கார்த்திகை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, மாலை அணிந்து செல்லும் பக்தர்களும், சபரிமலை ஐயப்பனும், பூஜைகளும், பக்தி பாடல்களும் தான்! இந்த புனிதமான மாதத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் மாலை அணிந்து சபரிமலையில் வீற்றிருக்கும் அய்யன் ஐயப்பனை காண ஓடோடி வருவார்கள். ஆனால், ஒரு மண்டலம் இருக்க வேண்டிய விரதம் எல்லாம் இப்போது ஓரிரு நாட்களாக குறைந்து விட்டது. காரணம், நமக்கு பல விஷயங்கள் தெரியாமலே போய்விட்டன.

ஆம்! சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, எத்தனை நாட்கள் விரதமிருப்பது நல்லது, பூஜை செய்வது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்வோம்!
41 நாட்கள் விரதமிருப்பது சாலச் சிறந்தது
அற்புதமான கார்த்திகை மாதம், அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது. ஒரு மாதத்தின் பிறப்பை, இப்படிக் கொண்டாட்டமாக, குதூகலமாக, பக்திசிரத்தையாகச் செய்த விந்தை, ஐயப்ப சுவாமிக்கே உரியது. ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமேயானது! பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சாலச்சிறந்தது. இதன்போது நாள், கிழமை பார்க்க வேண்டியது இல்லை. குறைந்த பட்சம் 41 நாட்கள் விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையைத் துவங்க வேண்டும்.

துளசிமணி அல்லது ருத்திராட்சை மாலை அணிய வேண்டும்
துளசிமணி அல்லது ருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினை இணைத்து பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோயில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும். மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசிபெற வேண்டும்.
இருமுறை குளித்து சாமியை வணங்க வேண்டும்
நீலம், கருப்பு காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் அணிய இயலாவிட்டாலும் பஜனையில் கலந்து கொள்ளும் போதும் யாத்திரையின் போதும் முழுவதும் கண்டிப்பாக வண்ண ஆடைகளை அணிவது அவசியம். காலை, மாலை இருவேளைகளிலும் (சூரிய உதயத்திற்கு முன்பும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும்) குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும்.

வார்த்தைக்கு வார்த்தை 'சாமி சரணம்' சொல்லி பழகுகுங்கள்
தினமும் ஆலய வழிபாடும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டுக் கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தல் பேரின்பம் நல்குவதாகும். பிரம்மச்சாரிய விரதத்தை ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிப்பது தலையாய விரதமாகும். மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், லாகிரி வஸ்துக்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். மற்ற ஐயப்பன்மார்களிடம் பேசும்போது "சாமி சரணம்'' என்று தொடங்கி பின் விடைபெறும் போது "சாமி சரணம்'' எனச் சொல்ல வேண்டும்.
ஐயப்பா, மாளிகைபுறம் என்று அழையுங்கள்
பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை "ஐயப்பா'' என்றும் பெண்களை "மாளிகைபுறம்'' என்றும் சிறுவர்களை "மணிகண்டன்'' என்றும் சிறுமிகளைக் "கொச்சி'' என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும். எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து, அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்து புறப்பட வேண்டும்.

கன்னி சாமி இருமுடியை இறக்கி வைக்க கூடாது
இருமுடி கட்டு பூஜையை தன் வீட்டிலோ, குருசாமி வீட்டிலோ கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும் முன்பு விடலைக்காய் ஒன்றை வீட்டின் முன் அடித்துவிட்டு "சுவாமியே சரணம் ஐயப்பா'' என்று சரணம் விளித்து புறப்பட வேண்டும். கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட திகதியிலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும்வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.
இந்த பஸ்மம் மிகவும் முதன்மையானது
பம்பையில் சக்தி பூஜையின் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்தடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்மம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
கன்னி பூஜை செய்வது சிறப்பு
யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் "கன்னி பூஜை'' நடத்த வேண்டும். சபரிமலைக்கு இருமுடி கட்டு ஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். வீட்டின் கிழக்குப்பாகத்தில் பந்தல் அமைக்கவேண்டும். பந்தலை அலங்கரித்து நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தில், அய்யப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர் சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
கூட்டமாகவோ, குடும்பத்தினருடனோ பூஜை செய்ய வேண்டும்
அய்யப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும். கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும். அய்யப்பனுக்கு தீபாராதனை தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும். அனைத்து அய்யப்பன் மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான அய்யப்ப பூஜை ஆகும். தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த பூஜையை நடத்தலாம்.

மாலை அணியும் பக்தர்கள் தவிர்க்க வேண்டியவை ?
· யாத்திரை நாட்களில் கோபம், துன்பம் போன்ற தீய உணர்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இதனால் ஆன்மீகம் மற்றும் உடல் ஆரோக்கியம் முழுமையடையும்.
· காலணிகளை பொதுவாக அணியக் கூடாது. எனினும், அலுவலகக் கட்டுப்பாட்டின் காரணமாக காவி உடை அணிய முடியாமல், காலணி அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால், அவற்றை தாராளமாக அணியலாம்.
· உறங்கும் போது, தலையணை அல்லது மெத்தை போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. புதிதாக ஒரு பாய் அல்லது போர்வை வாங்கி, அதனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகலில் உறங்குவதை தவிர்க்க வேண்டும். காலணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
· மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், விரத காலத்தில் அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இது ஆன்மிக வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்தும்.
· களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதை யூட்டும் பொருட் கள், புகைப் பிடித்தல் தவிர்க்க வேண்டும்.
ஐயப்பன் மாலை கழற்றும் முறை
மாலை கழற்றும் முறை பல விதங்களில் சொல்லப்படுகிறது. பொதுவாக, சபரிமலை யாத்திரை முடிந்து வீடு திரும்பிய பின்னர் குருசாமியிடம் ஆலோசித்து மாலையை கழற்ற வேண்டும். சிலர், மாலையை கழற்றும் முன்பு ஐயப்பன் கோயிலுக்கு சென்று மாலையை அர்ப்பணிக்கின்றனர். மாலையை கழற்றும் போது, ஐயப்பனை மனதில் நினைத்து நன்றி கூறி கழற்ற வேண்டும்.
அந்த கலியுக வரதனின் அருள் நம் அனைவர்க்கும் கிடைக்கும் அய்யனை பிரார்த்திப்போம்!
Best Regards,



Click it and Unblock the Notifications






