சென்னைக்கு பக்கத்தில வெறும் இரண்டு மணி நேர பயணத்தில நீர்வீழ்ச்சி, அணைக்கட்டு, குழந்தைகளுடன் நீச்சலடிக்க ஒரு சூப்பரான இடம் இருக்குன்னு சொன்னா உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான். சென்னையிலிருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ள செல்லூர் அணை எங்கு பார்த்தாலும் பசுமை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர்த்தேக்கம், குழந்தைகள் குளிக்க குட்டி நீர்வீழ்ச்சி என நம்மை வரவேற்கிறது. வார இறுதி நாட்களில் உங்கள் வசதிக்கேற்ப உங்கள் குடும்பத்தினருடன் இந்த இடத்திற்கு நீங்கள் வருகை தரலாம். மறுபடியும் எப்போது அங்கே செல்லலாம் என உங்கள் வீட்டு குட்டீஸ்கள் உங்களிடம் அடம் பிடிப்பார்கள். இந்த அழகான இடத்திற்கு எப்படி செல்வது? என்னென்ன எடுத்துச் செல்வது என்று பார்ப்போமா?

சென்னை நகர வாழ்க்கையில் இருந்து ஒரு நாள் பிரேக்
சென்னையின் பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து ஒரு சின்ன பிரேக் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதா? ஆனால் வேலை நிமித்தம், பட்ஜெட் காரணமாக எங்கும் செல்ல முடியாமல் சிக்கி கொண்டு இருக்கிறீர்களா? கவலையே வேண்டாம். உங்கள் வாகனத்தில் பெட்ரோல் மட்டும் நிரப்பிக்கொண்டு சிறிது சிற்றுண்டிகளையும், தண்ணீர் பாட்டிலையும் எடுத்துச் சென்றால் போதும். செலவே இல்லாமல் ஒரு அசத்தலான ஒரு நாள் ட்ரிப்பிற்கான பெஸ்ட் ஐடியா இதோ உங்களுக்காக!
அழகான ஆனால் பாதுகாப்பான இடம்
ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த செல்லூர் அணை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது. உங்களுக்கு நீர்வீழ்ச்சி வேண்டுமா? இருக்கிறது! உங்களுக்கு அழகான காட்சிகளை பார்த்துக் கொண்டே குளிக்க தோன்றுகிறதா? அதுவும் இருக்கிறது! தனி நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமா? ஆம்! என எல்லாமுமே இந்த இடத்தில் சரியாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சென்னையிலிருந்து எப்படி செல்வது
சென்னையிலிருந்து வியாசர்பாடி, பாடியநல்லூர், சிருனியம், பெரியபாளையம், தண்டலம் வழியே சென்று, ஊத்துக்கோட்டை, நாகலாபுரம், பாலமங்கலம், குடிமாலம் வழியே செல்லூர் அணையை அடையலாம். இந்த இடத்திற்கு பேருந்து வசதிகளும் உண்டு. ஆனால் உங்களது சொந்த வாகனங்களில் சென்றால் லாங் டிரைவ் போன ஒரு நல்ல உணர்வு கிடைக்கும். ஏனென்றால் வழி முழுக்க நீங்கள் காடுகளையும் பசுமையான காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே வரலாம்.
அணையில் இறங்கி ஆனந்த குளியல் போடலாம்
இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் நீங்கள் அணையை அடைந்து விடுவீர்கள். அணையை அடைந்த உடனே உங்களது வாகனங்களை பார்க் செய்துவிட்டு சுற்றிப்பார்த்துவிட்டு நீச்சலடிக்க ஆரம்பிக்கலாம். மலைகளுக்கு நடுவே இருக்கும் நீர்த்தேக்கம் மிகவும் ஆழமாக இருக்கிறது. உங்களுக்கு நீச்சலடிக்க தெரியுமென்றால் தாரளமாக அணையில் இறங்கி குளிக்கலாம், எந்த தடையும் இல்லை. மலைகளுக்கு நடுவே ரம்மியமான காட்சிகளை பார்த்த ரசித்தபடியே ஒரு ஆனந்த குளியலை போடலாம்.

