சீசன் நேரங்களில் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கின்றன. உள்ளூர் மக்களும் கூட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமலும், வீட்டுக்கு செல்ல முடியாமலும் அவஸ்தைப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலக்கை அடையும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கொடைக்கானல் செல்வதற்கு மாற்று வழி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!
கொடைக்கானலுக்கு வருகை தரும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள்
மலைகளின் இளவரசி என செல்லமாக அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் மிக அழகான மலை வாசஸ்தலமாக விளங்கி வருகிறது. ஏராளமான அருவிகள், அழகிய ஏரிகள், பள்ளத்தாக்குகள், பைன் மர காடுகளுடன், வருடம் தோறும் குளிர்ச்சியான கால நிலை நிலவுதாலும் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் மக்கள்
ஆனால், கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. வார இறுதி விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரிப்பதால் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு வரும் சுற்றுலா பயணிகள் வரிசை கட்டி நிற்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு பல மணி நேரம் வீணாகி ஒரு சில இடங்களை மட்டும் பாரத்து விட்டு திரும்பி செல்லும் சுழல் உள்ளது.
கொடைக்கானலில் புதிய ஒரு வழிப்பதை திட்டம் அறிமுகம்
அதனால், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய ஒரு வழிப்பதை திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொடைக்கானலுக்கு வரும் டூரிஸ்ட் வாகனங்கள் அனைத்தும் கோக்கர்ஸ் வாக் வழியாக, பாம்பார்புரம் சாலை, தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் வழியாக வெளியேறி, அப்சர்வேட்டரி சாலை வழியாக கொடைக்கானல் ஏரி பகுதியை அடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
கோக்கர்ஸ் வாக் வழியாக கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும்
போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்து வந்ததால், இதில் மாற்றம் செய்வது குறித்து போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் தான், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் செப்டம்பர் 28 முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் கோக்கர்ஸ் வாக் வழியாக, பாம்பார்புரம் சாலை, தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் வழியாக வெளியேறி, அப்சர்வேட்டரி சாலை வழியாக கொடைக்கானல் ஏரி பகுதிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா இடங்களுக்கு பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது

கூடிய சீக்கிரம் புதிய பாதை அமைக்கப்படுமா?
ஆனால், இது தற்காலிக மாற்றம் மட்டுமே. கொடைக்கானலுக்கு புதிய சாலை அமைத்து தருவதே சிறந்த வழியாக இருக்குமென்று உள்ளூர் வாசிகளும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேற்று மலைப்பாதையில் நடந்து வரும் ஆய்வு பணிகளை பார்வையிட்டார்



Click it and Unblock the Notifications






