ரம்மியமான கான்வெல் சுற்றுலாத்தலம் சில்வாசாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தை நோக்கி பயணம் செய்யும் போதே சுற்றிலும் ஏராளமான இயற்கைக்காட்சிகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
கான்வெல் பகுதியை நோக்கி செல்லும் நேர்த்தியான அகலமான சாலைகளின் இருபுறமும் நெடிய மரங்கள் மற்றும் பழங்குடி கிராமங்கள், செழிப்பான மலைப்பகுதிகள் மற்றும் அம்மலைகளை போர்த்தியிருக்கும் பசுமையான வனப்பகுதிகள் ஆகியவை காட்சியளிக்கின்றன.
மயக்கவைக்கும் மலைச்சரிவுகள், புல்வெளிப்பள்ளத்தாக்குகள், மலைச்சரிவு தோட்டப்பூங்காக்கள், ரிசார்ட் விடுதிகள் மற்றும் சலசலப்போடு ஓடும் சகர்தோட் ஆறு போன்றவை இந்த கான்வெல் சுற்றுலாத்தலத்தில் நிரம்பியுள்ளன. மொத்தத்தில் நிசப்தமும் தூய்மையையும் கலந்த ஒரு சொர்க்கம் போன்று இந்த கான்வெல் ஸ்தலம் வீற்றிருக்கிறது.
பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இங்கு பழந்தின்னி வௌவால், பார்பெட், ஃபிளைகேட்சர் பறவைகள், ஃப்ளையிங் ஃபாக்ஸ் எனும் ராட்சத வௌவால் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். ஸ்விட்சர்லாந்து நாட்டின் இயற்கைக்காட்சிகளை ஒத்த சூழலை இங்கு காலை நேரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.
எங்கு பார்த்தாலும் தூய்மையான பசுமை ஒளிர்வதை இங்கு நேரில் வந்தால்தான் அனுபவித்து புரிந்துகொள்ள முடியும்.
இந்த இடத்திலுள்ள வன் விஹார் டூரிஸ்ட் காம்ப்ளக்ஸ் எனும் வளாகத்தில் ஒரு மான்கள் பூங்கா, காக்டஸ் ஹவுஸ், கிரீன்ஹவுஸ், தங்கும் விடுதிகள், மற்றும் ஆற்றங்கரையை ஒட்டிய அறைவீடுகள் ஆகியவை அடங்கியுள்ளன.



Click it and Unblock the Notifications