சபரிமலை ஐயப்பன் கோயில் வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15 வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாக திறக்கப்பட்டது. இந்த சீசனில் மட்டும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சபரிமலைக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களும் சபரிமலைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏற்ற வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தென்னக ரயில்வே!

கோலாகலமாக திறக்கப்பட்ட ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15 ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேல்சாந்தி மகேஷ்நம்பூதரி நடையை திறந்து விளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு கோயிலை வலம் வந்து 18 படிகள் வழியாக கீழே இறங்கி ஆழிக்குண்டத்தில் நெருப்பை வளர்த்தார். அங்கே கூடியிருந்தவர்கள் சுவாமி சரணம் சொல்லி கோஷமிட்டனர்.
டிசம்பர் 26 - மண்டல பூஜை, ஜனவரி 14 - மகர விளக்கு
முதல் நாளிலேயே சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் முகாமிட்டுள்ளனர்.நவம்பர் 16 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடுகள் விமர்சையாக துவங்கி நடைபெற உள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை திருவாங்கூர் தேவசம்போர்டும் கேரள அரசும் சிறப்பாக செய்து வருகிறது.

சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர பூஜைகள் நடப்பு ஆண்டிற்காக தொடங்கப்படும் நிலையில், சபரிமலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக சென்னை முதல் கொல்லம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுமென தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே சிறப்பு ரயில்
அதன்படி, நவம்பர் 19, 26, டிசம்பர் 3,10,17,24 ,31, ஜனவரி 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11:20 மணிக்கு கிளம்பும் 06111 என்ற எண் கொண்ட ரயில், அடுத்த நாள் மதியம் 2:30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் நவம்பர் 20, 27, டிசம்பர் 4,11,18, 25, ஜனவரி 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து மாலை 4:20 மணிக்கு கிளம்பும் 06112 என்ற எண் கொண்ட ரயில், மறுநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 11:35 மணிக்கு வந்தடைகிறது.
எந்தெந்த இடங்களில் நின்று செல்லும்
இருமார்க்கமாகவும் தலா 9 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு திருப்பூர், போத்தனூர், பாலக்காடு உள்பட பல்வேறு நிலையங்களில் நின்று செல்லும். இதுதவிர, சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்களும், ஒரு ஏசி கரீப்ராத் வாராந்திர சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளன.

தெற்கு அறிவித்துள்ள பிற சேவைகள்- ஹைதராபாத்-கோட்டயம் சிறப்பு ரயில்
ரயில் எண் 07137/07138 ஹைதராபாத்-கோட்டயம் ஸ்பெஷல் ரயில் நவம்பர் 15, 22, 29 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் இருந்து மதியம் 12:05 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 6:45 மணி அளவில் கோட்டயம் சென்றடைகிறது. மறு மார்க்கமாக, நவம்பர் 16, 23, 30 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 9:45 மணிக்கு புற்பபட்டு அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி அளவில், செகந்திராபாத் சென்றடைகிறது.
இந்த ரயில், மாலா அலி, சேரப்பள்ளி, நல்கொண்டா, மிரியலிகோடா, நடிகுடே, பிடுகுராலா, குண்டூர், தெனாலி, சிரளா, நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திரிசூர், ஆலுவா, எர்னாகுளம் வழியாக கோட்டயம் சென்றடைகிறது.
நந்தட்-கொல்லம் சிறப்பு ரயில்
ரயில் எண் 07319, நவம்பர் 16 மகாராஷ்டிரா நந்தட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் தாமாபாத், பாசார், நிசாமாபாத், அகநாபாட், பெலாரம், செகந்திராபாத், லிங்கம்பள்ளி, தந்தூர், சேதாம், யாக்திர், கிருஷ்ணா, மந்த்ராலயம், கூட்டி, எரகுண்டா, கடப்பா, ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிசூர், ஆலுவா, எர்னாகுளம், கோட்டயம், திருவல்லா, காயங்குளம் வழியே கொல்லம் சென்றடைகிறது. மறு மார்க்கமாக நவம்பர் 18 ஆம் தேதி கொல்லத்தில் இருந்து கிளம்பும் ரயில் செகந்திராபாத் சென்றடைகிறது.



Click it and Unblock the Notifications






