ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT) தற்போது மறுவடிவமைப்புக்கான பரிசீலனையில் உள்ளது, மேலும் இது ஒரு பெரிய பொது பூங்காவாக மாற்றப்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள கிளம்பாக்கம் மற்றும் திருமழிசை ஆகிய இடங்களில் புதிய வசதிகளுக்குப் பேருந்துகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருவதால், இந்த முன்மொழிவு வந்துள்ளது. இதற்கு சில முக்கிய காரணங்களும் உண்டு என்று கூறப்படுகிறது!
காலியாக கிடக்கப்போகும் CMBT
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் டெர்மினஸுக்கு ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளன. பெங்களூரு, ஓசூர், வேலூர் மற்றும் பிற நகரங்களுக்கான மீதமுள்ள சேவைகள் விரைவில் திருமழிசை முனையத்திற்கு மாற்றப்படும், இது இன்னும் கட்டுமானத்தில் உள்ளது. இப்படி எல்லா சேவைகளும் தனித்தனியே பிரித்து விடப்படும் சூழலில் CMBT இருந்த இடம் காலியாகும் பட்சத்தில் உள்ளது. இந்த இடத்தில் ஷாப்பிங் மால், தியேட்டர் போன்ற காரியங்களுக்கு கொடுக்காமல், மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகித்தால் நன்றாக இருக்கும் தானே.
களத்தில் இறங்கிய பா.ம.க கட்சி
கோயம்பேடு பேருந்து நிலையத்தை (சிஎம்பிடி) பூங்காவாக மாற்ற வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பெரிய பூங்காக்கள் உதவும் என்று கூறினார். நியூயார்க், டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் மிகப்பெரிய பூங்காக்கள் இருப்பதாகக் கூறிய அன்புமணி, சென்னையில் உள்ள 850 பூங்காக்களில் 5 பூங்காக்கள் மட்டுமே 10 ஏக்கரை விட பெரியவை என்று சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றத்திற்கு இயற்கையை பேணிக் காப்பது அவசியம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு விழாவை அடுத்து கோயம்பேட்டில் பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி 10 லட்சம் கையெழுத்து பெறுவோம். காலநிலை மாற்றம் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இப்போது நாம் காலநிலை நெருக்கடி பற்றி பேசுகிறோம். காலநிலை பேரழிவுகள் மற்றும் காலநிலை அவசரநிலை பற்றி பேசுவோம். காலநிலை அவசரநிலை ஏற்பட்டால், மனிதர்கள் உயிர்வாழ முடியாது, ஆதலால் CMBT இருக்கிற இடத்தில் மரங்கள், செடிகள், தாவரங்கள் அமைத்து பூங்கா உருவாக்குவது சிறந்த முடிவாக இருக்கும் என கூறப்படுகிறது.
மக்களின் நலனிற்கும் இது உதவும்
கோயம்பேடு பேருந்து நிலையம் ஏரியின் மீது கட்டப்பட்டது. மேலும், சென்னையில் 75 சதவீத இறப்புகள் உடல் பருமன், இருதய நோய்கள் மற்றும் மனநலக் கோளாறுகளால் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த நடைபயிற்சி மற்றும் உடல் பயிற்சிகள் முக்கியம். கடந்த 30 ஆண்டுகளில், நகரில் திறந்தவெளிகள் 21 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னையின் மையத்தில் இப்படி ஒரு பெரிய பூங்கா உருவாக்குவது மக்களின் உடல்நலத்திற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

37 ஏக்கர் பரப்பளவில் பெரிய பொது பூங்கா
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) 37 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது. நிலத்தின் சிறந்த பயன்பாட்டை ஆய்வு செய்ய ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறந்தவெளி ரிசர்வ் (OSR) விதிமுறைகளின்படி, நிலத்தின் ஒரு பகுதி பூங்காவிற்கு பயன்படுத்தப்படும் என்று CMDA உறுதிப்படுத்தியுள்ளது. இறுதித் திட்டத்தைப் பொறுத்து பூங்காவின் அளவு விரிவாக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்ப்பு
பூங்காவிற்குள் யோகா மையம் போன்ற கூடுதல் வசதிகளைச் சேர்க்க பரிந்துரைகள் உள்ளன, இது பொதுமக்களுக்கான அதன் பயன்பாட்டை மேம்படுத்தலாம். மறுவடிவமைப்புத் திட்டம் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, ஆனால் பூங்காவிற்கான உந்துதல் சென்னையில் அதிக பசுமையான இடங்களுக்கான பரந்த பொது விருப்பத்தை பிரதிபலிக்கிறது. சிஎம்டிஏ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, பொதுமக்களின் கருத்தைப் பரிசீலித்த பிறகு தனது திட்டங்களை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





