புனலூர் பேப்பர் மில்ஸ் துவங்கப்பட்டதன் காரணமாக கேரளாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டதாக பிரபலமாக அறியப்படும் புனலூர் நகரம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் நீரமைந்த நகரம் என்ற பொருளில் புனலூர் என்று தமிழிலும், மலையாளத்திலும் பொதுவாக அழைக்கப்படுகிறது. இதன் பெயருக்கேற்றபடி இந்த நகரில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் கல்லடா எனும் நதி புனலூர் நகரின் செழுமைக்கும், வளமைக்கும் மூலகாரணமாக திகழ்ந்து வருகிறது.
புனலூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நுழைவாயிலாக கருதப்படும் பத்னபுரம் தாலுக்காவின் நிர்வாக தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் அமைந்திருக்கும் இந்த நகரம் தெற்கு கேரளாவின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.
புனலூர் நகரின் புகழுக்கு மூல முதல் காரணமாக விளங்கி வருவது தேசிய முக்கியத்துவத்தை பறைசாற்றும் நினைவுச் சின்னமாக 19-ஆம் நூற்றாண்டில் கட்டபட்ட தொங்கு பாலமே ஆகும்.
இந்த பாலம் தற்போது பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தாலும் பாலத்தை பாதுகாக்க தேவையான புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.
புனலூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தொங்கு பாலத்தை தவிர அகஸ்த்திய மலை எனும் காட்டுயிர் சரணாலயத்துக்கும் நேரமிருந்தால் சென்று வரலாம். மேலும் அன்னாசி பழம், பிளைவுட், டிம்பர், மிளகு போன்றவைக்காகவும் புனலூர் நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.
இந்தியா முழுவதுமிருந்து சபரிமலை வருபவர்கள் புனலூர் நகரில் இளைப்பாறி செல்வதால் திருவிழா காலங்களில் புனலூர் நகரம் ஜேஜேவென்று இருக்கும். இந்த நகருக்கு நீங்கள் வரும்போது சேந்த்ருணி காடுகளுக்கும், தென்மலா ஈக்கோ டூரிசம் பகுதிக்கும் கண்டிப்பாக சென்று வர வேண்டும்.
இப்பகுதிகளில் நீங்கள் நெடுந்தூர நடைபயணம், மவுண்டெயின் பைக்கிங் போன்ற சாகசங்களில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
அதோடு பாலருவியும், பழைய குற்றாலமும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்கள். இவைதவிர புனலூர் நகருக்கு வரும்போது நீங்கள் பட்டாழி தேவி கோயிலுக்கும் சென்று வரலாம்.