இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை துறையையே அலறவிட்ட கோவில் ஒன்று தமிழகத்தில் உள்ளது தெரியுமா? ஆம், கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள இந்த ஒரு கோவிலை நெடுஞ்சாலை அமைக்கும் போது அதிகாரிகள் எவ்வளவோ முயற்சித்தும் கூட இடம் மாற்றம் செய்ய முடியவில்லையாம். கோவில் மேல் கொண்ட பயத்தினால் எதுவும் செய்யாமல் கோவிலுக்கு மேலே பாலம் கட்டப்பட்டு நெடுஞ்சாலை போடப்பட்டது என்று கூறுகிறார்கள்!
திரும்பும் திசையெல்லாம் கோவில்கள்
இந்தியாவில் கோவில்களுக்கா பஞ்சம் எனும் அளவிற்கு இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கோவில்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. தமிழகத்தில் ஒரு படி மேலே போய் நம் ஆட்கள் மரங்களை கூட சாமியாக கருதி, புடவை கட்டி, பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து கூழ் வார்த்து படைக்கின்றனர். இதை மூட நம்பிக்கை என்று பலர் வாய் திறந்து கருத்து தெரிவித்தாலும், செயலில் ஈடுபட சற்றுப் பயப்படவே செய்வார்கள். அது போல தான் இங்கு ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு அதிகாரிகளை பயமுறுத்திய புத்துமாரியம்மன்
இந்திய நெடுஞ்சாலை துறையை பதற வைத்த ஒரு கோவில் இது என்று பலரும் கூறுகின்றனர். சென்னை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ புத்து மாரியம்மன் கோவிலைக் கண்டு நெடுஞ்சாலை துறையே நடுங்கியதாம். நெடுஞ்சாலை அமைக்கப்படும் போது அதாவது சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னால் (2003 ஆம் ஆண்டில்) இந்த சம்பவம் அரங்கேறியதாம். இந்த கோவில் சாலையை ஒட்டி இருப்பதால், நெடுஞ்சாலை அமைக்க தடையாக இருந்ததாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உணர்ந்தனர்.
கோவிலை இடமாற்றம் செய்ய முயற்சித்த அதிகாரிகள்
கோவிலை இடித்து விட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். ஊர் மக்கள் ஒன்று திரண்டு 'தயவுசெய்து இடித்து விட வேண்டாம், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து வையுங்கள்' என்று கோரிக்கை விடுத்தனர். அதைக் கேட்ட அதிகாரிகள் முதலில் மறுப்பு தெரிவித்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டு செயலில் இறங்கினர்.

பல இன்னல்களை சந்தித்த அதிகாரிகள்
ஆந்திராவை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் இதற்காக நியமிக்கப்பட்டார், கோவிலை இடமாற்றம் செய்ய வரும் போதெல்லாம் அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதாகவும், மேலாக அவரது குடும்பத்தினரும் கடுமையான உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் பயந்து அவர் கோவிலை இடம் மாற்றம் செய்ய முடியாமல் போனது என்று சொல்லப்படுகிறது.
கோவிலை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட்ட அதிகாரிகள்
பிறகு வேறு சில அதிகாரிகள் JCB இயந்திரத்தை வைத்து கோவிலை இடமாற்றம் செய்ய முயற்சித்தினர். JCB ஓட்டி சென்ற டிரைவருக்கு அடிப்பட்டு கால் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் மிகவும் பயந்ததோடு மட்டுமல்லாமல் கோவிலை இடமாற்றம் செய்யும் முடிவையும் கைவிட்டனர்.

சக்தி வாய்ந்த புத்துமாரியம்மன்
காரணம் என்னவென்றால் இந்த புத்துமாரியம்மன் கோவிலில் வீற்றிருக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்று கூறப்படுகிறது. இன்றளவும் இந்த கோவில் பாலத்திற்கு அடியில் தான் அமைந்துள்ளது, இது அவளது இடம், இந்த இடத்தை விட்டு அவள் எங்கும் செல்ல மாட்டாள் என அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். குழந்தையின்மை, உடல் உபாதை, கல்வி, வேலைவாய்ப்பு என எது மனமுருகி வேண்டினாலும் இந்த அம்பாள் கொடுத்து விடுகிறாள் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?
வாணியம்பாடி சுங்கசாவடியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோவில், நாட்டரம்பள்ளியில் இருந்து 8 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. நீங்கள் கிருஷ்ணகிரியில் இருந்தால் அல்லது கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!



Click it and Unblock the Notifications





