கடற்கரையில் திருவிழாவா? என்ன திருவிழா? எங்கே நடக்கிறது? அங்கே என்னவெல்லாம் கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? "கடவுளின் சொந்த தேசமான" கேரளாவில் அது வெகு விமர்சியாக நடைபெறுகிறது. எப்பொழுதும் ஒரு இனிமையான வானிலை, அடர்ந்த வனாந்திரம், மலை முகடுகள், மிதமான வெப்பம் கொண்ட கடற்கரைகள் என கேரளா ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கேரளாவின் காசர்கோட்டில் உற்சாகமாக நடைபெறும் இந்த 10 நாள் சர்வதேச திருவிழாவில் பங்குக் கொள்ள நீங்களும் தயாரா? விவரங்கள் கீழே!
காசர்கோட்டின் சுற்றுலாவை மேம்படுத்த முயற்சி
பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கேரளாவின் சுற்றுலா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. இது பேக்கல் மற்றும் காசர்கோட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும். பெக்கால் ரிசார்ட்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலமும் மற்றும் பெக்கலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தலைமை தாங்கும் அமைப்பு மூலமும் இந்த விழா அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. திருவிழா அதன் திறனை வெளிப்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்ளூர் கலாச்சாரத்தை கண்டு களிக்க வாய்ப்பு
பேக்கல் மற்றும் காசர்கோட்டின் வரலாறு, கலாச்சாரம், மொழிப் பன்முகத்தன்மை, கலை வடிவங்கள், வளர்ச்சிக் கருத்துக்கள் மற்றும் சுற்றுலா முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு நிகழ்ச்சிகளை விழா முழுவதும் ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது. விழாவின் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூன்று இடங்களில் அரங்கேற்றப்படும்.
மனதை வருடும் இசைக் கச்சேரிகள்
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நூர் சகோதரிகளின் நேரடி இசை இசைக்குழு, ராஜ் காலேஷ், நிர்மல் பலாழி மற்றும் குழுவினரின் மேஜிக் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி, சிதாரா கிருஷ்ண குமார் தலைமையில் மலபாரிக்கஸ் இசை விழா, ஷப்னம் ரியாஸ் மற்றும் சூஃபி இசை போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு சுவராஸ்யமான ஷோக்கள்
வணிக வர்த்தக கண்காட்சிகள், B2B சந்தைப்படுத்தல் கண்காட்சிகள், B2C பிளே மார்க்கெட்கள், ஆட்டோமொபைல் எக்ஸ்போ, மருத்துவ கண்காட்சிகள், ஃபேஷன் ஷோ, கல்வி கண்காட்சிகள், ரோபோடிக் ஷோ, குளிரூட்டப்பட்ட பெவிலியன், விலைமதிப்பற்ற படைப்புகள், உணவு திருவிழா, மணப்பெண் அலங்கார போட்டி, ஹெலிகாப்டர் சவாரி, நீர் விளையாட்டு, மலர் கண்காட்சி போன்றவை விழாவில் இடம் பெறுகிறது.
ஏராளமான மக்கள் வருகை தருவார்கள்
புத்தாண்டை முன்னிட்டு அக்ரோபாட்டிக் நிகழ்ச்சி, தீ நடனம், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பட்டாசு நிகழ்ச்சியும், நிறைவு நாளில் முகமது அஸ்லாம் மற்றும் ஸ்டீபன் தேவசியின் இசைக்குழுவின் முகமது ரஃபி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.10 நாட்களில் பேக்கலில் நடைபெறும் சர்வதேச கடற்கரை திருவிழாவை 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டுகளிக்க வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், குழந்தைகளுக்கு 25 ரூபாயுமாக வசூலிக்கப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கவர்ச்சியான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட யாத்ராஸ்ரீ என்ற சிறப்பு சுற்றுலா தொகுப்பும் வழங்கப்படுகிறது. இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த இத்திருவிழாவில் நீங்கள் கலந்து கொள்ள தயாரா?