தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவரது வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக புராணங்களில் போற்றப்படும் ஆறு கோவில்களை ஆறுபடை வீடுகள் என குறிப்பிடுகிறோம். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமி மலை, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடைகள் அமைந்துள்ள கோவில்கள் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஆறு கோவில்களுக்கும் ஒரே சமயத்தில் செல்ல நினைப்பவர்கள்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறை டூர் பேக்கேஜ் மூலமாக சென்று வரலாம்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவசமாக ஆறுபடை வீடு முருகன் கோவில்களுக்கும் ஒவ்வொரு கட்டமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்கள். விண்ணப்பம் செய்பவர்களின் தகுதியான 207 பேர் தேர்வு செய்யப்பட்டு, பஸ்சில் அழைத்து செய்யப்படுவார்கள். இந்த இலவச ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்பதற்கு சில குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பதுடன், வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இது தவிர கட்டணம் செலுத்தி ஆறுபடை வீடு முருகன் கோவில்களுக்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்று வரலாம்.

பயண விபரம்
முதல் நாள் -
காலை சென்னை சுற்றுலாத்துறை வளாகத்தில் இருந்து காலை 06.30 மணிக்கு பயணம் புறப்பட்டு, நேராக திருத்தணி முருகன் கோவிலுக்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும். வழியில் காலை உணவு வழங்கப்படும். திருத்தணியில் சாமி தரிசனம் முடித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மாலை 06.30 மணிக்கு சுவாமி மலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு, இரவு 08.30 மணிக்கு தஞ்சாவூரில் இரவு உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.
2ம் நாள் -
காலை 9 மணிக்கு காலை உணவு சாப்பிட்ட பிறகு பழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பகல் 1 மணிக்கு பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்த பிறகு, பகல் உணவு வழங்கப்படும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை வந்து இரவு உணவை முடித்து விட்டு, அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

3ம் நாள் -
காலை 7 மணிக்கு மதுரையில் காலை உணவு சாப்பிட்டு விட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பகல் 12 மணிக்கு திருச்செந்தூரில் பகல் உணவு வழங்கப்படும். கடல், நாழிக்கிணறு ஆகியவற்றில் நீராடிய பிறகு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்லப்படுவார்கள். சாமி தரிசனத்திற்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு இரவு மதுரை வந்து உணவு சாப்பிட்ட பிறகு அங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
4ம் நாள் -
காலை 8 மணிக்கு மதுரையில் காலை உணவு சாப்பிட்டு விட்டு, பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு தரிசனம் முடிந்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு சென்னையில் சுற்றுலாத்துறை வளாகத்தில் வந்து பயணிகள் இறக்கி விடப்படுவார்கள்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு இந்த பயணம் நிறைவடையும். வால்வோ, ஏசி, ஏசி அல்லாதது என மூன்று வகையான வாகனங்களில் இந்த டூர் பயணம் உண்டு. இதில் உங்களின் வசதிக்கு ஏற்ப பஸ்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த டூர் பேக்கேஜிற்கு ஒரு நபருக்கு ரூ.9000 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. பஸ் கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்தும் இந்த கட்டணத்திற்குள் அடங்கும். தேர்வு செய்யப்படும் பஸ் வகை, குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து கட்டண தொகை மாறுபடும்.



Click it and Unblock the Notifications






