே மண்டி, குலு, பிலாஸ்பூர், நலக்ராஹ், சம்பா, சீர்மௌர், மஹாஸு, பாங்கி உள்ளிட்ட பழங்குடி மக்களால் பேசப்படுகின்றன.
இவைதவிர பஹாரியின் மற்ற கிளை மொழிகளாக கருதப்படும் கின்னாரி, லாஹௌலி, ஸ்பிதியான் போன்ற மொழிகளும் இப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
அதோடு ஹிமாச்சலத்தின் ஒரு சில பகுதிகளில் பஞ்சாபி, டோக்ரி, காங்க்ரி, குஜராத்தி ஆகிய மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. மேலும் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த பஹாரி மொழியும், அதன் கிளை மொழிகளும் முகாலய காலத்தில் பெர்சிய எழுத்துருக்களை பின்பற்றினாலும் தற்போது தேவநாகிரி எழுத்துப் பிரதிகளிலேயே எழுதப்படுகின்றன.
ஹிமாச்சல பிரதேச சுற்றுலா
ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 12 மாவட்டங்களில் டிரெக்கிங் பகுதிகள், மீன்பிடி பகுதிகள், படகுப் பயணம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், கோல்ஃப் என்று எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன.இம்மாநிலத்தின் பீர், மணாலி, பிலாஸ்பூர், ரொஹ்ரு உள்ளிட்ட பகுதிகள் பாராகிளைடிங் போன்ற வான சாகச விளையாட்டுக்களுக்காக வெகுப்பிரபலம்.
ஹிமாச்சல பிரதேசத்தின் சுற்றுலாத் துறை மாநிலத்தை நான்கு வெவ்வேறு பகுதிகளாக பிரித்துள்ளது. அவை சட்லெஜ் செர்க்யூட், பீஸ் செர்க்யூட் , தௌலாதர் செர்க்யூட் மற்றும் டிரைபல் செர்க்யூட் என்று அறியப்படுகின்றன.
இதில் பீஸ் செர்க்யூட்டில் குலு மணாலி பள்ளத்தாக்கின் வழி பாயும் பீஸ் நதி மிகவும் பிரபலமான சுற்றுலாப் பகுதியாகும். இந்த பீஸ் செர்க்யூட்டில் தேவதாரு மரங்கள், பாறை சரிவுகள், பசும் புல்வெளிகள், வண்ண மலர்கள், பழத்தோட்டங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் நீங்கள் ஒரு நிமிட நேரம் அமர்ந்திருந்தாலே போதும் உங்கள் பிறவிக் கடனை அடைந்து விடுவீர்கள்.
அதோடு தொன்மை வாய்ந்த கலாச்சார பாரம்பரிய பின்னணியில் அழகிய மடாலயங்கள், பனிமலைகள், பனிக்கட்டிப்பாளம், உறைந்த ஏரிகள் என்று சாகசப் பிரியர்களின் விருப்பமான பகுதியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது டிரைபல் செர்க்யூட்.
தௌலாதர் செர்க்யூட் டல்ஹௌசியில் தொடங்கி பத்ரிநாத்தில் முடிகிறது. இந்த செர்க்யூட்டை காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து தெளிவாக பார்த்து ரசிக்கலாம்.
மேலும் புகழ்பெற்ற சட்லெஜ் நதி பாயும் சட்லெஜ் செர்க்யூட் ஆப்பிள் தோட்டங்கள், தேவதாரு மரங்கள் சூழ்ந்திருக்க கவின் கொஞ்சும் ஷிவாலிக் மலையின் பின்னணியில் சுற்றுலாப் பயணிகளின் உள்ளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
ஹிமாச்சல பிரதேசம் 'கடவுள்கள் வாழும் பூமி' எனும் சிறப்புப் பெயருக்கு ஏற்றார் போல் ஜ்வாலமுகி கோயில், சாமுண்டா தேவி கோயில், ப்ரஜ்ஜேஸ்வரி கோயில், பைஜிநாத், லக்ஷ்மிநாராயணன், சௌராசி உள்ளிட்ட ஏராளமான ஆலயங்களை கொண்டிருக்கிறது.
இவைதவிர எண்ணற்ற குருத்வாராக்களும், கிறிஸ்ட் சர்ச் கசௌலி, கிறிஸ்ட் சர்ச் கசௌலி சிம்லா, செயின்ட் ஜான்ஸ் சர்ச் போன்ற தேவாலயங்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
மேலும் பௌண்டா சாஹிப், ரெவல்சார் மற்றும் மணிகரன் ஆகிய பகுதிகள் முக்கியமான சீக்கிய யாத்ரீக மையங்களாக அறியப்படுகின்றன.
ஹிமாச்சல பிரதேசத்தை தேடி வரும் இயற்கை காதலர்களை வரவேற்க தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க், தி பின் வேல்லி நேஷனல் பார்க், தி ரேணுகா சரணாலயம், தி போங் அணை சரணாலயம், தி கோபால்பூர் ஜூ, குஃப்ரி போன்ற பகுதிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
அதோடு தொல்பொருள் மற்றும் பாரம்பரிய அற்புதங்களின் மீது ஆர்வமுள்ள வரலாற்றுப் பிரியர்கள் காங்க்ரா கோட்டை, ஜுப்பால அரண்மனை, நக்கர் கோட்டை, கம்ரு கோட்டை, கோண்ட்லா கோட்டை, கிறிஸ்ட் சர்ச், சேப்ஸ்லீ, தி வுட் வில்லா பேலஸ், தி சைல் பேலஸ் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம்.
ஹிமாச்சல பிரதேசத்தில் அரசர் காலத்து அழகிய கலை வடிவங்களை எடுத்துக்காட்டும் விதமாக எண்ணற்ற அருங்காட்சியகங்களும், கலைக் கூடங்களும் உள்ளன.
அவற்றில் ஸ்டேட் மியூசியம், காங்க்ரா ஆர்ட் கேலரி, பூரி சிங் மியூசியம், ரோயரிச் ஆர்ட் கேலரி, ஷோபா சிங் ஆர்ட் கேலரி ஆகியவை முக்கியமானவை.
மேலும் பிரஷார் ஏரி, கஜ்ஜார் ஏரி, ரேணுகா ஏரி, கோபிந்த்சாகர் ஏரி, தால் ஏரி, பாண்டோஹ் அணை, மணிமகேஷ் ஏரி, பிருகு ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் மாலைப் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
ஹிமாச்சல பிரதேசம் சிவராத்திரி, லடர்ச்சா திருவிழா, மிஞ்சார் திருவிழா, மணிமகேஷ் திருவிழா, புலேக் திருவிழா, குலு தசரா லாவி திருவிழா, ரேணுகா மற்றும் பனிச்சறுக்கு திருவிழா ஆகியவற்றுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.