தமிழகத்தை விட்டு மழை இன்னும் போவதாய் தெரியவில்லை - சென்னையை புரட்டி போட்ட மழையிலிருந்து மீள்வதற்குள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை மழை கலங்கடிக்க வைத்துள்ளது! ஏராளமான மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். நிவாரண நடவடிக்கைகள் நடந்து வருகின்றன, ஆனால் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை தொடர்பான அனைத்து சமீபத்திய மற்றும் முக்கியமான அறிவிப்புகள் இங்கே!
அதிகபட்சமாக 95 செ.மீ மழை
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடுமையான காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதை அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தூத்துக்குடி திருச்செந்தூரில் 69 செ.மீ. தொடர்ந்து திருநெல்வேலியில் 61 செ.மீ., தென்காசியில் 51 செ.மீ., கன்னியாகுமரியில் 31 செ.மீ., விருதுநகரில் 20 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல சுழற்சியால் வெள்ளம்
பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தென் இலங்கைக் கடற்கரையில் சூறாவளி சுழற்சியானது இப்போது கொமோரின் பகுதி மற்றும் அண்டைப் பகுதியில் உள்ளது. அதன் தாக்கத்தால், தென் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி, தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் 7,500 பேர்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த தொடர் மழை மற்றும் கடும் வெள்ளம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, 7,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண மையங்களுக்குச் சென்றுள்ளனர்.
தவிக்கும் பொதுமக்கள்
கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் மின்சாரம் மற்றும் செல்போன் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. தென் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரிகள் உடைப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சிக்கிக்கொண்ட ரயில் பயணிகள்
ஸ்ரீவைகுண்டத்தில் விரைவு ரயிலில் சுமார் 800 பயணிகள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 300 பயணிகள் நான்கு அரசுப் பேருந்துகள் மற்றும் இரண்டு மினிவேன்கள் மூலம் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண வசதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, வழியில் பாலம் நிரம்பி வழிவதால் மீதமுள்ள 500 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியவில்லை.
ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர் மதுரையில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுமார் இரண்டு டன் நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு ஹெலிகாப்டர் சூலூரில் இருந்து புறப்பட்டது, ஆனால் அது செல்லும் இலக்கை அடைய முடியவில்லை. எனவே, மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நிவாரணப் பொருட்கள் வரும் புதன்கிழமை வழங்கப்பட உள்ளது.
பாதிப்படைந்த தென்மாவட்டங்கள்
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பகுதிகளுக்கான சாலைகள் நீரில் மூழ்கி, நுழைவு துண்டிக்கப்பட்டுள்ளன. நீர்மட்டமும் உயர்ந்து மக்களின் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. தற்போது தென்னக ரயில்வேயின் பொறியியல் பிரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்த நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆலோசனை நடத்தும் ஆளுநர்
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிலவரங்களை ஆய்வு செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை ராஜ்பவனில் மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை முதல்வர் நேரில் ஆய்வு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிச., 18ல் டில்லி சென்றடைந்தார்.அங்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன நிவாரணம் வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கிறார். இதற்கிடையில் நாளை தென் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திட உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டு உரியன செய்ய அரசு உறுதியளிக்கும் என்று கூறியுள்ளார்!



Click it and Unblock the Notifications





