என்ன? ரயிலை வாடகைக்கு எடுக்க முடியுமா? ஆம், முடியும்! ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது நம் இந்தியா. நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் யாவரும் இந்தியாவின் பாரம்பரிய கோவில்கள், புராதன நினைவுச்சின்னங்கள், மலைப்பிரதேசங்கள் போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்லாமல் தங்கள் நாட்டிற்கு செல்ல மாட்டார்கள்! அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த 16 சுற்றுலாப் பயணிகள் ஊட்டி நீராவி மலை ரயிலை ரூ.3 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். ரயிலில் அமர்ந்துக் கொண்டே நீலகிரி மலைகள், அருவிகள், பள்ளத்தாக்குகளை பார்த்து ரசித்துக்கொண்டே வலம் வந்துள்ளனர்!

மலைகளின் ராணி – ஊட்டி
மலைகளின் ராணியான ஊட்டி, வசீகரிக்கும் புல்வெளிகள், இனிமையான சூழல், குளிர்ந்த வானிலை மற்றும் சுற்றிப்பார்த்து ரசிக்கக் கூடிய பரந்த அளவிலான சுற்றுலா இடங்களுடன் உங்களை வரவேற்கிறது. ஊட்டியில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா தலமும் ஒரு தனித்துவமான மற்றும் உயிரோட்டமான அனுபவத்தை அளிக்கிறது.
அவலாஞ்சி ஏரி, தொட்டபெட்டா சிகரம், மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் மற்றும் பல வியூபாயின்ட்டுகள் என ஊட்டியில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதன் அதிகப்படியான இயற்கை அழகு தான் ஆங்கிலேயர்களை இதை கோடைக்கால தலைநகராக செயல்பட வைத்திருக்கிறது போலும்!

அழகிய ஊட்டி மலை ரயில் பயணம்
ஊட்டிக்கு செல்லும் உங்களின் பயணம் ஊட்டி மலை ரயிலில் பயணிக்காமல் முழுமையடையாது. ஊட்டியின் முழு அழகையும் கண்டு ரசிக்க இதில் பயணம் செல்வது மிகவும் அவசியம் என்பதை ரயிலில் பயணம் செய்த பின்னர் நீங்களே புரிந்து கொள்வீர்கள். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதை, நீங்கள் என்றென்றும் விரும்பும் ஒரு மயக்கும் ரயில் பயண அனுபவத்தை வழங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரயிலை வாடகைக்கு எடுத்த வெளிநாட்டினர்
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த 16 சுற்றுலாப் பயணிகள் கடந்த வாரம் டார்ஜிலிங், சிம்லா, ஆக்ராவில் உள்ள நினைவு சின்னங்கள், பதேபூர் சிக்ரி ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு தமிழ்நாடு வந்துள்ளனர். ஊட்டி மலை ரயிலைப் பற்றி அறிந்த இவர்கள் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் கோயம்பத்தூர் சென்றுள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இந்த சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணித்துள்ளனர். அதற்காக ரூ.3.6 லட்சத்திற்கு ரயிலை வாடகைக்கு எடுத்தனர். மலை ரயிலில் பயணிக்க நாம் முன்கூட்டியே ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம். அதைப் பயன்படுத்தியே ரயிலை வாடகைக்கு எடுத்ததாக அவர்கள் கூறினார்கள்.

ஊட்டி பொம்மை ரயிலுக்கான புக்கிங் செய்வது எப்படி
இந்திய ரயில்வேயால் பராமரிக்கப்படும் ஊட்டி மலை ரயில் உதகமண்டலம் முதல் மேட்டுப்பாளையம் வரையிலும், உதகமண்டலம் முதல் குன்னூர் வரையிலும் செயல்படுகிறது. அற்புதமான பொம்மை ரயிலில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை இந்திய ரயில்வே இணையதளமான www.irctc.co.in மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சீசன் நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், 2-3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

ஊட்டி பொம்மை ரயில் நுழைவு கட்டணம்
முதல் வகுப்பு - நபருக்கு ரூ. 205
இரண்டாம் வகுப்பு- நபருக்கு ரூ. 30
முன்பதிவு செய்யப்படாத பிரிவினருக்கு ரூ. 15
முதல் வகுப்பில் 12 இருக்கைகளும், இரண்டாவது வகுப்பில் 88 இருக்கைகளும் உள்ளன.

ரயில் ஏறுவதற்கு முன் செய்ய வேண்டியவை
o ரயிலில் கழிவறைகள் இல்லை, ரயில் ஏறும் முன் ரயில் நிலையத்தில் அவற்றைப் பயன்படுத்தவும்.
o முன்பதிவு சாளரத்தில் ஒரு நபருக்கு 4 டிக்கெட்டுகளுக்கு மேல் வாங்க அனுமதி இல்லை.
o விடுமுறை/வார இறுதி நாட்களிலும், பீக் சீசனிலும் பெரும் கூட்டம் இருக்கும்.
o ஆகவே, குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் பதிவு செய்யுங்கள்.
o ரயிலில் கேட்டரிங் சேவை இல்லை, முன்கூட்டியே சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள். குழந்தைகள் இருந்தால் உணவு கையோடு எடுத்துச் செல்லுங்கள்
பச்சைப் பசேல் என்று இயற்கை எழில்கொஞ்சும் மலைகள், நீரூற்றுகள், சிலு சிலுவென்று முகத்தில் அடிக்கும் பூங்காற்று என ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து மகிழ ஊட்டி ரயிலில் கட்டாயம் பயணம் செய்ய வேண்டும் மக்களே!



Click it and Unblock the Notifications





