2025 கோடை விடுமுறைக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 75 பயணிகளுக்கு குலுக்கல் முறையில் இலவச பயணச் சீட்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக பகல் வேளைகளில் வீட்டிலிருந்து வெளியே வரவே மக்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், குளுமையான பகுதிகளுக்கும் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க திட்டமிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு கோடை கால விடுமுறைக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2025 முதல் ஜூன் 15, 2025 வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் இலவச பயணச் சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பரிசு விபரம் பின்வருமாறு:
- முதல் பரிசு: 25 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் ஒரு வருடத்திற்கு 20 முறை இலவச பயணம் (ஜூலை 1, 2025 முதல் ஜூன் 30, 2026 வரை).
- இரண்டாம் பரிசு: 25 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் ஒரு வருடத்திற்கு 10 முறை இலவச பயணம் (ஜூலை 1, 2025 முதல் ஜூன் 30, 2026 வரை).
- மூன்றாம் பரிசு: 25 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் 5 முறை இலவச பயணம் (ஜூலை 1, 2025 முதல் ஜூன் 30, 2026 வரை).
இந்த பரிசுகளை பெறுவதற்கு, பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலியைப் பயன்படுத்தவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த ஜாக்பாட் அறிவிப்பால் இனி வரும் நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களை பயணிகள் அதிகம் பயன்படுத்த துவங்குவார்கள் என்றும், அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இனி வரும் நாட்களில் இது போன்ற ஜாக்பாட் சலுகைகளை அடிக்கடி அறிவிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்கள், பண்டிகை காலங்களில் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படலாம். அப்படி அறிவிக்கப்பட்டால் ரயில்களை போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் முன்பதிவு துவங்கிய உடனேயே அனைத்து சீட்களும் புக் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.



Click it and Unblock the Notifications






