2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த பிரசித்திப் பெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள். அதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன!
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவை
இந்திய இரயில்வே பொதுவாக இந்த காலகட்டத்தில் யாத்ரீகர்களின் அதிகரிப்புக்கு இடமளிக்க சிறப்பு ரயில்களை வழங்குகிறது. திருவிழாக் காலங்களில் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வசதியாகப் பயணிப்பதை உறுதி செய்வதற்காக இந்த சிறப்பு சேவைகள், பேருந்துகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது, அதற்கான அறிவிப்பு தற்போது வந்துள்ளது.
27/08/2024 முதல் 10/09/2024 சிறப்பு பேருந்துகள் இயங்கும்
இத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு லிமிடெட் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆக மொத்தம் 1050 சிறப்பு பேருந்துகள் 27/08/2024 முதல் 10/09/2024 வரை இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு செய்யவும் வசதி உண்டு
இதன் காரணமாக, பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது
சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்
வெளிமாநில பக்தர்கள், வெளிமாவட்ட பக்தர்கள் ரயில்கள் மூலம் வருவார்கள். இவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், ஆகஸ்ட் 29ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30க்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் சேவை
இதே போல் மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06116) வரும் ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்றடையும். இந்த ரயில்கள் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் மேற்கூறிய தகவலுக்கு ஏற்றவாறு தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்!



Click it and Unblock the Notifications