உங்கள் வீட்டு குட்டீஸ்களை கவரும் இடம்
உங்களுக்கு நீச்சல் தெரியாது என்றால், அணையில் இருந்து தண்ணீர் வருவதற்கு என நான்கு ஐந்து வழிகள் உள்ளன. அதிலிருந்து விழும் நீர் பார்ப்பதற்கும் குளிப்பதற்கும் சின்ன நீர்வீழ்ச்சி போல இருக்கிறது, அதில் நீங்கள் குளிக்கலாம். இந்த குட்டி நீர்வீழ்ச்சிகளில் பெண்களும் குழந்தைகளும் பெருமளவு குளிக்கின்றனர். இந்த இடத்திற்கு ஒரு முறை உங்கள் வீட்டு குட்டீஸ்களுடன் சென்றால் மறுபடியும் அங்கு அழைத்து செல்லும் படி அடம் பிடிப்பார்கள். அது மட்டும் நிச்சயம்!
என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்
இந்த இடத்திற்கு செல்லும் போது டவல், குழந்தைகளுக்கு மாற்றுத்துணி கொண்டு வாருங்கள். இங்கு எந்த கடைகளும் பெரிதாக இருக்காது. அதனால் வரும் போதே ஸ்நாக்ஸ், சிற்றுண்டி, தண்ணீர் பாட்டில் அகியவற்றை கொண்டு வாருங்கள். ஒரு நாள் முழுக்க இங்கு தங்கி இருந்து லஞ்ச் முடித்து செல்வது உங்கள் பிளானாக இருந்தால் நீங்கள் அதுக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் தயார் செய்து எடுத்து வாருங்கள்.

இன்னும் ட்ரிப்பை அதிகப்படுத்தலாமே
நீங்கள் நண்பர்களுடன் இரு சக்கர வாகனங்களில் இந்த இடத்திற்கு வந்தால் உங்களுடைய ட்ரிப்பை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாம். ஆம்! இந்த இடத்திலிருந்து 12 கிமீ தொலைவில் தான் மிக அழகிய நீர்வீழ்ச்சியான சதாசிவகோனா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கிறது. அதனால் நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இந்த பாதைகளில் செல்ல வசதியாக இருக்கும்.
அழகிய சதாசிவகோனா நீர்வீழ்ச்சி
சதாசிவகோனா நீர்வீழ்ச்சிக்கு செல்வதுக்கு முன்னர் சதாசிவகோனா நீர்வீழ்ச்சி அடிவாரத்தில் உங்களது பைக்கை பார்க் செய்துவிட்டு 8 கிமீ தூரத்திற்கு ட்ரெக்கிங் செய்யுங்கள். ட்ரெக்கிங் மிகவும் கடினமாக இருக்கும், அதனால் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம், முதலில் ஒரு நீர்வீழ்ச்சி மற்றும் கோவிலைப் பார்ப்பீர்கள். நீங்கள் அங்கேயே குளித்து மகிழலாம். ஆனால் மெயின் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால் இன்னும் அரை மணி நேரம் நடக்க வேண்டும்.

நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்
மெயின் நீர்வீழ்ச்சியை அடைந்த உடனே உங்கள் மனதில் ஒரு பரவசம் வரும் பாருங்களேன் அதற்கு எல்லையே இல்லை. அந்த அளவிற்கு உங்கள் மனதை கவரும் வகையில் இருக்கும் சதாசிவகோனா நீர்வீழ்ச்சி. நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் ஒரு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது, அந்த இடத்தில் ஆழம் அதிகம். நீச்சல் தெரியாதவர்கள் அதில் இறங்க வேண்டாம். இல்லையென்றால் நீர்வீழ்ச்சியில் மட்டுமே குளித்து மகிழவும்
இந்த அசத்தலான ஒரு நாள் ட்ரிப்பை நீங்கள் எப்போது பிளான் பண்ண போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





