ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது. உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும் நடுவே ரணக்பூர் அமைந்துள்ளது.
இக்கிராமம் 15ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புகழ்பெற்ற ஜெயின் கோயிலை கொண்டிருக்கிறது. இக்கோயில் ஜெயின் சமுகத்தினர் பெரிதும் பூஜிக்கும் கோயிலாக திகழ்கிறது.
இந்த கோயிலின் வசீகரம் அதன் கம்பீரமான தூண்களில் பிரதிபலிக்கிறது. பின்னணியில் முடிவிலா பாலைவனப்பகுதியுடன் இக்கோயில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது.
ரணக்பூரின் விசேஷங்கள்
ரணக்பூரில் சூரிய நாராயணக்கோயில் அல்லது சூரியக்கோயில் என்று அழைக்கப்படும் பிரசித்தமான கோயில் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. பலகோண வடிவில் அமைக்கப்பட்ட இக்கோயிலின் வெளிச்சுவரில் கிரகங்களின் புடைப்புச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இது இப்பிரதேச பூர்வகுடிகளின் கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. சூரியக்கடவுள் ஒரு ரதத்தை செலுத்துவது போன்ற சிலை இங்கு காணப்படுகிறது. ரணக்பூருக்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள பிரபல ஜெயின் யாத்ரீகத்தலமான சத்ரி எனும் இடத்தையும் பார்க்கலாம்.
ரணக்பூரின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் இங்குள்ள முச்சல் மஹாவீர் கோயிலாகும். இது சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ளது. கனேராவ் எனும் இடத்திலிருந்து 5கி.மீ தூரத்தில் கும்பல்கர் சரணாலயத்தின் உள்ளே இந்த கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சிவபெருமான் மீசையுடன் காணப்படுவது ஒரு வித்தியாசமான அம்சமாகும். மேலும் கனேராவ் கிராமத்திலேயே இன்னும் ஏராளமான கோயில்களும் தரிசிப்பதற்கு உள்ளன.
அவற்றில் முச்சல் மஹாவீர் கோயில் மற்றும் கஜானந்த் கோயில் இரண்டும் இப்பிரதேசத்தின் முக்கியமான ஜெயின் கோயில்களாக பிரசித்தி பெற்றுள்ளன. ரணக்பூரிலிருந்து 6கி.மீ தூரத்திலுள்ள நர்லாய் எனும் கிராமமும் அங்குள்ள ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
இக்கோயில்களின் கலையம்சங்கள் மற்றும் அவற்றின் உள்ளே காணப்படும் சுவர்ச்சித்திரங்கள் ரசிக்கும் விதமாய் காட்சியளிக்கின்றன. மேலும், இப்பகுதியின் மற்றொரு பிரதான விசேஷமாக கும்பல்கர் எனும் வரலாற்றுத்தலமும் அமைந்துள்ளது.
இங்குள்ள மேவார் கோட்டை கம்பீரமாக எழுந்து காட்சியளிப்பதுடன் இதன் கோட்டைச்சுவர்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டைப்பகுதியிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை எழிலையும் தார் பாலைவனத்தின் மணற்குன்றுகளின் கம்பீரத்தையும் பார்த்து ரசிக்கலாம். இக்கோட்டை தற்சமயம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
ரணக்பூர் செல்வதற்கான பயண வசதிகள்
உதய்பூரிலுள்ள மஹாராணா பிரதாப் விமான நிலையம் ரணக்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். மேலும், டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் அருகிலுள்ள சர்வதேச விமானத்தளமாக அமைந்துள்ளது.
வெளிநாட்டுப்பயணிகள் இங்கிருந்து இணைப்புச்சேவைகள் மூலமாக வரலாம். மேலும், ரணக்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் ஃபால்னா எனும் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் வேன்கள் ரணக்பூர் வருவதற்கு கிடைக்கின்றன. மேலும் அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ரணக்பூருக்கு அருகிலுள்ள நகரங்களிலிருந்து அதிக அளவில் இயக்கப்படுகின்றன.
பருவநிலை
குளிர்காலமே ரணக்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ள பொருத்தமான பருவமாக உள்ளது. இக்காலத்தில் ஊர் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற சீதோஷ்ணநிலை நிலவுகிறது. மழைக்காலத்தில் இப்பிரதேசம் வறண்ட மற்றும் வெப்பமான கோடையிலிருந்து விடுபடுகிறது. மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும் மழைக்காலத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.