தொழில் நகரமான கோவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போட்டியாக மனஅமைதி தேடியும், தியானம் செய்வதற்கும் வருபவர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமைதியான சூழலில், தெய்வீக அனுபவம், ஆழ்ந்த மன அமைதி, நிம்மதியான தியானம் ஆகியவற்றை செய்ய இடம் தேடுபவர்கள் கோவையில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஈஷா யோகா மையம்
கோவையில் தியானம், ஆன்மிக உணர்வை பெற ஏற்ற இடம் என்றால் அது ஈஷா யோகா மையம் தான். சத்குரு ஜக்கி வாசுதேவால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உருவாக்கப்பட்ட இந்த மையம் உலக புகழ்பெற்றதாகும். இங்கு மனதிற்கு அமைதி தரும் தியான லிங்கம், சுற்றுலா பயணிகளை கவரும் புகழ்பெற்ற 112 அடி உயர ஆதியோகி சிலை, யோகா மையம் ஆகியவை அனைவரையும் எளிதில் கவரக் கூடியவை. இங்கு ஆன்மிக பயிற்சிகள், தியானம் ஆகியவையும் உள்ளன. கோவையில் இருந்து 40 கி.மீ., பயணித்தால் இந்த இடத்தை அடையலாம்.
பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான மையம்
பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான மையம். தியான பயிற்களை இலவசமாக வழங்கி வரும் மையமாகும். கோவையில் உள்ள இந்த மையத்தில் வாழ்க்கை, அமைதி இரண்டையும் எப்படி சமநிலையில் கையாள்வது என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தியானத்துடன் மன அழுத்தத்தை குறைக்கும் முறைகள், மன நிலையை கையாளும் முறைகள் ஆகியவற்றிற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு மாணவர்கள் தங்களின் திறனை உணர்வதற்கான பயிற்சிகளும் கற்றுத் தரப்படுகின்றன. கோவையில் பல இடங்களில் இதன் கிளைகள் உள்ளன.
ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம்
கோவையில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ளது ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம். வேதாந்தம் மற்றும் சமஸ்கிருத கல்விக்காக அமைக்கப்பட்டுள்ள அமைதியான கல்வி மையம். சுவாமி தயானந்த சரஸ்வதியால் துவங்கப்பட்டதாகும். இந்திய ஆன்மீக நடைமுறைகளை கற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் இங்கு வந்து தங்கி, படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனைகட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த குருகுலத்தில் சொல்ல முடியாத அப்படி ஒரு அமைதியை அனுபவிக்க முடியும்.

வாழும் கலை மையம்
கோவையில் உள்ள வாழும் கலை மையம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரால் உருவாக்கப்பட்ட ஒரு உலகளாவிய ஆன்மிக மையமாகும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், மனத்தெளிவு பெறவும் மக்கள் அதிக அளவில் இங்கு தேடி வருகிறார்கள். இங்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இங்கு தங்கி, பயிற்சி பெறுவதற்கும் வசதி உள்ளது. தனி நபர்கள், குடும்பத்தினர்கள், குழுக்கள் என எப்படி வேண்டுமானாலும் வந்து இங்கு தங்கி, சிறப்பு பயிற்சிகளை பெற முடியும்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா
கோவையில் இருந்து 15.கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகாந்தரின் ஆன்மிக வழிகாட்டுதல்களின் படி நடந்து வருகிறது. அமைதியான மைதானம், தியான மண்டபம், அதோடு இணைந்த கோவில்...இவை அனைத்தும் தெய்வீகத்துடன் சுயநலமற்ற வாழ்க்கை, சேவை பற்றிய புரிதலை அனைவருக்குள்ளும் ஏற்படுத்தி விடும். இவர்கள் வேதாந்த வகுப்புக்களையும் நடத்தி வருகிறார்கள். 1930 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மையத்தில் உள்ள தியான கூடத்தில் யார் வேண்டுமானாலும் அமர்ந்து தியானம் செய்யலாம், ஆன்மிக அறிவுரைகளை கேட்கலாம்.
சின்மயா மிஷன் ஆசிரமம் :
கோவையில் இருந்து 25 கி.மீ., தூரத்தில், சிறுவாணி மலைக்கு அருகில் அமைந்துள்ளது இந்த அமைதியான இடம். இங்கு ஆன்மீக அறிவை அமைதியாக பெற முடியும். இங்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு பகவத் கீதை, உபநிடத வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இந்த ஆசிரமத்திற்கு வருபவர்களுக்கு அமைதி, ஆன்மிகம் நிறைந்த நிறைவான உணர்வு ஏற்படுகிறது. 1953ம் ஆண்டு சுவாமி சின்மயானந்தாவால் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது.

ரிஷி வேலி ரிட்ரீட்
கோவையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது ரிஷி வேலி ரிட்ரீட். தியானம், யோகா, ஆயுர்வேதா பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்படுகிறது. இங்கு வருபவர்கள் தாங்கள் யார் என்பதை உணர இந்த மையம் உதவுகிறது. அமைதியான சூழல், ஆரோக்கியத்திற்கான அம்சங்கள் என பலவும் உள்ளது இங்கு வருபவர்களை அனைத்து வகையிலும் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது இந்த மையம். இயற்கையை நேசிப்பவர்களும் இங்குள்ள மலையடிவாரத்தில் அமைதி, அழகை காண வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications






