தமிழகத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதோடு பல்வேறு நலத்திட்டங்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக மேலும் எட்டு மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். அதன்படி திண்டுக்கல்லில் இருந்து பழநி, திருவண்ணமலையிலிருந்து ஆரணி என புதிய மாவட்டங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய மாவட்டம் உருவாகி விட்டால் வளர்ச்சி, மேம்பாடு, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்டவையில் கவனம் செலுத்தப்படும் அல்லவா! இது நல்ல செய்தி தானே!

தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் ஏற்கனவே 38 மாவட்டங்கள் உள்ளன. இதில் திண்டுக்கல், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகியவை நிலப்பரப்பில் பெரிய மாவட்டங்களாகும். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை மாகாணம் உருவான காலம் முதல் பல்வேறு சூழல்களில் பலவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. கடைசியாக தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டது.
12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம்
சமீபத்தில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால் சுற்றுலா, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய RTO மற்றும் தாலுகா அலுவலங்கள்
மேலும் பெரிய மாவட்டங்களின் தலைநகருக்கு செல்ல பயண நேரம் அதிகமாவதால் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதே போல RTO அலுவலங்கள் மற்றும் தாலுகா அலுவலங்களையும் பிரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து பிரியுமா பழநி
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின், முக்கிய வருவாய் பகுதியாக திகழும், பழநி தனி மாவட்டமாக பிரியுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் மக்கள் உள்ளனர். அதாவது, பழநி தனி மாவட்டமாக பிரிந்தால், திண்டுக்கல் வருவாய் அற்ற மாவட்டம் ஆகி விடும். இதே போல பல்வேறு மாவட்டங்களில் பல நெருக்கடியான சூழல் நிலவுகிறது.

தீவிர ஆலோசனைக்கு பிறகு முடிவு
திமுக உறுப்பினர் செழியனின் கேள்விக்கு, எட்டு மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், நிதி நிலை மற்றும் நிலவும் நிலவரத்தைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தான் தீவிரமாக ஆராய்ந்து முடிவு எடுப்பார் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்த மாவட்டம் பிரிவு தொடர்பாக எந்த கருத்தும் சட்ட சபையில் குறிப்பிடவில்லை. ஆனாலும் இதைப் பற்றி முதல்வர் ஆலோசித்து வருகிறார், கூடிய விரைவில் மாவட்டம் பிரிவு குறித்து தகவல்கள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications





