தைப்பூசம், குடியரசு தினம், சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் இந்த வாரம் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறையில், சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் அனைவரும் கட்டாயம் தங்கள் சொந்த ஊர்கள் நோக்கி சென்று விடுவார்கள். போக்குவரத்து நெரிசலே இல்லாத சென்னையை பார்ப்பதற்கும், கூட்டமே இல்லாத சென்னையின் அழகான சுற்றுலாத் தலங்களை கண்டு களிப்பதற்கும் இது தான் சரியான சான்ஸ். இந்த 4 நாட்கள் விடுமுறையில் நீங்கள் சென்னையில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட் இதோ!
மாமண்டூர் காடுகள்
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் பைக் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும். முற்றிலும் நகர வாழ்க்கையின் பரபரப்பான சூழலில் சுழன்று கொண்டிருக்கும் சென்னை நகர வாசிகளுக்கு இந்த இடம் ஒரு வரப்பிரசாதம் தான்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
காஞ்சிபுரத்தில் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அழகிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 40,000 வெவ்வேறு வகையான பறவைகளுக்கு பிரபலமான இடம்பெயர்வு இல்லமாகும். பாரிங்டோனியா சதுப்புநிலங்கள், செழுமையான மிதக்கும் வாழ்விடங்கள், பரந்த நெல் வயல் போன்ற அழகிய சூழலுக்கு இடையே அமர்ந்து, திரிந்து, பறந்துக் கொண்டிருக்கும் வண்ணமயமான பறவைகளை கண்டு ரசிக்க நீங்கள் இங்கே வருகை தர வேண்டும்.
மகாபலிபுரம்
7 ஆம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களுக்காக அறியப்பட்ட மகாபலிபுரம், சென்னைக்கு அருகில் 5௦ கிமீ தொலைவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும். கடற்கரை கோயில், பஞ்ச ரதங்கள், கங்கையின் ஆலம்பாறை கோட்டை, புலி குகை, மகாபலிபுரம் கடற்கரை மற்றும் அர்ஜுனன் பெனன்ஸ் ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். சென்னையிலிருந்து உள்ளூர், தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் டாக்ஸி மூலம் மகாபலிபுரத்தை அடையலாம்.

புதுச்சேரி
சென்னையிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் செல்லும் வார இறுதி சுற்றுலாத் தலம் இந்த புதுச்சேரி நகரம் தான்! புதுவையில் உள்ள இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் வசீகரிக்கும் கலவையானது ஆண்டு முழுவதும் எல்லையற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. புதுவைக் கடற்கரை, பிரஞ்சு பாணி வீடுகள், துடிப்பான கஃபேக்கள், அமைதியான சூழல், பல்வேறு தேவாலயங்கள், கோவில்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என புதுவையில் பொழுதைக் கழிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. சென்னையிலிருந்து 13௦ கிமீ அமைந்துள்ள இந்த நகரத்தை 2 அல்லது 3 மணி நேர பயண தூரத்தில் அடைந்து விடலாம். புதுவைக்கு செல்ல இரண்டு சாலை வழிகள் உள்ளன, ஒன்று பைபாஸ் மற்றொன்று இ.சி.ஆர் ஆகும்.
நாகலாபுரம்
கம்பீரமான மலைகள், பசுமை மற்றும் சலசலக்கும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட இந்த இடம், நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுத்து, குடும்பத்துடன் சில அமைதியான நாட்களைக் கழிக்க ஏற்றது. சென்னையிலிருந்து மிகவும் உற்சாகமான வார விடுமுறைகளில் ஒன்றான நாகலாபுரம் நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. ஸ்ரீ வேதநாராயண ஸ்வாமி கோயில், ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர ஸ்வாமி கோயில், கைலாசகோனா நீர்வீழ்ச்சி, உப்பலமடுகு நீர்வீழ்ச்சி, குர்ரம்கொண்டா கோட்டை ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

தடா/ உப்பலமடுகு
தடா நீர்வீழ்ச்சி உப்பலமுடுகு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதையா மண்டேலில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும். சென்னைவாசிகள் பலரும் தடா நீர்வீழ்ச்சி பற்றி அறிந்திருப்பார்கள். எது எப்படி இருந்தாலும் சென்னையிலிருந்து தடாவிற்கு பைக்கில் செல்வது ஒரு அருமையான யோசனை.
பிச்சாவரம்
நீங்கள் மகாபலிபுரம், புதுச்சேரி பயணத்தை சற்றே கொஞ்சம் தொடர்ந்தால் மிகவும் அழகிய இடமான பிச்சாவரத்தை அடையலாம். சென்னையை சுற்றியுள்ள இளைஞர்களும், புதியதாக திருமணமான இணைகளும் அடிக்கடி வருகை தரும் இடம் பிச்சாவரம். இங்கு செல்வது மிக எளிது என்பதாலும், இயற்கை விரும்பிகளுக்கு தனிமையுடன் கூடிய நல்ல அமைதியும் கிடைக்கும் என்பதாலும், நீண்ட நேர பைக் ரைடு மற்றும் லாங்க் டிரைவ் போக வழிவகுக்கும் என்பதாலும் இந்த இடம் அதிகம் விரும்பப்படுகிறது. பாண்டிச்சேரியில் இருந்து 66 கி.மீ தொலைவில் இருக்கும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள். இந்தியாவிலேயே இவ்வகை மாங்க்ரோவ் காடுகள் மேற்கு வங்காளத்திலும் தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தை நாம் மிஸ் பண்ணலாமா?

திருப்பதி
இந்த இடத்திற்கு அறிமுகமே தேவையில்லை அல்லவா? ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி, நாட்டின் மிகவும் பிரபலமான யாத்திரைத் தலங்களில் ஒன்றான வெங்கடேஸ்வரா கோயிலுக்காக அறியப்படுகிறது. நீங்களும் திருப்பதி சென்று நாள் ஆகிவிட்டது என்று நினைக்குறீர்கள் என்றால், உடனே திட்டமிடுங்கள். கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து விட்டு மன நிறைவோடு வீடு திரும்புங்கள். சென்னையிலிருந்து திருப்பதிக்கு ரயில் அல்லது பேருந்து மூலம் எளிதில் அணுகலாம்!
மேலும் ஸ்ரீகாளஹஸ்தி, க்ரோக்கடைல் பார்க், டைகர் பார்க், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, பல்வேறு தீம் பார்க்குகள், வேலூர், நெல்லூர் ஆகியவையும் நல்ல வார இறுதி விடுமுறை யோசனைகளாகும்.



Click it and Unblock the Notifications





