இந்தியாவின் அரை அதிவேக ரயிலான வந்தே பாரத் சேவை நாட்டின் முக்கிய நகரங்களை வேகமாக அடைய உதவுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சென்னை-நெல்லை, சென்னை-மைசூரு மற்றும் கோவை-பெங்களூரு வந்தே பாரத் சேவைகள் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது மதுரை-பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் சேவை விரைவில் துவங்கப்படவிருக்கிறது! அதுவும் வெறும் 5:30 மணி நேரத்தில் மதுரையிலிருந்து பெங்களூருவை அடைந்திடலாம்!
நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்
தினமும் மதுரையிலிருந்து ஐடி தலைநகரான பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து மதுரைக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். கோவைக்கு வந்தே பாரத் துவங்கும் போதே மதுரைக்கும் இயக்கும்படி பல கோரிக்கைகைள் எழுந்தன. அதன்படி இப்போது மதுரைக்கும் பெங்களூருவிற்கும் இடையே வந்தே பாரத் சேவை துவங்கப்படவுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள் பெரிதும் சந்தோஷமடைந்துள்ளனர்.

குறையும் பயண நேரம்
மற்ற ரயில்கள் 435 கிமீ மதுரை-பெங்களூரு தூரத்தை கடக்க 7 மணிநேரம் எடுக்கும் போது, வந்தே பாரத் 6 அல்லது 5.30 மணி நேரத்தில் கடந்து செல்லும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. பயணிகளுக்கு வந்தே பாரத் அறிமுகம் ஒரு வரப்பிரசாதம். இது இரவு நேர ரயில்களுக்கான தேவையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தென் பகுதிக்கு விரைவான இணைப்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரத்தில் 6 நாட்களும் இயங்கும்
இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். மேலும், இது பகல் நேர ரயில் என்பதால், முதலில் எட்டு பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என்றும், பின்னர் தேவைக்கேற்ப பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் இயங்கும் வந்தே பாரத் சேவைகள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு திருப்பூர் வழியாக கோவைக்கும், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி மதுரை வழியாக திருநெல்வேலிக்கும் தெற்கு ரயில்வே சார்பில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு மத்திய ரயில்வே சார்பில் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு திருப்பதி வழியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
டிக்கெட் கட்டண விபரம் மதுரையிலிருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலில் நாற்காலி இருக்கைக்கு ரூ.1,665 கட்டணமாகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் இருக்கைக்கு ரூ.3,005 கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் சேவையை விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.



Click it and Unblock the Notifications





