ஒவ்வொரு ஆண்டும், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 45 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரைக்கு நாடு முழுவதும் இருந்து யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். இமயமலைத் தொடரில் தெற்கு காஷ்மீரில் ஆண்டுதோறும் தோன்றும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 3880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கக் கூடிய அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லுதல், இந்துக்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான புனித பயணமாக கருதப்படுகிறது.
எம்பெருமானான சிவனுடன் தொடர்புடைய சிவன் கோவில்களில் அமர்நாத் குகை கோவில் முக்கிய இடம் வகிக்கிறது. அமர்நாத் இறைவனை வழிபடுவதால், உங்களுக்கு ஏராளமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நேர்மையான வாழ்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை! இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதைப்பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ!

இந்துக்களுக்கான மிக முக்கியமான புனித யாத்திரை
ஜம்மு மற்றும் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 141 கிமீ தொலைவில் 3,888 மீ உயரத்தில் இந்த குகை அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் பனி மலைகளால் சூழப்பட்ட குகை இந்து மத அமைப்பில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது மற்றும் சிவபெருமானின் புனிதமான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பனியால் உருவாகும் சிவலிங்கம்
குகைக்குள் 40 மீ உயரத்தில் உள்ள சிவலிங்கம் மூலம் இந்த குகை முக்கியத்துவம் பெறுகிறது. குகையின் மேற்கூரையில் இருந்து பனிக்கட்டி வடிந்ததால் உருவான ஸ்லாக்மைட் என அறிவியல் கூறினாலும், இந்துக்கள் இது லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். சந்திரனின் கட்டத்திற்கு ஏற்ப லிங்கம் வளர்ந்து சுருங்குகிறது என்று நம்பப்படுகிறது, இருப்பினும் அதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. பார்வதி தேவி மற்றும் விநாயகப் பெருமானாக நம்பப்படும் குகையில் மேலும் இரண்டு பனி வடிவங்கள் காணப்படுகின்றன.
மோட்சத்தை தரும் அமர்நாத் யாத்திரை
அழியாததன் பின்னணியில் உள்ள ரகசியத்தை தெரிந்துக் கொள்ள விரும்பிய பார்வதி தேவி, சிவனிடம் அதைக் கூறும்படி வற்புறுத்தினாள். ரகசியத்தை வேறு யாரும் கேட்கக்கூடாது என்பதற்காக குகையை நோக்கிச் சென்ற சிவபெருமான் அங்கேயே அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, மோட்சத்திற்கான தேடலில் பக்தர்கள் ஆண்டுதோறும் இங்கு குவிந்து வருகின்றனர்.

ஜூலை 1 - ஆகஸ்ட் 31 வரை அமர்நாத் யாத்திரை
2023 ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் மாதமே முடிந்து விட்டது. 62 நாட்கள் கொண்ட அமர்நாத் யாத்திரை குறித்த தேதி, யாத்திரிகர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் உள்ளிட்ட விபரங்களை ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை கவர்னர் அறிவித்துள்ளார்.
இரண்டு வழிகளில் பயணம்
ஒன்று பெஹல்காமில் இருந்தும் மற்றொன்று சோன்மார்க் பால்டலிலிருந்தும் தொடங்குகிறது. பெஹல்காமிலிருந்து செல்லும் பாதை எளிமையானது மற்றும் வசதியானது. ஆனால் சோன்மார்க்கிலிருந்து செல்லும் பாதை குறுகிய தூரம் என்றாலும் மிகவும் கடினமானது. இந்த வழியைப் பின்தொடர்பவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் இதைச் செய்கிறார்கள், மேலும் இந்த பாதையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு இந்திய அரசு பொறுப்பேற்காது. முதல் வழியில் யாத்திரைக்கு செல்வதே சாலச் சிறந்தது.
அமர்நாத் 2023 பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை
1. 2023ஆம் ஆண்டிற்க்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடைகிறது.
2. மொத்தம் 62 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமர்நாத் யாத்திரை வழித்தடம், தட்பவெப்ப நிலை, ஆன்லைன் சேவை விபரங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.
4. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், 75 வயதிற்கு அதிகமானவர்களும், கர்ப்பிணி பெண்களும், ஏற்கனவே உடல் உபாதை கொண்டவர்களும் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள கூடாது.
5. யாத்ரீகர்கள் கண்டிப்பாக தங்கள் ஆதார் விபரங்களை கொண்டு வர வேண்டும்.
6. ஆபரேட்டர்களின் அறிவுறுத்தல் படி உடை, கம்பளி, காலனி உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.
7. தடைசெய்யப்பட்ட உணவுப் பட்டியலில் புலாவ், ப்ரைடு ரைஸ், பூரி, பாதுரா, பீட்சா, பர்கர், ஸ்டஃப்டு பராத்தா, தோசை, வறுத்த ரொட்டி, ஊறுகாய், சட்னி மற்றும் வறுத்த பப்பட் ஆகியவை அடங்கும். கூடுதலாக, சௌமைன் (நூடுல்ஸ்) அல்லது வறுத்த உணவுப் பொருட்களும் கூடுதலாக அனைத்து வகையான இனிப்பு பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications





