இந்த புயல் வருமா வராதா என்று கேலி செய்த நம்மை, நன்றாகவே மிதக்கவிட்டுவிட்டது இந்த ஃபெஞ்சல் புயல்! இன்னும் இந்த புயல் தாக்கத்தில் இருந்தே புதுவை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மீண்டு வரவில்லை. ஆனால், அதற்குள் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால், தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பொழியுமாம்!

அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலின் மேற்கு வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது. அப்படி நகரும் பட்சத்தில் வரும் 12 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு-இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் மேல் வளிமண்டல சுழற்சி
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இது, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த வாரம் வியாழக்கிழமை இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வரக்கூடிய பாதிப்புகள் என்ன
டிசம்பர் 7 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு
சென்னை இந்த முறையும் தப்பிக்குமா?
டிசம்பர் 7 - 9 தேதிகளில் சென்னையில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர சென்னைக்கு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?
மேலும் சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை எதுவும் கொடுக்கப்படவில்லை, வங்கக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரை டிசம்பர் 7 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இருப்பினும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல்கள் எதுவும் இன்னமும் வழங்கப்படவில்லை!



Click it and Unblock the Notifications






