பிப்ரவரி 26, 2025 இல் நிகழும் மஹா சிவராத்திரிக்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் பிரபல சிவன் கோயில்களில் ஏற்கனவே துவங்கிவிட்டன. 2025 ஆம் ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி ரத யாத்திரை துவங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க 60 நாட்களில் 30,000 கிமீ பயணம் திட்டமிடப்பட்டு ஒவ்வொரு நகரமாக உலா வந்து கொண்டிருக்கிறது. மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் ஜனவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறகிறது. திருச்சி மக்களே, இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு ஆதியோகியின் ஆசீர்வாதம் பெற மறக்காதீர்கள்!

3 மாநிலங்கள் 6 ஆதியோகி தேர்கள்
சுமார் இரண்டு மாத காலமாக நடைபெற்று கொண்டிருக்கும் ஆதியோகி ரத யாத்திரை சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் யாத்திரை முடித்து தற்போது திருச்சி மாநகரை அடைந்துள்ளது. 3 மாநிலங்களிலிருந்து 6 ஆதியோகி தேர்களுடன் வெள்ளியங்கிரிக்கு பக்தர்கள் பாத யாத்திரை எனும் தலைப்பில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து 6 ஆதியோகி தேர்களுடன் கோவை வெள்ளியங்கிரியை நோக்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரவுள்ளனர்.
கோவைக்கு வர முடியாத பக்தர்களின் நலனுக்காக
ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் ஆதியோகி
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஆதியோகி ரதம் இம்மாதம் 22 முதல் 24-ஆம் தேதி வரை வலம் வருகிறது. அதன்படி 22-ஆம் தேதி மலைக்கோவில், LIC அலுவலகம், எறும்பீஸ்வரர் கோவில்,இந்திரா நகர், திருவறும்பூர் மற்றும் BHEL பகுதிகளில் வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம் கோவில், திருவானைக்காவல், மேலூர், ராமகிருஷ்ணா தபோவனம், வயலூர், சோமரசன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வலம் வர உள்ளது. இதனைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆதியோகி ரதம் வலம் வர உள்ளது. முன்னதாக கடந்த 16 முதல் 21-ஆம் தேதி வரையில் மன்னார்குடி, பேராவூரணி, அறந்தாங்கி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆதியோகி ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பயணம்
இந்த ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்பணிக்கலாம்.

ருத்ராட்சம், ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம்
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடங்களிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.



Click it and Unblock the Notifications






